Monday

வ.உ.சிதம்பரனாரின் அரசியல் பெருஞ்சொல் - 5

பிராணமரும் பிரமணரல்லாதாரும்

‘பிராமணரும் பிராமணரல்லாதாரும்’ என்று கூறும்போது, யான் முக்கியமாகச் சென்னை மாகாணப் பிராமணரையும் பிராமணரல்லாதாரை யுமே குறிக்கிறேன். ‘பிராமணரல்லாதார்’ என்னும்போது முகமதியர்கள், இந்தியக் கிறிஸ்தவர்கள், தாழ்த்தப்பட்ட ஹிந்துக்கள், தாழ்த்துகின்ற ஹிந்துக்கள் என்னும் நான்கு வகுப்பினர்களையும் குறிக்கின்றேன்.

பிராமணர்களுக்கும் பிராமணரல்லாதார்களுக்கும் ஏற்பட்டுள்ள ஒற்றுமை யின்மையும், பகைமையும் வளர்ந்து இப்போது துண்டுபட்டுப் பொருள் படியான நிலைமை (Breaking point) க்கு வந்துவிட்டது. உண்மைத் தேசாபிமானிகள் இப்போது விரைந்து முன்வந்து பிராமணர்களுக்கும் பிராமணரல்லாதார்களுக்கும் ஏற்பட்டுள்ள, ஒற்றுமையின்மைக்கும் பகைமைக்குமுரிய உண்மைக் காரணங்களைக் கண்டுபிடித்து ஒழிக்காத வி­யத்தில், நாம் சுய அரசாட்சி என்ற பேச்சையும் கூட விட்டுவிடும்படியான நிலைமை வெகுவிரைவில் ஏற்பட்டுவிடுமென்று யான் அஞ்சுகிறேன்.

நமது தேசத்தின் வட மாகாணங்களில் ஹிந்துக்களுக்கும் முகமதியர் களுக்கும் ஏற்பட்டுள்ள பகைமையையும் சண்டையையும் நீக்கி ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டுமென்று நமது மாகாணத்திலுள்ள சிலர் பேசிக் கொண்டிருக் கின்றனர். என்ன வெட்கக்கேடு! நமது மாகாணத்தில் நம்முடன் வசித்துவரும் பிராமணருக்கும் பிராமணரல்லாதாருக்கும் ஏற்பட்டிருக்கின்ற ஒற்றுமை யின்மையையும் பகைமையையும் நீக்கி அவ்விரு வகுப்பினர்களுக்கும் ஒற்றுமை உண்டுபண்ண மாட்டாதார் பஞ்சாபு மாகாணத்திலுள்ள முகமதியர் களுக்கும் ஹிந்துக்களுக்கும் ஏற்பட்டுள்ள பகைமையையும் சண்டைகளை யும் நீக்கி அவ்விரு வகுப்பினருள்ளும் ஒற்றுமையை உண்டாக்கப் போகின்றனராம்! இது புதுமையிலும் புதுமை.

பிராமணருக்கும் பிராமணரல்லாதாருக்கும் ஏற்பட்டுள்ள சண்டைகளை உண்டு பண்ணுகின்றவர் இராஜாங்கத்தாரே என்றும் சுதேச மன்னர்கள் அரசாட்சிக்குட்பட்ட நாடுகளில் ஜாதிச்சண்டைகள் இல்லை என்றும் நம் தேசத்துக்குச் சுய அரசாட்சிக்குட்பட்ட நாடுகளில் ஜாதிச்சண்டைகள் இல்லை என்றும் நம் தேசத்துக்குச் சுய அரசாட்சி வந்துவிட்டால் ஜாதிச் சண்டைகள் எல்லாம் நீங்கிவிடும் என்றும் சிலர் சொல்லுகின்றனர். இந்த மூன்றும் முழுப் பொய். 

பிராமணர் -பிராமணரல்லாதார் சண்டைகளுக்குக் காரணம் ஒன்றுமே இல்லையெனின் இராஜாங்கத் தாராலோ, மற்றவராலோ, அவர்களுக்குள் சண்டையை உண்டு பண்ணமுடியாது. சுதேச மன்னர்கள் அரசாட்சிக்குட்பட்ட நாடுகளிலும் ஜாதிச்சண்டைகள் இல்லாமல் இல்லை. 

அவற்றிலும் தென்னாடுகளில் பிராமணர்-பிராமணரல்லாதார் சண்டைகள் இருக்கின்றன. சுய அரசாட்சிக்கு முதல்வழி நமது தேசத்தினர்களெல்லாம் ஒற்றுமைப்படுதல், உண்மை அவ்வாறிருக்க, சுய அரசாட்சி வந்துவிட்டால் நம்  தேசத்தினர்களுள் ஒற்றுமை உண்டாய் விடும் என்று சொல்வது நீந்தக் கற்றுக் கொண்டால் நீரில் இறங்கலாம் என்பது போலாம். ஒருவன் நீரில் இறங்காமல் நீந்தக் கற்றுக் கொள்ளப் போவதில்லை. அதுபோல நம் தேசத்தார் களெல்லாம் ஒற்றுமைப்படாமல் நாம் சுய அரசாட்சி அடையப் போவதில்லை.

தேசாபிமானிகளென்றும், தேசத் தலைவர்களென்றும் சொல்லப்படும் பிராமணர்களிற் சிலர் தமது பேச்சுக்களிலும், எழுத்துக்களிலும், நடக்கைகளிலும் பிராமணர் -பிராமணரல்லாதார் சண்டைகள் இங்கு இல்லாதது போலக் காட்டிக்கொண்டு வருகின்றனர். இவர் இவ்வாறு செய்வதின் நோக்கம். இவர் ஜாதியாருக்கும் மற்றை ஜாதியார்களுக்குமுள்ள சண்டைகளைப் பிற மாகாணத் தேசாபிமானிகளும் தேசத் தலைவர்களும் அறிவாளிகளாயின், தம்மை மதிக்கமாட்டார்கள் என்ற நினைப்போ, அல்லது அச்சண்டை களுக்குரிய காரணங்களை விசாரித்து நீக்கத் தலைப்படுவார்களாயின், நம் ஜாதியார்களே இச்சண்டைகளுக்குக் காரணஸ்தர்கள் என்பதை அறிந்து கொள்ளுவார்கள் என்ற அச்சமோ தெரியவில்லை. இவர் நோக்கம் எதாயினும் ஆகுக. நமது தேச ஒற்றுமைக்கு ஒரு பெரு நோயாய்த் தோன்றியுள்ள பிராமணர் -பிராமணரல்லாதார் சண்டைகளை ஒழிப்பதற் குரிய வழிகளை நாம் சிந்திப்போமாக.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்

என்றார் நம் பெரியார். பிராமணர் - பிராமணரல்லாதார் சண்டை நோயோ அளவு கடக்கும் நிலைமைக்கு வந்துவிட்டதென்பது இம் மாகாணத்திலுள்ள ஒவ்வொரு ஆண்மகனுக்கும் பெண் மகளுக்கும் நேரில் தெரிந்த வி­யம். ஆதலால் அச்சண்டைகளைப் பற்றியோ, அவற்றின் தற்கால நிலைமை களைப் பற்றியோ நாம் ஆராய வேண்டிய அவசியம் இல்லை. அச்சண்டை நோயின் முதல் (காரணங்கள்) கூடப் பிராமணரல்லாதார்களிற் பலர்க்கும், பிராமணர்களிற் சிலர்க்கும் நன்றாகத் தெரியும். அக்காரணங்களைத் தெரியாமல் இருக்கிற பிராமணரல்லாத சிலரும் பிராமணர் பலரும் பிற மாகாணத் தேசாபிமானிகளும் தேசத் தலைவர்களும் தெரிந்து கொள்ளும் பொருட்டு இங்குக் கூறுகின்றேன்.

1. பிராமண ஜாதியார்களெல்லாம் மேலானவர்களென்றும், மற்றை ஜாதியார்களெல்லாம் கீழானவர்களென்றும் தங்கள் சொல்லாலும் செயலாலும் காட்டி மற்றை ஜாதியார்களை இழிவுபடுத்தி வருகிறார்கள்.

2. பிராமணர்களே பிராமணரல்லாதார்கள் கடவுளை அடைவதற்குரிய வழியைக் காட்டும் குருமார்களென்றும், பிராமணரல்லாதார்களின் குடும்பங் களில் நிகழும் சகல மங்கல அமங்கலச் சடங்குகளையும் நடாத்துவிப்பதற் குரிய ஆச்சாரியார்கள் என்றும் கூறிப் பிராமணரல்லாதார்களின் பொருள்களை அவர்கள் தாய் வயிற்றில் உற்பவித்த காலம் முதல் அவர்கள் இறக்கும் வரையிலும், அவர்கள் இறந்த பின் அவர்கள் மக்கள் உயிரோடிருக் கும் காலம் முடியும் வரையிலும் கவர்ந்து கொண்டு வருகிறார்கள்.

3. சர்க்கார் உத்தியோகங்களையும் ஸ்தல ஸ்தாபன உத்தியோகங் களையும் பொது ஸ்தாபன உத்தியோகங்களையும் வகிப்பதற்குரிய அறிவும் திறமையும் உரிமையும் தங்களுக்கே உண்டென்று சொல்லி அவ்வுத்தி யோகங்களையயல்லாம் தாங்களே கொண்டு அவற்றின் சம்பளம், அதிகாரம், செல்வாக்கு முதலியவற்றை எல்லாம் அபகரித்து வருகின்றார்கள் பிராமணர்கள்.

இம்மூன்றும் பிராமணர் - பிராமணரல்லாதார் சண்டை நோயின் முதல்கள் (காரணங்கள்). இக்காரணங்களை ஒழிப்பதற்கு வழிகளை ஆராய்வோமாக.

முதலாவது காரணம் எப்படி ஏற்பட்டதென்றால், பிராமணரல்லாதார் களாகிய தமிழர்களின் முன்னோர்கள் பிராமணர்களின் முன்னோர்களாகிய ஆரியர்களை ‘மிலேச்சர் என்றும், யாகத்தின் பெயரால் கண்டவற்றை யயல்லாம் தின்பவர்களென்றும் நினைத்தவற்றையயல்லாம் செய்பவர் களென்றும், சொல்லியும் நிகண்டு முதலிய நூல்களில் எழுதி வைத்தும், அவர்களைத் தொடாமலும் அவர்கள் தொட்ட பொருள்களைக் கொள்ளாமலும், அவர்களைத் தொட நேர்ந்த போது குளித்தும் அவர்களை இழிவுபடுத்தி வந்தார்கள். அவ்விழிவை ஒழிப்பதற்கு வழி என்ன என்று அவ்வாரியர்கள் ஆலோசனை செய்தார்கள்.

நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும் தன்னை

நிலைக்கலக்கிக் கீழிடு வானும் - தான்; தன்னை

மேன்மேல் உயர்த்து நிறுப்பானும் தன்னைத் 

தலையாகச் செய்வானும் தான்

என்ற உண்மையைக் கண்டார்கள்.

உடனே தங்களைப் பிராமணர்கள் என்றும், மற்றைத் தமிழர்களெல்லாம் சூத்திரர்கள் என்றும், சொல்லவும் எழுதவும் தலைப்பட்டார்கள் ; அவ்வாறு தாங்கள் மேலான ஜாதியார் என்றும், தமிழர்களெல்லாம் கீழான ஜாதியார்கள் என்றும் நடக்கையிலும் காட்டினார்கள். சிறிது காலத்தில் அவர்கள் மேலான ஜாதியாராகவும், தமிழர்கள் கீழான ஜாதியார்களாகவும் அறியார் பலரால் கருதப்படமாட்டார்கள். தமிழர்களின் முன்னோர்களால் தங்களுக்கு ஏற்பட்ட இழிவுநோய் தாங்கள் மேலான ஜாதியார்கள் என்று கூறிய மருந்தால் நீங்கிப் போயிற்று. அந்த மருந்தையே தமிழர்கள் கைக்கொள்ளின் அவர்களுக்கு இப்போது ஏற்பட்டிருக்கிற நோய் நீங்கிப்போம். அதாவது பிராமணரல்லாத ஜாதியர்களில் ஒவ்வொருவரும் தாம் பிராமணருக்கு மேற்பட்ட ஜாதியாரென்று கருதிப் பிராமணர் மற்றை ஜாதியார்களை நடத்துகிறது போலப் பிராமணர் களை நடத்தி வருவாராயின், தம் ஆரோப இழிவு நோய் போய்விடும். இந்நோய் முதலைப் போக்குவதற்கு வேறு மருந்து தேட வேண்டுவதில்லை.

இரண்டாவது காரணம், மேற்கண்டபடி தாங்கள் மேலான ஜாதியார்கள் என்று கொண்ட கொள்கை அழியாதிருக்கும் பொருட்டு பிராமணர்கள் மற்றை ஜாதியார்களுக்கு விதித்த அபராதத் தண்டனை. அத்தண்டனையை மாற்றிக் கொள்வதற்குரிய அதிகாரம் பிராமணரல்லாதார்கள் கையிலேயே இருக்கிறதைக் கண்டுபிடித்து நம் திருவாளர் ஈ.வெ.இராமசாமி நாயக்கர வர்கள் பிராமணரல்லாதார்களுக்கு கூறி அதனை உபயோகிக்கும்படி செய்து கொண்டு வருகிறார்கள். அவ்வதிகாரத்தைப் பிராமணரல்லாதார்கள் ஊக்கத்துடன் உறுதியாகச் செலுத்தி தங்கள் அபராதத் தண்டனையை மாற்றிக் கொள்வார்களென்று நம்புகிறேன்.

பிராமணர்-பிராமணரல்லாதார் சண்டைக்குரிய மூன்றாவது காரணத் தைப் போக்குவதுதான் மிகக் கஷ்டமான காரியம். இக்காரண வி­யத்தைப் பற்றித் தேசத் தலைவர்களென்று சொல்லப்படுகிற பிராமண சகோதரர்களில் சிலர் பேசுகிற பேச்சுக்களைப் பார்க்கும் போது மிக வியப்புத் தோற்றுகின்றது. இராஜாங்க உத்தியோகங்களைக் கவருவதற்காக இராஜாங்கத்தாரோடு சேர்ந்து அவரைப் பலப்படுத்துகின்ற (பிராமணரல்லாதார் அடங்கிய) ஒரு கட்சியாரை ஒழிப்பதற்காக காங்கிரஸ்காரர்கள் இரட்டையாட்சிக்கு உதவிபுரிய வேண்டியவர்களாயிருக்கிறார்கள் என்று ஒரு பிராமணத் தலைவர் சில தினங்களுக்கு முன் பேசியிருக்கிறார். 

ஆ! என்ன ஆச்சரியம்! நமது தேசத்தில் நூறு பேர்களுக்கு மூன்று பேர்களாயிருக்கின்ற நம் பிராமண சகோதரர்கள் நமது தேசத்து இராஜாங்க உத்தியோகங்களில் நூற்றுக்குத் தொண்ணூற் றேழு வீதமும் அவ்வுத்தியோகங்களில் இந்தியர்கள் பெறும் சம்பளத் தொகையில் நூற்றுக்குத் தொண்ணூற்றேழு வீதமும் (இக் கணக்குச்சிறிது ஏறத்தாழ இருக்கலாம்) அடைந்து வருகிற போது, பிராமணரல்லாதார்கள் இராஜாங்க உத்தியோகங்களைக் கவருவதற்காக இராஜாங்கத்தாரோடு சேர்ந்து அவரைப் பலப்படுத்துகின்றார்கள் என்று காங்கிரஸ் தலைவர் என்னும் பிராமணர் ஒருவர் பேசுவராயின், மற்றைப் பிராமணர்கள் என்னென்ன பேசத் துணிய மாட்டார்கள்? 

பிராமணர்கள் நம் தேசத்தில் சிறு தொகையினரா யிருத்தலால், தம்முடைய உரிமைகளை மற்றை ஜாதியார்கள் கைப்பற்றிக் கொள்வார்கள் என்ற அச்சத்தால், சுய அரசாட்சியை உள்ளூர விரும்ப மாட்டார்கள் என்றும், அவர்கள் சுய அரசாட்சிக்குப் பாடுபடுவது வோல் நடிப்பதெல்லாம் தம் உறவினருக்கும் ஜாதியாருக்கும் இராஜாங்க உத்தியோகங்கள் வாங்கிக் கொடுக்கும் பொருட்டே என்றும் பிராமண ரல்லாதார் சொல்வது உண்மைதானோ என்றும் யானும் இப்பொழுது ஐயம் உறுகின்றேன்.

இராஜாங்க உத்தியோகங்களும், ஸ்தாபன உத்தியோகங்களும் பொது ஸ்தாபன உத்தியோகங்களும், நம் தேசத்திலுள்ள ஒவ்வொரு ஜாதியாருக்கும அந்தந்த ஜாதியாரின் எண்ணிக்கை விகிதப்படி பகிர்ந்து கொடுக்கப் பட்டாலன்றி, நம் தேசத்தாருள் ஒற்றுமை உண்டாகப் போவதேயில்லை யயன்பதும், நமக்குள் ஒற்றுமை உண்டாகாமல் நாம் சுய அரசாட்சி அடையப் போவதே இல்லையயன்பதும் மனித அறிவுடைய எவர்க்கும் தெளிவாக விளங்கத்தக்கவை. இவ்வுண்மையை மாறாக பேசுகின்றவர் யாவராயினும் மனித அறிவில்லாதவர், அல்லது ‘பகலை இரவென்று கூறும் பாதகர்’ என்று நாம் கொள்ளக் கடவோம். பிராமணர்களும் பிராமணரல்லாதார்களும் ஒத்துழைப்பின் அவ்விரு வகுப்பினருள்ளும் இப்போது நிலவும் பகைமையை விரைவில் ஒழித்து, ஒற்றுமையை எளிதில் ஏற்படுத்திவிடலாம். இவ்வொற்றுçயை உண்டு பண்ணுவதற்காக பிராமணரல்லாதார்களுடன் ஒத்துழைக்கப் பிராமணர்கள் முன் வரவில்லையானால் மேல் ‘வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்’ என்னும் தலைப்பின் கீழ் யான்கூறியபடி இப்பொழுது பிராமணர்கள் வகித்துக் கொண்டிருக்கிற உத்தியோகங்களில் பிராமண ஜாதியார்களின் எண்ணிக்கை விகிதப்படி அவர்களுக்குரிய உத்தியோகங்களைத் தவிர மற்றைய ஜாதியார்களுக்கு அவரவர் எண்ணிக்கை விகிதப்படி கொடுக்க வேண்டுமென்று சட்டம் ஒன்று பிராமணரல் லாதார் சட்டசபையில் கொண்டு வந்து நிறைவேற்றி அச்சட்டத்தை ஊர்ஜிதத்துக்குக் கொண்டுவரும்படி இராஜாங்கத்தாரை வற்புறுத்த வேண்டும்.

இராஜாங்க உத்தியோகங்கள் முதலியவற்றில், தாழ்த்தப்பட்டிருக்கிற ஜாதியார்களின் எண்ணிக்கை விகிதப்படி அவர்கள் அடைய வேண்டிய உத்தியோகங்களை அவர்களும், தாழ்த்துகின்ற ஜாதியார்களின் எண்ணிக்கை விகிதப்படி அவர்கள் அடைய வேண்டிய உத்தியோகங்களை அவர்களும், இந்தியக் கிறித்துவர்களின் எண்ணிக்கை விகிதப்படி அவர்கள் அடைய வேண்டிய உத்தியோகங்களை அவர்களும், முகமதியர்களின் எண்ணிக்கை விகிதப்படி அவர்கள் அடைய வேண்டிய உத்தியோகங்களை அவர்களும் அடையும் படி நாம் ஏற்பாடு செய்ய வேண்டும். 

அந்த ஏற்பாட்டைச் செய்வதற்கு இந்த நான்கு வகுப்புத் தலைவர்களும் ஒன்றுகூடி உத்தியோகங்களின் எண்ணிக்கையையும் அவற்றில் ஒவ்வொன்றன் சம்பளத் தொகை யையும் கணக்குப் பார்த்தும், அவ்வுத்தியோகங்களின் அதிகாரம், செல்வாக்கு முதலியவற்றைக் கவனித்தும், ஒவ்வொரு ஜாதியாருக்கும் இன்னின்ன உத்தியோகங்கள் கொடுக்கப்பட வேண்டுமென்று ஒரு பட்டி தயார் செய்ய வேண்டும். 

உத்தியோகங்களின் எண்ணிக்கை குறைந்தும், ஜாதிகளின் எண்ணிக்கை கூடியும் இருக்குமாயின், சற்றேறக்குறைய ஒரு தன்மையான பழக்க வழக்கங்களையும் உடைய இரண்டு மூன்று ஜாதிகளை ஒன்று சேர்த்து ஒரு ஜாதியாகக் கணக்கிட்டுக் கொள்ளலாம். ஒவ்வொரு ஜாதியார்களிலும் இன்னின்னார்க்கு இன்னின்ன உத்தியோகங்கள் கொடுக்கப்பட வேண்டு மென்ற வி­யத்தைத் தீர்மானிப்பதற்கு ஒவ்வொரு ஜாதியாரிலும் நடுவு நிலைமையுள்ள சிலரைத் தேர்ந்தெடுத்துப் பஞ்சாயத்துச் சபையாக கட்டுப் படாத உத்தியோக வேட்டைக்காரர்களை அந்தந்த ஜாதியிலிருந்து விலக்குதல் முதலிய காரியங்கள் செய்து பஞ்சாயத்தார் தீர்மானத்துக்குக் கட்டுப்பட்டு நடக்கும்படி செய்யலாம். இவ்வாறு சம்பள உத்தியோகங்களையும் கெளரவ உத்தியோகங்களையும் அந்தந்த ஜாதியார்களின் எண்ணிக்கை விகிதப்படி பகுந்து கொடுத்துவிட்டால், இப்பொழுதுள்ள ஜாதிச் சண்டைகளில் பெரும்பகுதி நீங்கிவிடும்.

பின்னர், ஒவ்வொரு ஜாதியாரும் மற்றை ஜாதியார்களிடமிருந்து அடைய விரும்பும் உரிமைகள் என்னென்னவென்பதற்கு அந்தந்த ஜாதிப் பஞ்சாயத்தார் மூலமாக ஒரு பட்டி தயார் செய்ய வேண்டும். 

பிற்பாடு, அவ்வுரிமைகளின் சம்மந்தமுள்ள பல ஜாதிப் பஞ்சாயத்தார்களும் ஒன்று கூடிப் பேசி இன்னின்ன உரிமைகள் இன்னின்ன ஜாதியார்களுக்கு யாதொரு நிபந்தனையும் இல்லாமல், அல்லது இன்னின்ன நிபந்தனைகளின் பேரில், கொடுக்கப்பட வேண்டுமென்று தீர்மானித்து முடிவு செய்து விளம்பரப்படுத்தி ஒவ்வொரு ஜாதியாருக்கும் ஏற்பட்டுள்ள உரிமைகளை அவரவர் அடைந்து அநுபவிக்கும்படி பல ஜாதிப் பஞ்சாயத்தார்களுக்கும் பார்த்துக் கொள்ளல் வேண்டும்.

இவ்வாறாக, பிராமணரல்லாதார்களில் அடங்கியுள்ள நான்கு வகுப்பினர்களும் தங்கள் தங்கள் ஜாதி உரிமைகளை வரையறுத்துப் பிரித்து அடைந்து அனுபவித்து ஒற்றுமையான பின்னர்ப் பிராமணர்களிடமிருந்து பிராமணரல்லாதார்களுக்கு வரவேண்டிய உரிமைகளை அடைவதற்கு வேண்டுவன செய்யலாம். 

நமக்குள் ஏற்பட்டுள்ள ஜாதிச் சண்டைகளும், மதச் சண்டைகளும் நீங்கி நமக்குள் ஒற்றுமை ஏற்படும் வரையில் நாம் சுய அரசாட்சி அடைய வேண்டுமென்று பேசுதலும், முயற்சித்தலும், ஆகாயக் கோட்டை கட்டவேண்டுமென்று பேசுதலும், முயற்சித்தலும் போலாம்.

இராஜாங்கத்துக்கு வரிகொடாமை முதலிய கீழ்ப்படியாமை (Civil disobedience) யைப் பற்றிச் சிலர் பேசுகின்றனர். ஒவ்வொரு ஜாதியாருக்கும் உரிய சிறு சிறு உத்தியோகங்களையும், உரிமைகளையும் கொடுப்பதற்குச் சம்மதியாமல் சண்டையிடுவோர், தேசத்தார் முழுவதும் ஒன்றுபட்டுச் செய்ய வேண்டிய வரிகொடாமை முதலியவற்றைப் பற்றிப் பேசுதலைப் பார்த்து நம்மை ஆள்வோரும், அவர்கள்இனத்தாரும், ஏனையோர்களும் நகைக்கின்றனர்.

இது வெறும் பேச்சு என்பதை அவர்களெல்லாம் அறியார்களென்று கருதுதல் எவ்வளவு பெரிய அறியாமை! இந்தியர்களெல்லாம், அல்லது இந்தியத் தலைவர்களெல்லாம், ஒன்றுபடும் வரையில் நாம் சுய அரசாட்சி அடையவேண்டுமென்று பேசுதலும், நாம் அடைய விரும்பும் சுய அரசாட்சி இத்தன்மைத்தாயிருக்க வேண்டுமென்று பேசுதலும், அந்த சுய அரசாட்சி அடைவதற்கு உரிய வழிகளைப் பற்றி பேசுதலும் வெறும் பயனற்ற பேச்சுக்கள். அவற்றைப் பற்றிப் பேச வேண்டும் என்று விரும்பினால் நம் தேசத்துப் பல மதத்தினர்களும், ஜாதியார்களும் அவரவர்கள் உரிமைகளை அடையும்படி செய்து நம் தேசத்தாருள் ஒற்றுமையை உண்டுபண்ணும் வேலை ஒன்றிலேயே உண்மைத் தேசாபிமானிகளெல்லாம் தங்கள் முழுக் கவனத்தையும் பலத்தையும் செலுத்த வேண்டுமென்று யான் பன்முறை நமஸ்கரித்துக் கேட்டுக் கொள்கிறேன். எனது தேசத்தினர்களாகிய உங்கள்பால் தெரியப் படுத்த வேண்டியவற்றை ஒருவாறு தெரியப்படுத்திவிட்டேன். இனி, நமது தேசத்தை ஆள்வோராகிய இராஜாங்கத்தார் (Government) க்குத் தெரியப்படுத்த வேண்டியவற்றைச் சுருக்கமாகச் சொல்லி என் பேச்சை முடித்துவிடுகிறேன்......5

Sunday

வ.உ.சி.யின் அரசியல் பெருஞ்சொல்-6

இராஜாங்கத்தார்க்குச் சில சொற்கள்

அறிகென் றறியான் எனினும்,  உறுதி

உழையிருந்தான் கூறல் கடன்

இந்தியர் தமது தேசத்துக்குச் சுயஅரசாட்சி வேண்டுமென்று விரும்பியதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு. ஒன்று தேசத்தார்களிற் பெரும்பாலார் வறுமையால் வாடுதல். மற்றொன்று தேச நீதிபதிகளிற் சிலர் செய்யும் கொடுஞ்செயல்கள், இவ்விரு காரணங்களும் பரிகரிக்கப்பட்டுவிட்டால், தேசத்திற்குச் சுய அரசாட்சி வேண்டும் என்பவரின் எண்ணிக்கை, ‘பஞ்ச பாண்டவர்களை யான் அறியேனா? கட்டில்கால் போல மூன்று பேர்’ என்று சொல்லி இரண்டு விரலைக் காட்டிப் பூமியில் ஒன்று எழுதி அதனை அழித்து விட்டனன் என்று கதைபோல் ஆய்விடும்.

ஜனங்களின் வறுமை

தேசத்திலுள்ள சுமார் முப்பத்திரண்டு கோடி ஜனங்களில் பசியால் உழன்று சாகின்றவர்கள் சுமார் ஒரு கோடி யயன்றும், அரை வயிறுக் கஞ்சியுடன் வருந்துகின்றவர்கள் சுமார் இரண்டு கோடியயன்றும், தொழில் கிடையாமல் திண்டாடுகின்றவர்கள் பல கோடியயன்றும் தேசாபிமானிகள் கணக்கிட்டுக் கூறுகின்றார்கள். அவர்களது அந்நிலைமைக்குக் காரணம் இராஜாங்கப் பரிபாலனக் குறைவு என்றுதானே யாரும் சொல்வர்?

அவர்கள் வறுமைத் துன்பத்தைப் போக்குவதற்கு இராஜாங்கத்தார் செய்யத் தக்கவை இரண்டு. ஒன்று இந்தியாவில் விவசாயத்துக்கு இதுவரையில் கொண்டுவரப்படாத மலைப்பக்க நிலங்களையும், ஏனைய தரிசு நிலங்களையும் விரைவில் விவசாயத்துக்கு கொண்டு வருவதற்காக ஆங்காங்கு இராஜாங்க விவசாயப பண்ணைகள் ஏற்படுத்தி வேலை கிடையாது திண்டாடும் ஜனங்களைக் கொண்டு விவசாயம் செய்வித்து அவர்களுக்குக் கூலி கொடுத்தல், தேசத்தில் எந்தெந்த இடத்தில் எந்தெந்த தொழில் செய்வதற்கு செளகரியங்கள் அமைந்திருக்கின்றனவோ, அந்தந்த இடத்தில் அந்தந்த தொழிலைச் செய்வதற்கு இராஜாங்கத் தொழிற்சாலைகள் ஏற்படுத்தி வேலை கிடையாது திண்டாடும் ஜனங்களைக் கொண்டு அத்தொழிற்சாலைகளில் தொழில் செய்வித்து அவர்களுக்குக் கூலி கொடுத்தல் மற்றொன்று.

இராஜாங்கத்தார் மேற்கண்டபடி விவசாயப் பண்ணைகளையும் தொழிற் சாலைகளையும் ஏற்படுத்தி வேலைகிடையாது திண்டாடும் இந்தியர்களுக் கெல்லாம் வேலை கொடுத்து அவர்கள் வறுமையை நீக்கினும், அவர்கள் மதுபானம் செய்ய வழியில்லாமற் செய்தாலன்றி அவர்களது வறுமை நீங்கப் போவதில்லை. அவர்கள் வறுமை நீங்காத வரையில் இராஜாங்கத்தாரையே குறை கூறுவர். அன்றியும், மது பானத்தால் இராஜாங்கத்தார் வரும்படி அடைந்துவருகிறதைப் பற்றி இராஜாங்கத்தாரை அறிவுடையோர்களெல்லாம் மிக மிக இழிவாகப் பேசி பழிக்கின்றனர். 

அவ்விழிவையும், பழிப்பையும் நீக்குவதற்காகவும் இராஜாங்கத்தார் மது பானத்தைத் தேசத்தை விட்டு அடியோடு ஒழிக்கக் கடமைப்பட்டிருக்கின்றனர்.

சில நீதிபதிகளின் கொடுஞ்செயல்கள்

1. இப்பொழுதுள்ள சப்மேஜிஸ்டிரேட்களிற் பலரும் டிவி­னல் மேஜிஸ்டிரேட்டுகளிற் சிலரும் போலீஸ் உத்தியோகஸ்தர்களுக்கு அடிமை களாயிருக்கின்றனர். தமது கோர்ட்டில் சப் இன்ஸ்பெக்டரைக் கண்டால் நடுங்குகின்றனர். அவ்வச்ச நடுக்கங்களின் பயன்போலீஸ் உத்தியோகஸ் தரால் சார்ஜ் செய்யப்படும் கேஸ்களில் பெரும்பாலானவற்றில் எதிரிகள் தண்டனையடைதலும், தண்டனை உறுதி செய்யப்படுதலும், செ­ன்ஸ் கோர்ட்டுக்கு கமிட் (commit) செய்யப்படுதலுமே.

2. போலீஸ் உத்தியோகஸ்தரால் சார்ஜ் செய்யப்படாத கேசுகளிற் பெரும்பாலான ‡ அவை எத்தன்மையனவாயிருந்தாலும் சரி ‡ கிரிமினல் புரோசீஜர் கோடு 203 வது பிரிவுப்படியும் 253, 209 வது பிரிவுகளின்படியும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

3. போலீஸ் உத்தியோகஸ்தரால் சார்ஜ் செய்யப்பட்ட கேசுகளில் அப்போலீசு உத்தியோகஸ்தர்கள் அனுமதி தந்தாலன்றி வக்கீல்கள் பிராஸிக்கூ­ன் (வாதி) பக்கத்தில் ஆஜராகக் கூடாதென்று அப்போலீஸ் உத்தியோகஸ்தர்கள் வற்புறுத்துகின்றனர். அவ்வற்புறுத்தலை மேஜிஸ்டிரேட்டுகள் அங்கீகரிக் கின்றனர். அதனால் நேரிடும் அநீதிக்கு அளவேயில்லை. உதாரணமாக வாதியால் குற்றம் சாட்டப்பட்டவர்களில் கொடுமை அதிகம் புரிந்த சிலரை விட்டுவிட்டுக் கொடுமை புரிந்த சிலரை மாத்திரம் சார்ஜ் செய்கின்றனர்; வாதியார் கோரப்பட்ட முக்கியமான சாட்சிகளை கோருகின்றனர் போலீஸ் உத்தியோகஸ்தர். இந்த நிலைமையில் வாதி என்ன செய்வது? வாதி பக்கத்துக்கோ போலீஸ் உத்தியோகஸ்தர் அனுமதியின்றி வக்கீல்கள் ஆஜராகக் கூடாது. தாம் விட்டுவிட்ட எதிரிகளையும் சாட்சிகளையும் சேர்ப்பதற்குப் போலீஸ் உத்தியோகஸ்தர் சம்மதிக்க மாட்டார். வாதி தன் கேசை இழக்க வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை. கிரிமினல் புரோசீஜர் கோடு 495 (1) பிரிவில் ஒரு கேசை விசாரணை செய்யும் மேஜிஸ்திரேட்டு எந்த மனிதனுக்கும் (வக்கீல் அல்லாதவனுக்குக் கூட அந்தக் கேசின்   பிராஸிக் கூ­ன் பக்கத்தை நடத்தும்படி) அனுமதி கொடுக்கலாம் என்று சொல்லப் பட்டிருக்கிறது. ஆனால் அவ்வதிகாரம்  போலீஸ் உத்தியோகஸ்தரின் அனுமதி யின்றி மேஜிஸ்டிரேட்டுகளால் செலுத்தப்படுவதில்லை.

4. எதிரியை ஜாமீன் பேரில் விடலாகாதென்று குறிக்கப்பட்டுள்ள குற்றங்களுக்காகப் போலீஸ்  உத்தியோகஸ்தரால் சார்ஜ் செய்யப்பட்ட கேஸ்களில எதிரியை ஜாமீன் பேரில் விட வேண்டுமென்று கிரிமினல் புரோசிஜீர் கோடு 497 வது பிரிவுப்படி மனுச் செய்யப்படுமானால், எதிரியை ஜாமீன் பேரில் விடலாமாவென்று போலீஸ் உத்தியோகஸ்தரிடம் மேஜிஸ்டிரேட்டுகள் கேட்கின்றனர். அவர் ‘விடலாம்’ என்றால், எதிரி ஜாமீன் பேரில் விடப் படுகிறான். ‘விடக்கூடாது’ என்றால், எதிரி ஜாமீன் பேரில் விடப்படுவதில்லை. போலீஸ் உத்தியோகஸ்தரைக் கேட்டுதான் எதிரியை ஜாமீன் பேரில் விடவேண்டுமென்று சில டிஸ்டிரிக்ட் மேஜிஸ்டிரேட்டுகள் சப் மேஜிஸ்டிரேட்டுகளுக்கு சுற்றத்தரவு (circular) பிறப்பித்திருக்கிறதாகத் தெரிகிறது. கிரிமினல் புரோசீஜர் கோடு 497 வது பிரிவுப்படி மேஜிஸ்டிரேட்டுகளுக்குக் கொடுக்கப்பட்ட யுக்தம் (ம்ஷ்விஉreமிஷ்லிஐ) போலீஸ்  கேஸ்களில் பெரும்பாலும் உபயோகிக்கப் படுவதில்லை. 

5. போலீஸ் உத்தியோகஸ்தரால் சார்ஜ் செய்யப்பட்ட செ­ன் கோர்ட்டு பரிசீலனைக் கேஸ்களில் சப்மேஜிஸ்டிரேட்கள் எதிரியை விடுதலை (Discharge) செய்வது அருமையினும் அருமை, கேஸின சாட்சியம் எவ்வளவு அற்பமாயிருந்தாலும் சரி, நம்பக்கூடாததாயிருந்தாலும் சரி எதிரி செ­ன்ஸ் கோர்ட்டுக்குக் கமிட்டி செய்யப்படுகிறான். அதனால் அவன் அநியாயமாக ஒன்றிரண்டு மாதம் சிறையில் இருப்பதுடன் செ­ன்ஸ் கோர்ட்டில் தன் கட்சியை நடத்துவதற்காகப் பெருந்தொகை செலவு செய்யும்படியாகவும் ஏற்படுகிறது. கிரிமினல் புரோசிஜர் கோடு 209 வது பிரிவு அநேகமாக அடிக்கப்பட்ட எழுத்து (Dead letter) ஆகவேயிருக்கிறது.

6. மேஜிஸ்டிரேட்டுகள் செ­ன்ஸ் கோர்ட்டுக்குக் கமிட்டி செய்யும் கேஸ்களில் எதிரியை ஜாமீன் பேரில் விடக்கூடாதென்று சில டிஸ்டிரிக்ட்டு மேஜிஸ்ட்ரேட்டுகள் சுற்றுத்தரவு விடுத்திருக்கிறதாகத் தெரிகிறது. இச்சுற்றுத் தரவால் கிரிமினல் புரோசீஜர் கோடு 496,497, 220 பிரிவுகள் அடிக்கப்பட்ட எழுத்து (Dead letter) ஆகிவிட்டன.

7. சர்க்கார் உத்தியோகஸ்தர்களில் சிலர் லஞ்சம் (Illegal gratification) வாங்குகிறார்கள் என்பது பலரும் அறிந்த ஓர் அந்தரங்க விசயம் (open secret). இப்பொழுதுள்ள சட்டப்படி அவ்வுத்தியோகஸ்தர்களைத் தண்டனைக் குக் கொண்டுவருவது மிகக் கஷ்டமான காரியம். ஏனெனில், லஞ்சம் கொடுத்தவன் லஞ்சம் வாங்குவதலாகிய குற்றத்திற்கு உடந்தைக் குற்றம் (Abetment) செய்தவனாவான் என்று  இந்தியன் பினல்கோடு கூறுகின்றது. பெரும்பாலும் எதிரிதான் லஞ்சம் கொடுப்பவன். அவன் பேரில் ஏற்பட்ட ஒரு கேசிலிருந்து தப்புவதற்காக அவன் லஞ்சம் கொடுக்கிறான். அவ்வாறு லஞ்சம் கொடுத்தவன் ‘உடந்தைக் குற்றவாளி’ என்று சட்டம் சொல்லும் போது அவன் லஞ்சம் கொடுத்த வி­யத்தை வெளியில் சொல்வானா? சர்க்கார் அதிகாரிகளிடம் பிரியாது கொடுப்பானா? பொய்ப் பிரியாது செய்தவனைத் தண்டிப்பதற்கு இந்தியன் பினல் கோடு 211 முதலிய பல பிரிவுகள் இருக்கின்றன. அப்படியிருந்தும் லஞ்சம் கொடுத்தவன் உடந்தைக் குற்றவாளி என்று விதிக்கும் சட்டம் இருப்பானேன்? அப்படியிருப்பது நீங்கள் லஞ்சம் கொடுங்கள், ஆனால் அதனை வெளியில் சொல்லாதேயுங்கள் என்று கட்டளையிட்டது போலாகிறது.

8. 1979ம் வரு­த்து வக்கீல்களின் சட்டம் (Legal Practitioner's) 3 வது பிரிவு ஒரு வக்கீலிடமிருந்து கிடைக்கும் பொருளுக்காக ஒரு வக்கீலுக்கு ஒரு கக்ஷிக்காரனைக் கொண்டு போய்விடுகிறவனும், அல்லது ஒரு வக்கீலிட மிருந்தாவது ஒரு கக்ஷக்காரனிடமிருந்தாவது தனக்குக் கிடைக்கும் பணத்திற்காக ஒரு வக்கீலுக்கு ஒரு கக்ஷிக்காரனை கொண்டுபோய்விடுவதாக அல்லது ஒரு கக்ஷிக்காரனுக்கு ஒரு வக்கீலைத் திட்டம் செய்து கொடுப்பதாகச் சொல்லுகின்றவனும், மேற்கண்ட வக்கீலுகளுக்கும் கக்ஷிக்காரனை கொண்டு போய்ச் சேர்ப்பதற்காக அல்லது கக்ஷிக்காரர்களுக்கு வக்கீலைத் திட்டம் பண்ணிக் கொடுப்பதற்காகச் சிவில் அல்லது கிரிமினல் திட்டம் பண்ணிக் கொடுப்பதற்காகச் சிவில் அல்லது கிரிமினில் அல்லது ரெவினியூ கோர்ட்டு எல்லைகளிலாவது ரயில்வே ஸ்டே­ன்கள், கக்ஷிக்காரர்கள் இறங்கும் அல்லது தங்கும் இடங்கள், அல்லது பொது ஜனங்கள் தங்கும் சத்திரம் முதலியவற்றிற்காவது அடிக்கடி போகிறவனும் ‘டெளட்’ ஆவான் என்று கூறுகின்றது.

ஆகஸ்ட் 13 வது பிரிவு ‘தனக்குக் கிடைத்த, அல்லது கிடைக்கும் பீஸிலிருந்து கேசை தனக்குக் கொடுத்ததற்காக அல்லது கொடுப்பதற்காக ஏதேனும், பணம் கொடுக்கும் அல்லது கொடுப்பதற்கு சம்மதிக்கும் ஒரு வக்கீலை வேலையி லிருந்து நீக்கிவிடலாம் Dismiss செய்யலாம். ஒரு குறித்த காலத்திற்கு நீக்கி வைக்கலாம் (Suspend) செய்யலாம்’ என்று கூறுகிறது.

க்ஷ ஆக்டு 36  வது பிரிவு ஹைக்கோர்ட்டும், டிஸ்டிரிக்டு ஜட்ஜும், செ­ன்ஸ் டிஸ்டிரிக்டு மேஜிஸ்டிரேட்டும், டிஸ்டிரிக்டு கலெக்டரும் தாம் நேரிலாவது, தமக்குக் கீழ்ப்பட்ட உத்தியோகஸ்தர் மூலமாகவாது, விசாரணை செய்து சாக்ஷியத்தால் அல்லது பொதுப் பிரஸ்தாபத்தால் ‘டெளட்டு’களின் தொழிலை வழக்கமாகச் செய்யும் மனிதர்களைத் தெரிந்து ஒரு ஜாப்தா தயார் செய்வித்துத் தம் கோர்ட்டிலும் தமக்குக், கீழ்ப்பட்ட கோர்ட்டுகளிலும் பிரசுரம் செய்யலாம்’ என்றும், ‘அந்த ஜாப்தாவில் கண்ட நபர்களை அந்தந்தக் கோர்ட்டார் தமது கோர்ட்டு எல்லைக்குள் வரக்கூடாதென்று உத்தரவு செய்யலாம்’ என்றும் கூறுகின்றது.

க்ஷ சட்டம் மேற்கண்டவாறு சொல்லியிருந்தும், வக்கீல்களிற் பலர் ‘டெளட்’களுக்குத் தாம் வாங்கும் பீஸிலிருந்து இரண்டிலொரு பங்கு மூன்றிலொரு பங்கு, நான்கிலொரு பங்கு வீதம் கமி­ன் கொடுத்து அந்த டெளட்டுகள் மூலமாக கக்ஷிக்காரர்களைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஓர் ஊரில் சர்ட்டிபிக்கேட்ப் பெற்ற வக்கீல்கள் 10 பேர் இருந்தால் ‘டெளட்டுகள்’ 20 பேருக்குக் குறையாமல் இருக்கிறார்கள். அந்த ‘டெளட்டு’கள் மேற்கண்ட கோர்ட்டு முதலிய இடங்களில் மாத்திரமல்லாமல், டெளட்டுகளுக்குக் கமி­ன் கொடாத வக்கீல்களின் ஆபீஸ்களின் முன்னும் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

மேற்கண்ட வக்கீல்களின் சட்டம் 36வது பிரிவானது ஜாப்தா தயார் செய்வித்துப் பிரசுரிக்கலாம் (May prepare and publish)  என்று சொல்லுகிற காரணத்தாலோ, அல்லது உதாசீனத்தாலோ, ‘டெளட்டு’களால் அநேக கக்ஷிக்காரர்களின் பொருள்கள் அநியாயமாகக் கவரப்படுகின்றது. அநேக வக்கீல்கள் மிக இழிவாகக் கருதப்படுகின்றார்கள். சில சந்தர்ப்பங்களில் நீதி தவறுவதற்கும் இடம் ஏற்படுகிறது. க்ஷ 36 வது பிரிவிலுள்ள ‘May’ என்பதற்குப் பதிலாக‘Shall’ என்று போட்டு க்ஷ சட்டத்தைத் திருத்தினாலன்றி க்ஷ மூன்று பிரிவுகளும் க்ஷ சட்டத்தில் இருப்பதால் யாதொரு பயனும் இல்லை.

தமிழர்களுக்கு விரைவில் வேண்டியவை

நம் தமிழ்நாடு மிகப்பரந்த நாடு. சேரன்,சோழன், பாண்டியன் என்னும் மூன்று பேரரசர்களும் பல சிற்றரசர்களும் கூடி ஆண்டு வந்த பெரிய நாடு. தமிழ்நாட்டில் ஏறக்குறைய நான்குகோடி ஜனங்கள் இருக்கிறார்கள். தமிழ் மொழி (பாஷை) மிகத் தொன்மையானது. அது மலையாளம், கன்னடம், துளுவம், தெலுங்கு முதலிய பல பாஷைகளுக்குத் தாய்ப் பாஷையாய் விளங்குவது. ஒப்புயவர்வற்ற தொன்னூல் எண்ணிறந்தவற்றை உடையது. பேசுவதற்கும், எழுதுவதற்கும், பாடுவதற்கும் மிகப் பொருத்தானது. இந்நாட்டில் பாஷையும் தொழிலும் கற்கத்தக்க ஆண்மக்கள் பெண்மக்கள் சுமார் ஒரு கோடி (நூறு லெக்ஷம்) பேர்கள் இருக்கிறார்கள்.

இவ்வாறிருந்தும், இந்நாட்டில் இதுவரையில் தமிழ் சர்வகலா சாலை ஒன்றும் ஏற்படுத்தவில்லை. தமிழ்நாட்டிலும் மிக மிகச் சிறியதாகிய ஆந்திர நாட்டிற்கு ஆந்திர சர்வகலாசாலை ஏற்பட்டுவிட்டது. இதுவரையில் தமிழ் சர்வ கலாசாலை ஏற்படாததற்குக் காரணம் சட்டசபையிலுள்ள தமிழ் அங்கத்தினர் களின் ஊக்கக் குறைவும் இராஜாங்கத்தாரின் கவனக் குறைவுமே என்று யான் கருதுகின்றேன். அவ்விரு திறத்தாரையும் என் போன்றோர் இனி மேலும் குறைகூறாத வண்ணம் அவர்கள் ‘தமிழ் சர்வ கலாசாலை’யை வெகு விரைவில் ஸ்தாபிப்பார்களாக.

தமிழ்நாட்டிலுள்ள சில நகரங்களிலும் பல கிராமங்களிலும் வேண்டிய அளவு வைத்திய உதவிகள் கிடையாமல் ஜனங்கள் படும்பாடு பெரும்பாடா யிருக்கிறது. எனது நீண்ட கால அனுபவத்தில் தமிழ்நாட்டின் சீதோஷ்ண நிலைக்கும், தமிழ் நாட்டினரின் சரீர இயற்கைக்கும் பொருத்தமான வைத்தியம் தமிழ்ச் சித்த வைத்தியமே என்று யான் கண்டுள்ளேன். தமிழ்ச் சித்தர்கள் தமிழ்நாட்டிலே பிறந்து வளர்ந்து வசித்துத் தமிழ்நாட்டினுடைய நிலைமைகளையும் தமிழ் மக்களுடைய பழக்க வழக்க ஒழுக்கங்களையும் நேரில் அறிந்து வைத்தியம் செய்து வைத்திய நூல்கள் எழுதி வைத்தவர்களான படியால், அவர்கள் வைத்தியம் தமிழ்நாட்டிற்கு மிகப் பொருத்தமா யிருக்கிறது. 

இவ்வுண்மையினைக் கண்டு இராஜாங்கத்தாரும் தமது சென்னை நகர வைத்தியக் கல்லூரியில் தமிழ் சித்த வைத்தியத்தைக் கற்றுக் கொடுக்கும் படியான ஏற்பாடு செய்திருக்கின்றனர். சில நகர பரிபாலன சங்கத்தினரும், ஜில்லா நிர்வாக சபையினரும், சில தாலுகா நிர்வாக சபையினரும் சிற்சில இடங்களில் தமது செலவில், அல்லது தமது பொருளதவியில், தமிழ்ச் சித்த வைத்திய சாலைகள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். 

இன்னமும் தமிழ் நூல்களெல்லாம் பாக்களாகவே இருக்கின்றன. அவற்றை வசன நடையில் எழுதி வெளிப்படுத்துவதற்கும், தமிழ்ச்சித்த வைத்திய மாணவர்களுக்கு ரண வைத்தியம் (Surgery) தற்கால மேனாட்டு முறையில் இன்னம் அதிகமாகக் கற்பிக்கும்படிக்கும் இராஜாங்கத்தார் ஏற்பாடு செய்தல் வேண்டும். இராஜாங்கத்தாரும் ஸ்தலஸ்தாபன சபையார்களும் சேர்ந்து தமிழ் நாட்டிலுள்ள பெரிய கிராமம் ஒவ்வொன்றிலும், சிறு கிராமங்கள் சில சிலவாகச் சேர்ந்து அவற்றின் மத்தியிலுள்ள கிராமத்திலும் தமிழ்ச் சித்த வைத்தியசாலைகளை அமைத்து ஜனங்களுக்கு வேண்டும் சமயத்திலும் எளிதாகவும் வைத்திய உதவி கிடைக்கும்படி செய்வார்களாக.

சேலம் ஜில்லா வி­யங்கள்

நமது தேசம் சுய அரசாட்சி பெறுவதற்கு நாம் என்யன்ன செய்ய வேண்டுமென்றும், நமது இராஜாங்கத்தார் என்னென்ன வி­யங்களைக் கவனிக்க வேண்டுமென்றும், நமது தமிழ்நாட்டிற்கு விரைவில் வேண்டியவற்றையும் இங்குச் சொன்னேன். இந்த சேலம் ஜில்லா மாநாட்டில் இந்த ஜில்லாவின் நன்மைக்காகச் செய்யப்பட வேண்டியவற்றைப் பற்றி ஒன்றும் யான் சொல்லவில்லையே என்று சிலர் நினைக்கலாம். அந்த ஜில்லா வி­யம் ஒன்றும் எனக்குத் தெரியாது. அவ்வி­யங்களைத் தெரிந்தவர்கள் வி­யாலோசனைச் சபைக் கூட்டத்திலும் இம்மகாநாட்டிலும் பேசி வேண்டுவன செய்யுமாறு அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

முடிவுரை

எனது பேச்சு மிக வளர்ந்துவிட்டபடியாலும், நாம் இம்மகாநாட்டில் செய்ய வேண்டிய முக்கிய வேலைகள் பல இருப்பதாலும், என் பேச்சை இம்மட்டில் நிறுத்திவிடுகின்றேன். இம்மகாநாட்டின் தலைமையான யான் வகிக்கும் படியான பாக்கியம் எனக்குக் கிடைக்கும்படிச் செய்ததற்காகச் சேலம் ஜில்லாவாசிகளாகிய உங்கள் எல்லோருக்கும் என் நன்றியறிதலைத் தெரியப்படுத்தி என் நமஸ்காரத்தை அளிக்கின்றேன். இந்த மகாநாடு இனிது நடைபெற்று முடிவதற்கும், இந்த மகாநாட்டில் நமது தேசம் விரைவில் சுய அரசாட்சி பெறுவதற்குரிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதற்கும், நீங்கள் எல்லோரும் எனக்கு உதவி புரிவதுடன் எல்லாம் வல்ல இறைவனும் எனக்குத் துணை புரியும்படியாக யான் வணங்கிப் பிரார்த்திக்கிறேன்.

வ.உ. சிதம்பரம் பிள்ளை, 

தலைவன்

Friday

இளங்குமரனார் உரை -5

வ.உ.சிதம்பரம் திருக்குறள் அறப்பால் உரை நூல் வெளியீட்டு விழா

சிங்கப்பூர் தேசிய நூலக வளாகத்தில் 14.03.2010 அன்று நடைபெற்ற வ.உ.சிதம்பரனார் திருக்குறள் அறப்பால் நூல் வெளியீட்டு விழா - தொகுப்பாசிரியர்  :  கவி
சிறப்பு விருந்தினர்  : முதுமுனைவர் இரா.இளங்குமரனார்
நூல் வெளியிடு :  திரு. வெ.கரு. கோவலங்கண்ணனார்
வாழ்த்துரை : திருமதி புஷ்பலதா நாயுடு, தேசிய நூலக அதிகாரி

Monday

பதிப்புரை


தமிழகத்தில் மயிலாடுதுறையில் 2010 சனவரி 24 ஆம் நாள் அமைச்சர் உ.மதிவாணன் அவர்களாலும் சிங்கப்பூரில் தேசிய நூலகத்தின் ஆதரவிலும் சிங்கப்பூர் தமிழர் சங்கத்தின் ஆதரவிலும் தமிழவேள் நற்பணி மன்ற ஆதரவிலும் 14.03.2010 அன்று வெளியிடப்பட்ட நூலின் அட்டை படம்.


2000 ஆண்டில் திரு. கவி அவர்களால் கையடக்கப்பதிப்பாக வெளியிடப்பட்ட வ.உ.சிதம்பரனார் உரை மற்றும் பாவேந்தர் உரை நூல்களின் அட்டை


வ.உ.சிதம்பரனார் நூலின் தொகுப்பாசிரியர் கவி அவர்களைச் சிறப்பிக்கிறார் சிங்கப்பூர் தமிழர் சங்கத் தலைவர்.



சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட திரு. கோவலங்கண்ணன் அவர்கள் சிறப்பிக்கப்படுகிறார்.



சிறப்புரையாற்றிய முதுமுனைவர் இரா. இளங்குமரனார் சிறப்பிக்கப்படுகிறார்.



சிங்கப்பூர் தேசிய நூலக அதிகாரி திருமதி புஷ்பலதா அவர்கள் வாழ்த்துரை வழங்குகிறார்.



திரு.கோவலங்கண்ணன் அவர்கள் குழந்தைகளுக்கு நூல்களை வழங்குகிறார்.






பதிப்புரை

மறைந்த என்னுடைய தந்தையார் அவர்கள் இந்து அறநிலைய ஆட்சித்துறை முதல் நிலை செயல்அலுவலராக இருந்தவர். எங்கள் குடும்பத்தாருக்கு மட்டுமல்லாமல் உடன் பணியாற்றியவர்களுக்கும் வழிகாட்டியாக இருந்தவர். பொதுவுடைமை இயக்க சிந்தனை யுடையவர். தன்னுடைய கடைசி மகனுக்கு காரல் மார்க்ஸ் என்று பெயர் வைத்தவர். தமிழ் மீதும் பற்றுள்ளவர். எனவே தன்னுடைய ஒரே மகளுக்கு வள்ளுவனின் துணைவியாகக் கருதப்பட்ட வாசுகியின் பெயரை வைத்தார்.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது

என்ற குறளை எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தவர். திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் அதிகாரியாக பணிபுரிந்த காலத்தில் நடைபெற்ற திருவிழா நிகழ்ச்சிக்குத் திருக்குறள் முனுசாமி அவர்களை சொற்பொழிவாற்ற அழைத்திருந்தார். உடன்பாட்டின்படி அவருக்கு மூன்று நாள்கள் தான் சொற்பொழிவு. திருக்குறளாரின் ஆழ்ந்த புலமையினாலும் சொற் பெருக்கினாலும் ஈர்க்கப்பட்ட என் தந்தையார் அவருடைய சொற்பொழிவை மீண்டும் ஒரு மூன்று நாள்களுக்கு நிகழ்த்துமாறு கூறினார். அப்பொழுது என்னுடைய அகவை பதினொன்று அல்லது பனிரெண்டாக இருக்கும். எப்படியோ இந்நிகழ்வு என் நெஞ்சில் ஆழப் பதிந்துவிட்டது.

பள்ளி வகுப்பு பாடப்பகுதியில் மனப்பாடப் பகுதியாக பத்து அல்லது பதினைந்து திருக்குறள்களைப் படித்தால் ஆறு மதிப்பெண்கள் உறுதி என்பதற்காக மட்டுமே பள்ளிகளில் திருக்குறளை மனப்பாடம் செய்தவன் நான். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிக்காக முதல் பத்து அதிகாரங்களை மனப்பாடம் செய்து மூன்றாம் பரிசைப் பெற்றவன். இது தவிர வேறு எந்த ஈர்ப்பும் எனக்கு இல்லை.

சென்னையில் நான் பணியாற்றிய போது திருவல்லிக் கேணி பழைய பொத்தகக் கடையில் ‘வ.உ.சி. கட்டுரைகள்’ என்ற தலைப்பிடப் பட்ட ஒரு சிறு நூலைப் பார்த்தேன். அதில் ‘திருவள்ளுவரின் திருக்குறள்’ என்ற வ.உ.சி எழுதிய கட்டுரையைப் படித்த போதுதான் திருக்குறளுக்கு அவர் உரை எழுதிய செய்தி அறிய முடிந்தது.

அக்காலக்கட்டத்தில் தான் நான் பெரியார் பாதையை நோக்கி சென்று கொண்டிருந்தேன். வ.உ.சி. எழுதிய அக்கட்டுரையில் , ‘கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு மற்றும் நீத்தார் பெருமை ஆகிய மூன்று அதிகாரங்கள் வள்ளுவரால் எழுதப்பட்டவையல்ல’ என்பதைக் குறிப்பிட்டிருந்தார். அதற்கான சான்று களையும் கூறியிருந்தார்.

அக்கட்டுரையையின் முதன்மையானவற்றைத் தொகுத்து 1000 படிகள் அச்சடித்து வெளியிட்டேன். மேலும் அப்போது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஏடான ‘சங்கொலி’ வார இதழில், அதன் அப்போதைய பொறுப்பாசிரியர் க. திருநாவுக்கரசு அவர்கள் ‘திருக்குறளும் திராவிடர் இயக்கமும்’ என்ற ஆய்வுக் கட்டுரையை எழுதி வந்தார். அக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்தன. அதை வெளியிட்டு, நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவினைப் படித்த போது திருக்குறளின் உண்மைப் பொருள் எனக்கு விளங்கப்பெற்றது.

‘பாவேந்தரின் திருக்குறள் உரை’ என்ற நூலையையும் தேடத் தொடங்கினேன். ச.சு. இளங்கோ அவர்கள் வெளியிட்ட அவருடைய ஆய்வுடன் கூடிய நூலை மதுரையில் கிடைக்கப் பெற்றேன். பின்பு புதுச்சேரியில் பணியாற்றிய போது ‘திராவிடர் பேரவை’ நிறுவுநர் திரு. நந்திவர்மன் அவர்களின் தங்கை செங்கமலத்தாயார் அவர்கள் வெளியிட்ட ‘பாவேந்தர் உரை’ என்ற நூலையும் வாங்கினேன்.

கோபிச் செட்டிப்பாளையம் வழக்கறிஞர் திரு. கு.ச. ஆனந்தன் அவர்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் எழுதிய ‘மாநில சுயாட்சி’ என்ற 1000 பக்கங்கள் கொண்ட ஆய்வு நூலை அவரிடமிருந்து வாங்கிப் படித்தேன். ‘திருக்குறள் உண்மைப் பொருள் ’என்று ஆய்வுநூலை பெரியார், புலவர் குழந்தை , பகுத்தறிவு வழி நின்று எழுதியிருக்கிறார். அந்நூலைத் தேடியும் கிடைக்கவில்லை. ஆனால் அவ்வாய்வு நூலுக்குத் தொடக்கமான ‘வள்ளுவரின் மெய்யியல்’ என்ற நூலை புதுச்சேரி இசை, இலக்கண அறிஞர் அய்யா இரா. திருமுருகனார் அவர்களின் ‘பாவலர் பண்ணை’யில் கிடைக்கப் பெற்று வீட்டிற்கு வந்த போதுதான், கு.ச. ஆனந்தன் மறைந்து ஒரு வாரமான செய்தியை அறிந்து, மனமுடைந்தேன்.

வ.உ.சிதம்பரனார் எழுதிய திருக்குறள் உரை நூலைத் தேடியபோதும் உடனடியாக அது கிடைக்கவில்லை. ஒரு பணியின் காரணமாக திருநெல்வேலிச் சென்ற போது சைவசித்தாந்த கழக நூல் நிலையத்தில் அந்நூல் கிடைத்தது. அந்நூல் முழுவதையும் படித்துப் பார்த்தேன். அப்போது ஏற்பட்ட உந்துதலில் அவற்றை தொகுத்து சிறிய நூலாக வெளியிட வேண்டும் என முடிவு செய்தேன்.

வ.உ.சி அவர்கள் திருக்குறள் உரையை பொருள் (பதவுரை), அகலம் (விளக்கம்,இலக்கணக் குறிப்பு,வினாவிடை, மேற்கோள்) மற்றும் கருத்து என்று மூன்று பிரிவுகளாக எழுதியிருக்கின்றார். அதில் அவர் கூறுகின்றார், ‘எனது உரையில் பொருள் என்னும் சொல்லோடு தொடங்கிப் பதவுரை எழுதியுள்ளேன். அகலம் என்னும் சொல்லோடு தொடங்கி இலக்கணக் குறிப்பு, வினாவிடை, மேற்கோள், பாட பேதம் முதலியவற்றைக் குறித்துள்ளேன். கருத்து என்னும் சொல்லோடு தொடங்கிக் கருத்தினைக் கூறியுள்ளேன். உள் உரையைப் படிக்கத் தொடங்கியவர்களில் முன் இலக்கிய இலக்கண ஆராய்ச்சியில்லாதார், முதன் முறை படிக்கும் போது பொருளையும் கருத்தையும் படிக்குமாறும், நூல் முழுவதையும் ஒரு முறை படித்து முடித்து நூலை இரண்டாம் முறை படிக்கும் போது அகலத்தையும் சேர்த்து படிக்குமாறும் வேண்டுகிறோம்’ என்று எனக்கு வழிகாட்டுகிறார். எனவே குறளுக்கான பொருளை மட்டும் தொகுப்பது என்றும், வேண்டிய இடத்தில் அவர் கொடுத்துள்ள விளக்கத்தையும் தொகுப்பது என்றும் முடிவு செய்தேன். அவ்வாறே பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய திருக்குறள் உரையையும் தொகுக்க விரும்பினேன்.
இரண்டு நூல்களையும் நாள்தோறும் திருவல்லிக்கேணியில் உள்ள கண்ணகி சிலையின் கீழ் அமர்ந்து எழுதத் தொடங்கினேன். ஒரு நாள் ‘பாவேந்தரின் உரை’யில் ஓர் அதிகாரமும் மறுநாள் ‘வ.உ.சிதம்பரனாரின் திருக்குறள் உரை’யில் ஓர் அதிகாரமும் தொகுத்து எழுதத் தொடங்கினேன். காலை 6 மணி முதல் 8 மணி வரை நாள்தோறும் செய்து வந்தேன். காலையில் இதமான கடற்கரைக் காற்று வீசுகின்ற வேளையில், கதிரவனின் தோற்றமும் ஒளிக் கதிர்களும் மெல்ல வீசத் தொடங்குகின்ற வேளையில், செல்வர்கள் பலரும் நடிகர்களும் என்னைக் கடந்து நடைப்பயிற்சி மேற்கொள்வார்கள். கதிரவனின் ஒளி வீச்சு அதிகமாக இருக்கும் போது கண்ணகி என்னைக் காத்தாள். இப்படித் தொடங்கிய பணி மூன்று மாதங்கள் தொடர்ந்தது.

சென்னையில் ‘மருத்துவர்’ என்ற சித்த மருத்துவ திங்கள் இதழ் அலுவல கத்தில் பணியாற்றிய போது கணினியில் திருக்குறள் உரையை நானே அச்சடிக்கத் தொடங்கினேன். (அங்குதான் பேராசிரியர் தி.வ. மெய்கண்டார், தமிழில் மருத்துவப் படிப்பு ஏற்படுத்துவதற்காக தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் மருத்துவர் டொமினிக் சுவாமிநாதன் மற்றும் தனித்தமிழ் அறிஞர் புதுச்சேரி க. தமிழமல்லன் ஆகியோரின் தொடர்பு கிடைத்தது). அப்போது புலவர் ந.தி. நஞ்சப்பன் அவர்களின் நட்பினால் அருகில் இருந்த ‘உலகத் திருக்குறள் மையத்தின்’ நிறுவனர் திரு. மோகனராசு அவர்களின் அறிமுகம் கிடைத்தது. புலவர் ந.தி. நஞ்சப்பன் அவர்கள் என்னைத் திரு.மோகனராசு அவர்களிடம் அறிமுகப்படுத்தி வ.உ.சி திருக்குறள் உரையையும் பாவேந்தர் திருக்குறள் உரையையும் கையடக்கப் பதிப்பாக நான் வெளியிடயிருப்பதைத் தெரிவித்தார்.

திரு. மோகனராசு அவர்கள் ‘உலகத் திருக்குறள் மைய’ நிகழ்ச்சி விழாவின் போதே அந்நூற்களை வெளியிட அனுமதியளித்து விழா அழைப்பிதழிலும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் கணினியில் தட்டச்சுப் பணி முடிந்து அச்சுக்கு அணியமாக இருந்தும் பொருளாதார நெருக்கடியால் குறித்த காலத்தில் என்னால் வெளியிட முடியாமல் போயிற்று. இந்நிகழ்வு என் ஆழ் மனத்தை உறுத்திக் கொண்டே இருந்தது.

‘பாவேந்தரின் திருக்குறள் உரையை’ என்னுடைய திருமணத்தின் போது அச்சடித்து வருகை தந்தவர்கள் அனைவருக்கும் அளித்தேன்.

புதுச்சேரியில் நான் பணியாற்றிய போது ‘செந்தமிழர் இயக்கத்தின்’ தலைவர் திரு. ந.மு. தமிழ்மணி அவர்கள் மூலம் வ.உ.சிதம்பரனாரின் திருக்குறள் உரையை வெளியிட விரும்பினேன். அச் சமயம் புதுச்சேரியில் அரசு வ.உ.சிதம்பரனாரின் சிலையைத் திறக்க ஏற்பாடு செய்துகொண்டிருந்தது. அவ்விழாவின் போதே வெளியிட விரும்பினேன். குறிப்பிட்ட காலத்தில் அந்த விழா நடைபெற வில்லை.

பின் என்னுடைய சொந்தச் செலவில் ‘வ.உ.சிதம்பரனார் திருக்குறள் உரை’ தொகுப்பு நூலை அச்சடித்து இலவயமாகவே வழங்கி வந்தேன். ‘வெல்லும் தூய தமிழ்’ ஆசிரியர் திரு. க. தமிழமல்லன் அவர்களிடம் நூறு படிகளைக் கொடுத்து அவருடைய பள்ளி மாணவர்களுக்கு வழங்குமாறு கூறினேன்.

இந்த இரு உரை நூல்களையும் தமிழ்ச் சான்றோர் பேரவை நிறுவனர் அய்யா ஆனா ரூனா அவர்களிடம் அளித்த போது, ‘இனிமேல் நீங்கள் தமிழ் இலக்கியத்திற்குத் தொண்டு செய்யவில்லை என்று யாரும் சொல்ல முடியாது’ என்று மனம் மகிழ்ந்து பாராட்டினார்.
சிங்கப்பூருக்கு வேலைக்காக வந்த போது சென்னை வானூர்தி நிலையத்தில் ‘வ.உ.சி. நூல் திரட்டு’ என்ற நூலை வாங்கினேன். திரும்பத் திரும்ப அதைப் பார்த்த போதும் அதில் ‘வ.உ .சி. யின் திருக்குறள் உரை’ இணைக்கப்படாததைக் கண்டேன். திருக்குறள் முன்னுரையும் முழுப் பகுதி வெளியிடப்படாமல் அரைகுறையாகவே வெளியிட்டிருந்தார்கள். எனவே மனத்தில் ஓர் எண்ணம் உருவாயிற்று.

இந்த நிலையில் நான் ஒரே திங்களில் தமிழகம் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டவுடன், மன அழுத்தம் எனக்கு ஏற்பட்ட போதும், வீட்டில் இருந்த படியே 45 நாள்களில் வ.உ.சிதம்பரனாரின் திருக்குறள் உரை முழுவதையும் கணினியில் தட்டச்சு செய்தேன். திருநெல்வேலியில் நான் வாங்கிய வ.உ.சி.யின் திருக்குறள் உரை நூல் பழைய நூலாக இருந்ததால், பக்கங்கள் எல்லாம் தனித்தனி ஏடாக கிழிந்து போயிற்று. எனவே கடவுள் வாழ்த்து மற்றும் வான்சிறப்பு அதிகாரங்கள் முற்றாகக் கிழிந்து போயிற்று. நீத்தார் பெருமை அதிகாரத்தில் சில குறள்களே கிழியாமல் எஞ்சியிருந்தன. எனவே கிடைத்தவற்றை வைத்து வெளியிட்டுள்ளேன். மேலும் கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு மற்றும் நீத்தார் பெருமை ஆகிய மூன்றும் வள்ளுவர் இயற்றியதில்லை என்ற கருத்தை வ.உ.சி கொண்டிருந்ததால் அவற்றை இடைப்பாயிரம் என்றே தலைப்பிட்டு வெளியிட்டிருந்தார் என்பதையும் இங்குப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

திருக்குறளை எப்படி படிக்க வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகப் பெரியார் அவர்களின் திருக்குறள் தொடர்பான சொற்பொழிவை யும் திருக்குறளுக்கான வரலாறு என்ன என்பதை அறிய நாவலர் நெடுஞ்செழியனின் சொற்பொழிவையும் இணைத்துள்ளேன்.
நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு வ.உ.சிதம்பரனாரின் இந்த எழுத்துக்கள் வெளிவருகின்றன. அவற்றை வெளிக்கொணருவதில் எனக்குப் பெரு மகிழ்ச்சி. தமிழ்ச்சான்றோர்கள், தமிழ் மக்கள் இந்நூலை ஆழ்ந்து படிப்பார்களேயானால் தமிழ் மொழி வரலாறு எப்படியயல்லாம் சிதைக்கப்பட்டிருக்கிறது என்பதும் இலக்கியங்கள் எவ்வாறு உருமாறி வந்திருக்கின்றன என்ற உண்மையும் புரியும்.

கவி
தொகுப்பாசிரியர்,

வ.உ.சி. திருக்குறள் உரை
பெரியார் பட்டறை
7/11 அலிவலம் சாலை, சுந்தரவிளாகம், திருவாரூர்‡610 001, தமிழ்நாடு

வ.உ.சிதம்பரம் பிள்ளை வாழ்க்கை வரலாறு

பரலி சு. நெல்லையப்பர் எழுதிய
வ.உ.சிதம்பரம் பிள்ளை வாழ்க்கை வரலாறு

தோற்றம்

திக்கெலாம் புகழுறும் திருநெல்வேலி யயன்று திருஞான சம்பந்தர் முற்காலத்தில் போற்றிப் புகழ்ந்த திருநெல்வேலி நாட்டைப் பிற்காலத்தில் உலகத்தார் போற்றுமாறு செய்த பல பெரியோர்களில் காலஞ்சென்ற திருவாளர் வ.உ.சிதம்பரம் பிள்ளையும் ஒருவர். திருநெல்வேலி நாட்டிற்கு மட்டுமின்றித் தென்னாடு முழுமைக்குமே பெரியோர்களில் சிதம்பரம் பிள்ளை தலைசிறந்தவர்.

திருநெல்வேலி ஜில்லாவில், அக்காலத்தில் கும்பினி சர்க்காரை எதிர்த்துக் கலகம் செய்து பேர்பேற்ற கட்டபொம்மு நாயகன் அரசாண்ட பாஞ்சாலங் குறிச்சியைத் தனக்கு அருகே கொண்ட ஒட்டப்பிடாரம் என்ற சிற்றூரில் , சைவ வேளாளர் குலத்தில் , ஆங்கீரச ஆண்டு, ஆவணி மாதம், 22 - ந் தேதி வியாழக்கிழமையன்று அஸ்த நட்சத்திரத்தில் (கி.பி.1872, செப்டம்பர் மாதம் 5-ந் தேதி) சிதம்பரனார் பிறந்தார். அவர் தந்தையார் வ.உலகநாத பிள்ளை, எட்டையபுரம் ஸமஸ்தான வக்கீலாக விளங்கினார். முதலில், தான் பிறந்த ஊரிலும், பின்னர் தான் பேரும் புகழும் பெறுவதற்கு உரியதாகத் திகழ்ந்த தூத்துக்குடியிலும், அதற்குப் பின்னர் திருநெல்வேலியிலும் சிதம்பரனார் கல்வி கற்றார். இறுதியில் திரிசிரபுரத்தில் வக்கீல் உத்தியோகத்திற்குரிய கல்வியைக் கற்றார். அக்காலத்தில் ஆங்கிலத்தில் மெட்ரிக்குலே­ன் என்று வழங்கிய வகுப்பு வரை பயின்று அதில் தேர்ச்சிப் பெற்றார். 1895 ம் ஆண்டு, அவர் வக்கீல் பரீட்சையில் தேறினார். இளமையில் நம் சிதம்பரம் பெற்றோருக்கு அடங்காத முரட்டுப் பிள்ளையாகவே விளங்கினார்.

இளமையிலேயே பொதுநல ஊக்கத்துடன் விளங்கிய சிதம்பரனார், தம் தந்தையார் மேற்கொண்டிருந்த வக்கீல் உத்யோகத்தையே தாமும் நாடினார். வக்கீல் தொழிலில் பிள்ளையார் பொருள் வருவாய் ஒன்றை மட்டும் கருதாமல், உண்மையில் நியாயவாதியாகவே விளங்கினார். ஏழை மக்கள் வழக்கில் அவர் இலவசமாகவே வேலை செய்வார். அவர் வக்கீலாயிருந்த பொழுது, பொது ஜனங்களைப் பல வழிகளில் வருத்திக் கொண்டிருந்த போக்கிரிகளும் , போலீஸ் உத்யோகஸ்தரும், மற்ற உத்யோகஸ்தரும் தண்டனை பெறுமாறும், உத்யோகம் இழக்குமாறும் செய்திருக்கிறார். பிள்ளை வக்கீலாயிருந்த பொழுது, தண்டத் துறையில் (கிரிமினல்) திறமைசாலியயன்று பேர் பெற்றதுடன், நல்ல வருவாயும் பெற்று வந்தார். அதனால் அவர் தமிழ்ப் புலவர்களையும் ஏழை மக்களையும் பெரிதும் ஆதரித்து வந்தார். அவரிடம் ஆதரவு பெற்ற புலவர்கள் பலர், அவருக்குப் பாமாலை சூட்டி வாழ்த்தியிருக்கிறார்கள்.

பெரியாருக்கு வ.உ.சிதம்பரனார் எழுதிய கடிதம்


தமிழாராய்ச்சி

பிள்ளையார் வக்கீலாயிருந்த பொழுதே சைவ சமய ஆராய்ச்சியில் ஈடுபட்டதுடன், தமிழாராய்ச்சியிலும் ஈடுபட்டிருந்தார். தமிழில் அவர் பெரிதும் விரும்பிக் கற்றுப் போற்றிய நூல், தெய்வத் தமிழ்மறையயன்று வையம் போற்றும் திருக்குறள் ஆகும். சுவாமி வள்ளிநாயகம் என்ற பெரியாருடன் சேர்ந்து ‘விவேகபாநு’ என்ற வேதாந்த மாதப் பத்திரிக்கையைப் பிள்ளையார் சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன் நடத்தினார். ‘விவேகபாநு’ பின்னர் மதுரையிலும், தென் ஆப்பிரிக்கா டர்பன் நகரிலும் சில ஆண்டுகள் நடந்து வந்து, பின்னர் மறைந்து விட்டது.

சுதேசி

வடக்கே, வங்காளத்தில் வங்காளப் பிரிவினையை ஒட்டி அந்நாளில் தோன்றிய சுதேசி இயக்கம் பிள்ளையார் உள்ளத்தைக் கவர்ந்தது. இராமகிருஷ்ண பரமஹம்ஸர் திருக்கூட்டத்தைச் சேர்ந்த அபேதானந்தர், இராமகிருஷ்ணாந்தர் போன்ற பெரியோர் பழக்கம், பிள்ளை உள்ளத்தில் இருந்த சுதேசி ஊக்கத்தை வளர்த்து விட்டது. அதன் பயனாகப் பிள்ளையார் தூத்துக்குடியில் தருமசங்கம் என்ற நெசவுச் சாலையையும் சுதேசிப் பண்ட சாலை ஒன்றையும் நிறுவினார். காங்கிரஸ் இயக்கத்திலும் ஊக்கம் கொண்டு உழைக்கத் தொடங்கினார். சொற்பொழிவு வாயிலாகச் சுதேசிப் பிரச்சாரமும் செய்தார். தமிழ்நாட்டில் பொதுக்கூட்டம் கூடிப்பேசும் முறையைப் பிரபலப் படுத்தியவர் பிள்ளையே ஆவார். பிள்ளை திறமையான பேச்சாளரானமையால், அவர் பேச்சுக்கு நாட்டு மக்களிடம் நல்ல செல்வாக்கு ஏற்பட்டது.

நம் தேசத் தலைவர்களில் திலகர் பெருமானிடம் பிள்ளைக்கு தெய்வ பக்தி ஏற்பட்டிருந்தது. 1907 -ம் ஆண்டு சூரத் நகரில் நடந்த காங்கிரஸ் மகாசபைக்கு, ஸ்ரீமான் பிள்ளை இப்பொழுது புதுவையில் ஸ்ரீ அரவிந்தாசிரம வாசியாயிருக்கும் பெரியாரான சென்னை வக்கீல் எஸ்.துரைசாமி ஐயர், காஞ்சி வரதாச்சாரியார் , கவி சுப்பிரமணிய பாரதியார், வி.சர்க்கரைச் செட்டியார் முதலிய பல நண்பர்களுடன் சென்றார். அங்கே நடந்த ஒரு சமரச ஏற்பாட்டில், தென்னாட்டு மதவாதிகள் கூட்டத்தின் தனிப் பிரதிநிதியாக, காலஞ்சென்ற சென்னைச் செல்வர் வி. கிருஷ்ண சுவாமி ஐயரையும் அமிதவாதிகள் என்ற தீவிர தேச பக்தர் திருக்கூட்டத்தின் பிரதிநிதியாக நமது சிதம்பரனாரையும் தேர்ந்தெடுத்தார்கள் என்றால் அவருக்கு அந்நாளில் ஏற்பட்டிருந்த பெருமதிப்பை சொல்ல வேண்டுமா?

சுதேசிக் கப்பல் கம்பெனி

தூத்துக்குடி, தமிழ்நாட்டின் தென்கோடியில் உள்ள ஒரு துறைமுகப்பட்டினம். தென்னாட்டிலிருந்து இலங்கைக்குச் செல்லும் பிரயாணிகளும், சரக்குகளும் அக்காலத்தில் தூத்துக்குடி வழியாகவே கப்பல் ஏறிச்செல்ல வேண்டும். எனவே, அது பெரிய வியாபார ஸ்தலமாக விளங்கியது. தென்னாட்டுச் சரக்குகளைக் கொழும்புக்கு ஏற்றுமதி செய்து அனுப்பும் வியாபாரிகள் அங்கே மிகுதி. ஆனால் ஆங்கில கப்பல் கம்பெனியார் தூத்துக்குடிச் சுதேசி வியாபாரிகளை மதியாமல் தாங்கள் இட்டதே சட்டம் என்று காரியம் நடத்தி வந்தார்கள். சுதேசி வியாபாரிகள் பிள்ளையாரிடம் முறையிட்டார்கள். விதேசிக் கப்பல் கம்பெனி முதலாளிகளின் அநியாயங்களையும், சுதேசி வியாபாரிகளின் குறைகளையும் கண்ட பிள்ளை, தூத்துக்குடி சுதேசிக் கப்பல் கம்பெனி ஒன்றைத்தொடங்குவதென்று முடிவு செய்தார். தென்னாட்டு வியாபாரிகள், செல்வந்தர்கள், தேச பக்கதர்களின் ஆதரவு பெற்றுப் பிள்ளை சுதேசிக் கப்பல் கம்பெனியைத் தொடங்கி விட்டார். பங்கு ஒன்றுக்குப் பத்து ரூபாய் வீதம் பத்து இலட்ச ரூபாய் மூலதனத்துடன் சுதேசிக் கப்பல் கம்பெனி 1905 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. 1906 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி கம்பெனி பதிவு செய்யப்பட்டது.

முற்காலத்தில் கப்பலோட்டிக் கடாரத்தை வென்ற தமிழ்நாட்டில், ரோமாபுரிக்கு முத்தும் பவளமும் மிளகும் அனுப்பிய தமிழ்நாட்டில், சாவகத்திலும் காம்போஜத்திலும் சைவமும் வைணவமும் தமிழும் கமழுமாறு செய்த தமிழ்நாட்டில் பிற்காலத்தில் முதல் முதல் கப்பலோட்டிய பெருமை சிதம்பரனாரைச் சேர்ந்தது. பெருஞ்செல்வராயின்றிச் சிறிய வக்கீலாயிருந்த பிள்ளை, அக்காலத்தில் கப்பல் கம்பெனி ஒன்றை நிறுவிய செயல் செயற்கரும் செயலென்றே சொல்ல வேண்டும். காலஞ்சென்ற பாலவநத்தம் ஜமீன்தாரும் மதுரைத் தமிழ்ச் சங்கத் தலைவருமான உயர்திருவாளர் பாண்டித்துரைத் தேவரும் தூத்துக்குடியிலும் திருநெல்வேலியிலும் பெருஞ்செல்வராக விளங்கும் கோபாலசாமி நாயுடு குடும்பத்தாரும் தூத்துக்குடியில் பெருஞ்செல்வராக விளங்கும் சிவ குடும்பத்தாரும் வேறு சில செல்வர்களும் கப்பல் கம்பெனி ஏற்படுத்துவதில் பிள்ளைக்குப் பேராதரவு புரிந்தவர்கள். வந்தே மாதர முழக்கமும், சுதேசி இயக்கமும் உச்ச நிலையில் இருந்த அக்காலத்தில் , தென்னாட்டு மக்கள் மட்டுமின்றி , பாரத தேசத்தின் பல பகுதிகளிலும் உள்ள மக்களும் , அலை கடலுக்கப்பால் தொலை நாடுகளில் வாழும் இந்திய மக்களும் தேசபக்தி உணர்ச்சி மிகுந்தவர்களாய், சுதேசிக் கப்பல் கம்பெனியில் பங்கெடுத்துக் கொண்டு, அதற்குப் பேராதரவு புரிந்தார்கள். சோழ நாட்டிலும் பாண்டி நாட்டிலும் பல தாய்மார்கள் கூடச் சிதம்பரனார் மீது தெய்வ பக்தி கொண்டவர்களாய், தங்கள் வாழ்நாளில் சேர்த்து வைத்திருந்த பொருள்களைச் சுதேசிக் கப்பலுக்கென்று உதவினார்கள்.

போட்டி

சுதேசிக் கப்பல் கம்பெனி ஒன்று தோன்றிய வி­யம் , அதுவரை தனியரசு செலுத்தி வந்த விதேசிக் கப்பல் கம்பெனியாருக்கும் அவர்களை ஆதரித்து வந்த அதிகாரிகளுக்கும் பொறாமையும் கோபத்தையும் விளைவித்தது. எனவே குழந்தை பருவத்தில் இருந்த சுதேசிக் கப்பல் கம்பெனியை கொல்லுவதற்கு அவர்கள் வழி தேடினார்கள். விதேசிக் கம்பெனியார் ஜனங்களுக்கும் சரக்குகளுக்கும் ஏற்பட்டிருந்த கப்பல் கட்டணங்களைப் படிப்படியாகக் குறைக்கத் தொடங்கினார்கள். தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் ஐந்து ரூபாயாக ஏற்பட்டிருந்த (மூன்றாவது வகுப்புப் பிரயாணிகள்) கட்டணம், முக்கால் ரூபாய் வரை இறங்கியதென்றால் போட்டியின் கடுமையைச் சொல்ல வேண்டுமா? நூற்றுக்கணக்கான கப்பல்களுடன், பல துறைமுகங்களில் பல ஆண்டுகள் தனிக்காட்டு ராஜாவாகக் கொள்ளை இலாபம் திரட்டி வந்த விதேசிக் கப்பல் கம்பெனியார் இலவசமாகக் கூட ஆட்களை ஏற்றிச் செல்லலாம். ஆனால் இரண்டே கப்பல்களுடன் , குழந்தைப் பருவத்தில் இருந்த சுதேசிக் கம்பெனிக்கு இந்தப் போட்டி மிகவும் கொடுமையாக இருந்தது. ஆயினும், சுதேசிக் கம்பெனி தைரியமாக வேலை செய்து வந்தது. இந்த நிலையில் கப்பல் கம்பெனிக்கு உயிராக விளங்கிய பிள்ளையை எவ்வாறாயினும் அடக்கிவிட வேண்டுமென்று எதிர்க்கட்சியாரும், அவர்களுக்கு ஆதரவாயிருந்த அதிகாரிகளும் முயன்றார்கள். அவருக்கு நயமாகவும் பயமாகவும் யோசனை கூறினார்கள்.

அந்நாளில் பிள்ளை பிறரது நய வார்த்தைகளுக்கு இணங்கியிருந்தாரானால், அவர் மிகப் பெரிய செல்வராயிருத்தல் கூடும். அவருக்குப் பிற்காலத்தில் ஏற்பட்ட வறுமை ஏற்பட்டிராது. ஆனால் பிள்ளை உறுதியுடன் நின்றார்.

தொழிலாளர் கிளர்ச்சி

தூத்துக்குடியில், கோரல் மில்ஸ் என்ற ஹார்வி கம்பெனியாரின் பருத்தி ஆலையில் முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் வேற்றுமை ஏற்பட்டது. அதன் பயனாகத் தென்னாட்டிலே முதல் முதலாகத் தூத்துக்குடியில் வேலை நிறுத்தம் ஏற்பட்டது. அதில் பிள்ளை தலையிட்டுச் சமரசம் செய்ய முயன்றார். வேலையிழந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்களையும் அவர்கள் குடும்பங்களையும் ஆதரிக்க வேண்டிய பொறுப்பும் அவருக்கு ஏற்பட்டது. செல்வர்களிடமும் ஏனைய பொது ஜனங்களிடமும் பொருள் சேர்த்து அவர்களுக்கு ஆதரவு புரிந்தார்.

சுதேசிக் கிளர்ச்சியின் உச்ச நிலை

அந்நாளில் தூத்துக்குடியில் சுதேசி உணர்ச்சி உச்ச நிலையில் இருந்தது. சுதேசி இயக்கத்திற்கு விரோதமாக இருந்த மனிதர்களைப் பொது ஜனங்கள் பகிஷ்காரம் செய்ய முற்பட்டார்கள். தூத்துக்குடியில் வக்கீலாயிருந்த பிராமண நண்பர் ஒருவருக்கு மருத்துவ சகோதரன் ஒருவன் ­வரம் செய்து கொண்டிருந்த பொழுது, ஐயங்கார் சிதம்பரனாரின் சுதேசி ஊக்கத்தைப் பெரிதும் இகழ்ந்து பேசினார். ­வரம் செய்து கொண்டிருந்த மருத்துவ சகோதரன் உடனே கத்தியை மடக்கிப் பெட்டியில் வைத்துவிட்டு ஐயங்காரை அரைகுறை ­வரத்தில் விட்டுவிட்டுப் போய் விட்டான். ஐயங்கார் சுவாமிகள் அன்று இரவே போலீஸ் காவலுடன் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்று, மறுநாள் காலையில் தமது திருப்பதி ­வரக் கோலத்தை நீக்க வேண்டியதாயிற்று. வங்காளத்து நவமணிகளில் ஒருவரான காலஞ்சென்ற அஸ்வினி குமார தத்தரின் தலைமையில் பாரிசால் நகரம் சுதேசி ஊக்கத்தில் வங்காளத்திலேயே சிறந்து விளங்கியது. (சுதேசி ஊக்க மிகுதியால் பாரிசாலில் பரதேசித் துணி கிடைப்பது அரிதாய் விட்டது. அக்காலத்தில் பாரிசாலில் இருந்த ஜில்லா கலெக்டருக்கு ஒரு கெஜம் மல் வேண்டியத Vயிருந்தது. அஸ்வினி குமார தத்தர் உத்தரவு கொடுத்த பின்னரே கலெக்டருக்கு ஒரு கஜம் பரதேசி மல் துணி கிடைத்ததாம்). சிதம்பரம் பிள்ளை தலைமையில் சிறந்து விளங்கிய தூத்துக்குடியைத் தென்னாட்டு பாரிசால் என்று தேச மக்கள் போற்றினார்கள்.

அடக்குமுறை

சிதம்பரம் பிள்ளையை எவ்வாறாயினும் அடக்கிவிட வேண்டுமென்று காலம் பார்த்திருந்த அக்கால அதிகாரிகள், அவரது பேச்சுகளால் தூத்துக்குடியில் குழப்பம் விளையுமென்று கூறி அவர் மீதும் அவரது நண்பர்களாகிய சுப்ரமணியம் சிவா, பத்மநாப ஐயங்கார் மீதும் திருநெல்வேலி ஜில்லா கலெக்டர் முன் ஜாமீன் வழக்குத் தொடர்ந்தார்கள். அச் சமயத்தில் சென்னையில் இந்தியா ப் பத்திரிக்கையை நடத்தி வந்த ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதியார் திருநெல்வேலிக்கும் தூத்துக்குடிக்கும் வந்தார்.

சிதம்பரனார் வழக்கு திருநெல்வேலி ஜில்லாவில் மட்டுமல்ல, தென்னாட்டில் மட்டுமல்ல, காஷ்மீரத்திலிருந்து கன்னியாகுமரி வரை தேசமெங்குமே பெரியதோர் விழிப்பை உண்டுபண்ணியது. இந்த வழக்கு விசாரணைக்கென்றே தனி நீதிபதியாக ஏற்பட்ட பின்னே துரை (னிr. பு.ய். Pஷ்ஐஜுeதீ ), பிள்ளைக்கு இரு குற்றங்களுக்காக இரு முறை ஆயுள் பரியந்தம் தீவாந்தர தண்டனையும், சிவாவுக்குப் பத்து வரு­ம் தீவாந்திர தண்டனையும் (1908 ஆம் ஆண்டு சூலை மாதம்) விதித்தார். இந்த வழக்கு சுமார் நான்கு மாதம் நடந்தது. இதில் ஸ்ரீமான் சுப்ரமணிய சிவனார் கொடுத்த வாக்குமூலம் நமது தேசத்தின் விடுதலைச் சரித்திரத்தில் இடம் பெறுதற்குரியது. இந்தக் கொடிய தண்டனையால் நாடு முழுமையும் கலங்கியது. இந்தத் தண்டனை, அக்காலத்தில் லண்டனில் இந்தியா மந்திரியாக விளங்கிய ஜான்மார்லியைக் கூட கலக்கியதாம். சிதம்பரம் பிள்ளைக்கு இரட்டைத் தீவாந்தர தண்டனை விதித்த ஜில்லா நீதிபதி பின்னே துரை, அடுத்தப்படியாக (சென்னை ஐகோர்ட்) உயர்தர மன்ற நீதிபதியாக உயர்ந்து , சில காலம் பதவியில் இருந்தார். ஆனால், சில காலத்திற்குள் அவர் தமது பெரிய பதவியையும் , ஐ.ஸி.எஸ் உத்தியோகத்தையும் அறவே விட்டுவிட்டுத் தாய் நாடு செல்ல நேர்ந்தது. அதற்குக் காரணம், சிதம்பரம் பிள்ளை வி­யத்தில் பின்னே துரை மேற்கொண்ட கொடிய நீதி முறையைப் பற்றி இந்தியா மந்திரி கொண்ட வெறுப்பேயயன்று ஆங்கில அரசாங்கத்தின் மூலஸ்தான விவகாரங்களை அறிந்தவர்கள் அந்த நாளில் சொல்லிக் கொண்டார்கள்.

பின்னே துரையின் அநியாயத் தீர்ப்பை மாற்றுமாறு ஐக்கோர்ட்டிற்கு அப்பீல் செய்யப்பட்டது. பிள்ளையவர்கள் வழக்குச் செலவுக்காகப் பொருளுதவி நாடி அவரது மனைவியார் செய்த விண்ணப்பத்திற்கு இணங்கி தேசத்தார் பேராதரவு புரிந்தனர். தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களேயன்றி, இலங்கை, தென் ஆப்பிரிக்கா முதலிய நாடுகளில் குடியேறி வாழும் தமிழர்களும், பாரத தேசத்தில் வாழும் மக்களேயன்றி , பூலோகத்தின் பல பகுதிகளிலும் வாழும் இந்திய மக்களும் ஆதரவு புரிந்தார்கள்.

சிறைவாசம்

சிதம்பரம் பிள்ளைக்கு ஏற்பட்ட ஆயுள் பரியந்தம் தீவாந்தர தண்டனையை ஆறு ஆண்டுச் சிறைவாசமாக ஐக்கோர்ட்டார் குறைத்துள்ளார்கள். நன்னடத்தைக் கழிவு , அரசாங்க வஜா முதலியன கழித்துப் பிள்ளை சுமார் நாலரை ஆண்டுகள் சிறைவாசம் செய்தார். முதலில் கோயம்புத்தூர்ச் சிறையிலும், பின்னர் மலையாளத்தில் உள்ள கண்ணனூர்ச் சிறையிலும் பிள்ளை தமது வாசத்தைக் கழித்தார்.

கோவைச் சிறையில் அரசியற் கைதியாக இருந்து மாடு போலச் செக்கிழுக்கும் பெருமை முதல் முதலாகச் சிதம்பரம் பிள்ளையவர்களுக்கே கிடைத்தது. பின்னர், சுமார் பதினாறு ஆண்டுகள் கழித்து அதே சிறைக் கோட்டத்தில் அந்தப் பெருமையை அடைந்தவர் சேலம் செல்வரான ஸ்ரீமான் எம்.ஜி. வாதேவய்யா ஆவார். கல்வியறிஞரும் தேச பக்தருமான திருவாளர் பிள்ளைக்குச் செக்கிழுக்கும் வேலையைக் கொடுத்த செய்தியைஅறிந்த தேச பக்தர்கள் கொதிப்படைந்தார்கள். பிள்ளையார் மீது ஆதியில் அதிகாரிகள் வழக்குத் தொடர்ந்தது பற்றிக் கொதிப்படைந்த திருநெல்வேலி மக்கள் கலகம் விளைவித்தது போலவே, கோயம்புத்தூர்ச் சிறையில் அதிகாரிகள் பிள்ளையையும் மற்றவர்களையும் கொடுமையாக நடத்தியது பற்றிக் கொதிப்படைந்த கைதிகள் கலகம் விளைவித்தார்கள். இந்தக் கலகத்தை யயாட்டி ஏற்பட்ட வழக்கில் , திருவாளர் பிள்ளை சிறைக்கோலத்துடன் சென்று கோவை ஜில்லா நீதி ஸ்தலத்தில் கொடுத்த சாட்சியம் குறிப்பிடத் தகுந்தது.

திருவாளர் பிள்ளை சிறைவாசம் செய்ய நேர்ந்த காரணத்தால் தென்னாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் இருந்த கைதிகளுக்கெல்லாம் நல்ல காலம் பிறந்தது. சிறைக் கைதிகளுக்கு வேலை கொடுக்கும் முறையிலும் உணவு கொடுக்கும் முறையிலும் சீர்திருத்தம் ஏற்படுமாறு காலஞ்சென்ற சென்னைச் சட்டசபை அங்கத்தினர் குத்தி கேசவப் பிள்ளை சட்டசபை வாயிலாகப் பெரிதும் போராடினார். காட்டிலாக ஊழல்களையும் சிறைச் சாலை ஊழல்களையும் ஒழிப்பதிலேயே அவர் நாளெல்லாம் உழைத்து வந்தார். அந்தக் காரணத்தால் , கேசவப் பிள்ளை ஒன்று காட்டில் இருப்பார் அல்லது சிறையில் இருப்பார் என்று நண்பர்களும் அதிகாரிகளும் விகடமாகக் கூறுவது உண்டு.

தமிழ்த் தொண்டு

தேசத் தொண்டு காரணமாகச் சிறைக் கோட்டம் புகுந்த சிதம்பரம் பிள்ளை, சிறைக்கோட்டத்தில் ஓய்ந்த நேரங்களில் தாம் இளமை முதலே ஆர்வம் கொண்டிருந்த தமிழ்த்தொண்டில் சித்தம் செலுத்தி வந்தார். ஆங்கில நாட்டு ஞானியான ஜேம்ஸ் ஆலன் என்பார் இயற்றிய சில அரிய நூல்களை ‘மனம் போல வாழ்வு’, ‘அகமே புறம்’, ‘வலிமைக்கு மார்க்கம்’ என்ற பெயர்களுடன் மொழி பெயர்த்தார். வேறு சில தமிழ் நூல்களையும் இயற்றினார். இவற்றுள், ‘மனம் போல வாழ்வு’ பிள்ளையவர்கள் சிறையில் இருந்த பொழுதே, இந்தப் புஸ்தகத்தின் காகிதம், அச்சு, மை, கட்டடம் அனைத்தும் சுதேசியம் என்ற குறிப்புடன் வெளியாயிற்று. மற்ற நூல்களைப் பிள்ளையவர்கள் சிறையிலிருந்து வெளிவந்த பின்னர் வெளியிட்டார். பொது மறையான திருக்குறளை நன்றாக ஆராய்ச்சி செய்வதற்குரிய தருணம் அவருக்குச் சிறைக் கோட்டத்தில் கிடைத்தது.
திருக்குறள் மீது சிதம்பரனாருக்கிருந்த ஆர்வம் சொல்லும் தரத்தன்று. ஆயிரத்து முந்நூற்று முப்பது அருங்குறளையும் பாயிரத்தோடு படியாத ஆண் மகனோ பெண் மகனோ தமிழ்நாட்டில் இருத்தல் ஆகாதென்றும் , தமிழ் வேதமான திருக்குறளைப்படியாத தமிழ் மக்கள் தமிழ் மக்கள் ஆகார் என்றும் பிள்ளையவர்கள் அழுத்தமாகக் கூறுவது வழக்கம்.

விடுதலை

சுமார் நாலரை ஆண்டுகள் சிறைக் கோட்டத்தில் இருந்த பிள்ளை 1912 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் விடுதலையடைந்தார். விடுதலை அடைந்தவுடன் பிள்ளை, குடும்பத்துடன் நேரே சென்னைக்கு வந்தார். சென்னை நகரத்திற்கு நடுநாயகமாக விளங்கும் சிந்தாத்திரி பேட்டையில் அருணாசல நாயகன் வீதியில் சுமார் இரண்டு ஆண்டுகள் வாழ்ந்து வந்தார். பின்னர் சில காலம் திருமயிலையிலும், பிரம்பூரிலும் வாழ்ந்திருந்தார். பிள்ளை விடுதலை அடைந்து வந்த பொழுது, சென்னையிலுள்ள தலைவர்களில் பலரும் அவரைத் தீண்டாதாராகவே கருதினார்கள். திலகர் பெருமான் தமது சுயராஜ்ய நிதியிலிருந்து மாதந்தோறும் அனுப்பி வந்த ஐம்பது ரூபாயே அவருக்கு பெரிய ஆதரவா யிருந்தது. பிரம்பூரில் இருந்த பொழுது பிள்ளை தமது குடும்பத்தை நடத்தும் பொருட்டு அரிசி வியாபாரமும், நெய் வியாபாரமும் கூடச் செய்து பார்த்தார். சில காலம் தமிழ்ப் பத்திரிகைளில் ஆசிரியராகவும் இருந்தார்.
பிள்ளை சென்னையில் வாழ்ந்து வந்த பொழுது பலருக்குத் தமிழ்க் கல்வி பயிற்று வித்தார். பிள்ளையாரிடம் திருக்குறள் பயின்றவர்களில், இப்பொழுது சிதம்பரம் நந்தனார் மடத்துத் தலைவராக விளங்கும் சகஜானந்த சுவாமி யாரையும், லோகோபகாரி பத்திராசிரியராயிருந்த பரலி சு. நெல்லையப் பரையும் குறிப்பிடலாம். பிள்ளை சென்னையை அடுத்த பிரம்பூரில் இருந்த பொழுது, அங்கு வாழ்ந்து வந்த பெருந் தமிழறிஞரான திருமணம் செல்வகேசவராய முதலியாருடன் தமிழாராய்ச்சி செய்து வந்தார். திருக்குறள் மணக்குடவர் உரையை வெளியிட்டதுடன், திருக்குறளுக்குத் தாமே புதிய உரை ஒன்றையும் இயற்றி வெளியிட்டார். பழந்தமிழ் இலக்கியமான தொல்காப்பியப் பொருள் அதிகாரத்திற்கு, உரையாசிரியர் இளம்பூரணர் எழுதிய கிடைத்தற்கரிய உரையையும் பிள்ளை பிற்காலத்தில் வெளியிட்டார். ‘இன்னிலை’ என்ற பழந்தமிழ் நூலையும் அவர் வெளியிட்டிருக்கிறார். சுதேசிக் கிளர்ச்சி தூத்துக்குடியில் மும்முரமாயிருந்த பொழுது பரலி சு. சண்முகசுந்தரம் பிள்ளையைப் பத்திராசிரியராகக் கொண்டு, ‘சுயராஜ்யம்’ என்ற பத்திரிகையைத் தொடங்க விரும்பி, அதற்குரிய முன்னேற்பாடுகளெல்லாம் செய்தார். முதல் இதழில் வெளியிடுவதற்காக எழுதிய உணர்ச்சிமிக்க தலையங்கக் கட்டுரை இன்னும் என் நினைவில் இருக்கிறது. ஆனால் பத்திரிகை தொடங்குவதற்கு முன்பே அவர் மீது வழக்குத் தொடங்கிவிட்டதால் பத்திரிகை நின்றுவிட்டது. பிள்ளை சிறை சென்று மீண்ட பின், இந்தியாவின் நியாயம் உலகத்தாருக்கெல்லாம் விளங்குமாறு உலகத்திலுள்ள நாற்பது முக்கிய பாஷைகளில் பத்திரிகை வெளியிட வேண்டுமென்று கருதினார். இக் கருத்து அக்கால நிலையில் முடியாமற் போயினும் அவரது பெரு நோக்கம் கருதற்பாலது.
பிள்ளை சிறையிலிருந்து வெளிவந்த பொழுது அரசியல் உலகம் அமைதியற்றிருந்தது. அப்பொழுது திலகர் சுயராஜ்ய சங்கம் தோன்றியது. அதில் பிள்ளை சேர்ந்து உழைத்தார். சென்னையில் தொழிலாளர் இயக்கத்திலும் சேர்ந்து வேலை செய்தார். சென்னையில் தொழிலாளர் மிகுதியாக வாழும் பெரம்பூர்ப் பட்டாளத்தில் சிதம்பரம் பிள்ளை (அவன்யூ) சாலை ஒன்றும், விளையாட்டு மைதானம் ஒன்றும் ஏற்பட்டிருப்பதே அதற்குச் சான்று. சில காலம் கோயம்புத்தூர்த் தொழிலாளர் சங்கத்திலும் அவர் வேலை செய்தார்.
மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பிள்ளைக்கு அதிக நம்பிக்கை இல்லை. ஆயினும் அந்த இயக்கத்திற்கு மாறாக அவர் எதுவும் செய்யவில்லை. அவர் தமக்கு சரியயன்று தோன்றிய வழிகளில் தேசத் தொண்டு செய்து வந்தார்.

மீண்டும் வக்கீல்

வக்கீல் தொழிலில் விருப்பமற்றவரும், ‘வக்கீலாய் நின்று வழிப்பறியே செய்கின்ற திக்கிலார்’ என்று பாடியவருமான சிதம்பரம் பிள்ளை , தமது குடும்ப நிலை காரணமாக அதிகாரிகள் அனுமதி பெற்று 1922 ஆம் ஆண்டு மீண்டும் வக்கீல் ஆனார். தூத்துக்குடியிலும் பின்னர் கோவிற்பட்டியிலும் , கடைசியாக மீண்டும் தூத்துக்குடியிலும் சுமார் பத்தாண்டுகள் வரை அவர் வக்கீல் தொழில் புரிந்தார். பிள்ளை கோவிற்பட்டியில் இருந்த பொழுது, இராஐதுவே­க் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஸ்ரீமான்களான எம்.எஸ். சுப்ரமணிய ஐயர், என். சோமயாஜூலு முதலிய இளந்தேசபக்தர்களுக்கு உண்டி, உடை அளித்து ஆதரித்ததுடன் , அவர்களுக்காக நீதிஸ்தலத்தில் வலிய தோன்றி வாதித்த செய்தியை தமிழ்நாட்டார் மறந்திருக்க மாட்டார்கள். பிள்ளை தூத்துக்குடியில் வக்கீலாயிருந்த பொழுது, ஊக்கமும் உழைப்பும் உருவெடுத்தது போல விளங்கிய அவருடைய மூத்த மகன் உலகநாதன் தனது இருபதாவதாண்டில் காலஞ்சென்றான். அதனால் அவர் குடும்பத்திற்குத் தீராத துயரமும் நஷ்டமும் விளைந்தன.

இறுதி

பிள்ளை சிறந்த உடற்கட்டுடையவராயினும், ஐந்தாண்டு அநியாயச் சிறைவாசம் அவர் உடல்நலத்தைப் பெரிதும் கெடுத்து விட்டது. சிறையிலிருந்து விடுதலை அடைந்த பின்னர், வருவாயின்றி வறுமையில் வருந்த நேர்ந்தது. 1932 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி பிள்ளையின் அறுபதாண்டு நிறைவு விழா நடந்தது. அதனையயாட்டி, அவரிடம் தேச மக்களுக்குள்ள நன்றி யறிதலுக்கு அறிகுறியாக அவருக்கு ஒரு பணப்பை அளிக்க வேண்டுமென்று டாக்டர் வரதராஜூலு நாயுடு முதலிய நண்பர்கள் முயன்றார்கள். அந்த நிதிக்குப் பல நண்பர்கள் மனமுவந்து பொருளுதவி புரிந்தார்களாயினும், அதற்குப் போதிய அளவு பொருள் சேரவில்லை. பிள்ளையின் தேசத் தொண்டைத் தற்காலத் தமிழ் மக்கள் மறந்து விட்டமையே அதற்குக் காரணம். பெரியோர்கள் இந்த உலகத்தில் இருக்கும் பொழுது அவர்களை ஏறிட்டுப் பாராமல் , அவர்கள் இறந்த பின்னர் அவர்களைப் பற்றி வியந்தோதித் திருவிழாக் கொண்டாடும் வழக்கம் தற்காலத் தமிழ்நாட்டில் மிகுதியாயிருக்கிறது. எனவே, தேசத்திற்காகப் பலவித அரிய தியாகங்கள் செய்த சிதம்பரம் பிள்ளையும், கவி சுப்பிரமணிய பாரதியாரும் பிறகும் அவர்கள் வாழ்நாளில் வருந்த நேர்ந்தமை வியப்பாகா. முதுமையும் நோயும் வறுமையும் வருத்த, பிள்ளை தாது ஆண்டு கார்த்திகை மாதம் நாலாம் தேதி (18.11.1936 ) புதன்கிழமையன்று வறுமையும் சிறுமையுமற்ற பெரிய உலகம் புகுந்தார். பிள்ளையார் இவ்வுலக வாழ்வு நீத்தபொழுது அவருக்கு வயது அறுபத்தைந்தே.

குணநலம்

சிதம்பரம் பிள்ளை தேசபக்தியில் சிறந்தவர். தியாக புத்தியில் உயர்ந்தவர். பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய், அஸ்வினி குமார தத்தர் முதலிய உத்தம தேச பக்தர்கள் திருக்கூட்டத்தில் அவர் சேர்தற்கு உரியவர். அவர் தமிழ் அன்பர். தமிழ் அறிஞர். பெருங் கவிஞரல்லாராயினும், அவர் தமிழ்க்கவி. தமிழ் வளர்ப்பதை அவர் தமது வாழ்நாளில் பெருங்கடமையாகக் கொண்டிருந்தார். சைவத்தில் உறுதியான பற்றுக் கொண்டிருந்தார். சைவ சமயமும் சைவ உணவியக்கமும் வையத்திற்கு உய்வளிக்கத் தகுந்தன என்பது பிள்ளையின் கருத்து. ஆயினும் அவர் ஜாதி , சமய வேற்றுமையற்ற சமரசவாதி. அவர் அன்பிலும் ஜீவகாருண்யத்திலும் சிறந்து விளங்கினார். விருந்தோம்பல் என்ற சிறந்த குணம் அவரிடம் சிறந்து விளங்கியது. ஆதியில் வக்கீல் தொழில் செய்து வருவாய் மிகுந்து விளங்கிய காலத்திலும் பிற்காலத்தில் அவர் சிறையிலிருந்து வந்த பின்னர் வருவாய் குறைந்திருந்த காலத்திலும் பிள்ளை வீடு ‘சத்திரமா’கவே விளங்கியது. மேன்மக்களிடம் சிறந்து விளங்க வேண்டிய உயர் குணங்கள் பல அவரிடம் சிறந்து விளங்கின. பேரன்பும், பேரூக்கமும், பேருழைப்பும், பெருந்தியாகமும் கொண்ட பெருந்தமிழராகப் பிள்ளையார் விளங்கினார். பெருந்தமிழர் திருக்கூட்டத்தில் அவர் ஓர் சிறந்த எடுத்துக் காட்டாக விளங்கினார்.
நன்றியறிதல் என்ற சிறந்த குணம் பிள்ளையாரிடம் சிறந்து விளங்கியது. ஆதியில் சுதேசிக் கப்பல் கம்பெனி தொடங்கும் முயற்சியில் தம்முடன் உடனின்று உழைத்த தூத்துக்குடி வியாபாரிகளான காலஞ்சென்ற சித. ஆறுமுகம் பிள்ளையவர்கள் பெயரை அவர் தம் இரண்டாவது புதல்வருக்கு இட்டார். பிள்ளையார் சிறைக்கோட்டத்தில் இருந்த பொழுதும், விடுதலை அடைந்த பின்னரும் , அவருக்குப் பொருளுதவி புரிந்து வந்த தென் ஆப்பிரிக்கச் செல்வரான தில்லையாடி வேதியப்பிள்ளையயன்ற நண்பரின் பெயரைத் தம் இரண்டாவது புதல்விக்கு இட்டார். (வேதவல்லி யயன்ற இப்புதல்வியும் அதன் தமக்கையான ஞானாம்பாளும் மண வாழ்க்கையில் வாழ்ந்திருந்து சில நன்மக்களைப் பெற்றுச் சில ஆண்டுகளுக்கு முன் இளவயதில் காலஞ்சென்றனர்.)

பிள்ளையவர்கள் கோவைச் சிறைக் கோட்டத்தில் இருந்த பொழுது, அவருக்கு அரும்பெருந்துணைவராக அமர்ந்த கோவைப் பெரியாரான திருவாளர் சி.கே. சுப்ரமணிய முதலியார் பெயரைத் தம் மூன்றாம் புதல்வருக்கு இட்டார். வக்கீலாயிருந்த பிள்ளையவர்கள் சிறைக் கோட்டம் சென்று வெளிவந்த பின், அரசியல் குற்றம் செய்தவர்களுக்கு வக்கீல் உத்யோகம் கிடைப்பது அரிதாயிருந்தது. பிள்ளையவர்கள் விரும்பிய காலத்து அவருக்குத் திரும்பவும் வக்கீல் உத்யோகம் கிடைக்குமாறு செய்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வாலிஸ் துரையின் நினைவைப் போற்றுமாறு தமது கடைசிப் புதல்வருக்கு வாலீசுரன் என்று பெயரிட்டார். பிள்ளை பெற்றுப் பெயரிடுதல் என்பதைத் தமிழ் நாட்டார் பெரு நன்றிக்கு அறிகுறியாகக் கூறுவர். பிள்ளையார் அக்கூற்றை மெய்ப்படுத்தினார்.

நாட்டு மக்கள் நன்றி

சுதேசியயன்றும், சுயராஜ்யம் என்றும் சொல்லவும் மக்கள் அஞ்சியிருந்த தென்னாட்டில் , வந்தே மாதர முழக்கமும் செய்து சுயராஜ்ய உணர்ச்சியை எழுப்பிய பெருந்தலைவரான பிள்ளையவர்கள் வி­யத்தில் தமிழ்மக்கள் போதிய அளவு நன்றி காட்டவில்லையயன்பது உண்மையே. பிள்ளையவர்களின் பெருந்தொண்டை அறிந்த முதியவர்கள் அதனை மறந்து விட்டார்கள். இளைஞர்கள் அதனை அறிய மாட்டார்கள். ஆயினும் பிள்ளையவர்களைத் தமிழ் நாட்டார் முற்றிலும் மறந்து விடவில்லை. சென்னையில் பிள்ளையார் தொழிலாளர் நலத்திற்காக உழைத்ததை நினைவூட்டும் பொருட்டுப் பெரம்பூர்ப் பட்டாளத்தில் சிதம்பரம் பிள்ளை சாலையும், விளையாட்டு நிலையமும் ஏற்பட்டிருப்பதை முன்னரே கூறியிருக்கிறோம். சென்னை ஜில்லா காங்கிரஸ் கமிட்டியாரும் சில ஆண்டுகளுக்கு முன் பிள்ளையவர்கள் முக உருவச் சிலை ஒன்றை நிறுவித் தாங்களும் அவரை மறந்து விட வில்லை யயன்பதைக் காட்டிக் கொண்டார்கள். வேலூர் நகர சபையார் தங்கள் சபை மண்டபத்திற்குச் சிதம்பரம் பிள்ளை மண்டபம் என்று பெயரிட்டுச் சிறந்த முறையில் தங்கள் நன்றியை வெளியிட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வேறு பல இடங்களிலும் சிதம்பரனார் பெயரால் சங்கங்களும் வாசக சாலைகளும் புத்தக சாலைகளும் ஏற்பட்டி ருக்கின்றன.
ஆனால், பெரியோர்களுக்கு நன்றி காட்டுவதென்பது ஞாபகச் சின்னங்களில் அடங்கியிருக்க வில்லை. அப்பெரியோர்களின் அரிய நோக்கங்களை அறிந்து, அவற்றில் ஊக்கம் கொண்டு உழைத்து, அவற்றை நிறைவேற்ற முயல்வதே அவர்களுக்கு உண்மையான முறையில் நன்றி காட்டுவதாகும். வீரத் தமிழராகவும், விடுதலை வீரராகவும் விளங்கிய சிதம்பரம் பிள்ளையின் நினைவைப் போற்ற விரும்பும் தமிழ் மக்கள் தேசம் பல துறைகளிலும் விடுதலை பெறுதற்குரிய நெறியில் உழைக்க வேண்டும் . தமிழ்நாடும் தமிழ்மொழியும் தமிழ் நாகரிகமும் புத்துயிரும் புதுவாழ்வும் பெறுமாறு மனமொழி மெய்களால் தொண்டு புரிதல் வேண்டும். அதற்குரிய அறிவும் திறமையும் பூமிதேவியின் தலைப் பிள்ளையான தமிழ்ப்பிள்ளையிடம் சிறப்பாக அமைந்திருக்கின்றன என்பது தமிழ்ச்சிதம்பரம் பிள்ளையின் தளராத நம்பிக்கையாயிருந்தது, அவரது நம்பிக்கையை நாம் உண்மையாக்க முயல்வோமாக.

வந்தே மாதரம்!

நல்லாண்மை யயன்பது ஒருவற்குத்தான் பிறந்து
இல்லாண்மையாக்கிக் கொளல்.

சிதம்பரம் பிள்ளை திருநாமம் வாழ்க!

(வ.உ.சி கோவை கொடுஞ்சிறையில் வாடிய போது அவர்களுக்கு தொண்டு புரிந்தவர் பரலி சு. நெல்லையப்பர். பாரதியார் உயிர் நீத்த வேளையில் அவரது உடலை மயானத்திற்கு எடுத்துச் சென்றவர்களில் பரலி சு. நெல்லையப்பரும் ஒருவர். தேசபக்தன் இதழில் ஆசிரியராக இருந்தவர். லோகோபகாரி என்ற இதழை நடத்தியவர். அவர் எழுதிய வ.உ.சிதம்பரம் பிள்ளை சரித்திரம் தான் இது).

ஊழ்

ஊழியல்
அஃதாவது, விதியின் இயல்பு.

முப்பத்தைந்தாம் அதிகாரம் - ஊழ்
அஃதாவது, விதி.

ஆகூழாற் றோன்று மசைவின்மை கைப்பொருள்
போகூழாற் றோன்று மடி. (341)

பொருள் : கை பொருள் ஆகு ஊழால் அசைவு இன்மை தோன்றும் -கைப் பொருள் ஆகும் விதியால் சோம்பலின்மை தோன்றும்; கை பொருள் போகு ஊழால் மடி தோன்றும் - கைப் பொருள் போகும் விதியால் சோம்பல் தோன்றும்.

அகலம்: கைப் பொருள் என்பது சிங்க நோக்காக நிற்றலின், அது முன்னரும் பின்னரும் கூட்டி உரைக்கப்பட்டது. கை என்பது துணைப் பெயர். ‘ஆகு’ ‘போகு’ வினைத் தொகைகள்.

கருத்து: நல் விதிக்கு அடையாளம் சோம்ப லின்மை.

பேதைப் படுக்கு மிழவூ ழறிவகற்று
மாகலூ ழுற்றக் கடை. (342)

பொருள்: இழவு ஊழ் (உற்ற கடை) பேதை படுக்கும் -(கைப் பொருளை) இழத்தற்கு உரிய விதி உற்ற இடத்து (அஃது ஒருவனை) அறிவிலனாகச் செய்யும் ; ஆகல் ஊழ் உற்ற கடை அறிவு அகற்றும் - (கைப் பொருள்) ஆகுதற்கு உரிய விதி உற்ற இடத்து (அஃது அவனது) அறிவைப் பெருக்கும்.

அகலம்: ‘உற்றக் கடை’ என்பது முன்னுங் கூட்டி உரைக்கப்பட்டது. இழவூழ், ஆகலூழ் என்பன நான்காம் வேற்றுமையின் குவ் வுருபும் தகுதிப் பொருளும் உடன் தொக்க தொகைகள்.

கருத்து: நல் விதி வந்தக்கால் அறிவு வளரும் ; தீ விதி வந்தக்கால் அறிவு குறையும்.

நுண்ணிய நூல்பல கற்பினு மற்றுந்தன்
னுண்மை யறிவே மிகும். (343)

பொருள்: நுண்ணிய நூல்பல கற்பினும் - (ஒருவன்) நுண்ணிய (பொருள்களை யுடைய) நூல்கள் பலவற்றைக் கற்பினும், மற்றும் தன் உண்மை அறிவே மிகும் -பின்னும் தனது விதியின் அறிவே மிகுந்து நிற்கும்.

கருத்து: ஒருவனுக்கு விதியின் அறிவே மிகுந்து நிற்கும்.

இருவே றுலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு. (344)

பொருள்: உலகத்து இயற்கை இரு வேறு - உலகத்தின்கண் விதி இரண்டு வேறு (வகைப்பட்டது); திரு(வினர் ஆதல்) வேறு தெள்ளியர் ஆதலும் வேறு -செல்வத்தை உடையவராதற்கு (உரிய விதி) வேறு ) அறிவை உடையவ ராதற்கு (உரிய விதி) வேறு.

அகலம்: பின்னர்த் ‘தெள்ளிய ராதல்’ என்று கூறுகின்றமையான், முன்னர்த் திருவினர் ஆதல் என்று கொண்டு பொருள் உரைக்கப்பட்டது. ‘ஆதல்’ இரண்டும் உருபும் பொருளும் உடன் தொக்க தொகைகள்.

கருத்து: செல்வந்த ராதற்கும் அறிவுடைய ராதற்கும் உரிய விதிகள் வெவ் வேறு.

நல்லவை யயல்லாஅந் தீயவாந் தீயவு
நல்லவாஞ் செல்வஞ் செயற்கு. (345)

பொருள்: செல்வம் செயற்கு தீயவும் நல்ல ஆம் - செல்வத்தை ஆக்குதற்குரிய விதிக்குத் தீய செயல்களும் நல்ல செயல்களாம் ; (செல்வம் அழித்தற்கு) நல்லவை எல்லாம் தீய ஆம்‡செல்வத்தை அழிப்பதற்குரிய விதிக்கு நல்ல செயல் களெல்லாம் தீய செயல்கள் ஆம்.

அகலம்: நல்லவை எல்லாம் தீய வாம் என்றமையால், செல்வம் அழித்தற்கு என்பதைச் சொல்லெச்சமாகக் கொண்டு பொருள் உரைக்கப்பட்டது. செயல்என்பதும், சொல்லெச்சமாகக் கொள்ளப்பட்ட அழித்தல் என்பதும் ஆகுபெயர்கள், முறையே அவற்றின் விதிகளுக்கு ஆயினமையால்.

கருத்து: நல்ல விதி யுற்ற விடத்துச் செய்வன எல்லாம் நல்லனவாம் ; தீய விதி யுற்ற விடத்துச் செய்வன எல்லாம் தீயவாம்.

பரியினு மாகாவாம் பாலல்ல வுய்த்துச்
சொரியினும் போகா தம. (346)

பொருள்: பால் அல்ல பரியினும் ஆகா வாம் - விதியால் (தம் முடையன) அல்லாத பொருள்கள் முயன்று வருந்தினும் உண்டாகாவாம். தம உய்த்து சொரியினும் போகா ‡ (விதியால்) தம்முடைய பொருள்கள் (சேய்மைக்கண்) கொண்டு போய் எறியினும் போகா.

அகலம்: ‘வருந்தி யழைத்தாலும் வாராத வாரா ; பொருந்துவன போமினென் றாற் போகா’. -நல்வழி.

கருத்து: விதிப்படி தமக்குரியன தம்மை விட்டு நீங்கா.

வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்குந் துய்த்த லரிது. (347)

பொருள்: வகுத்தான் வகுத்த வகை அல்லால் - (அவரவர் வினைப் பயனை அவரவர்க்கு) வகுத்த இறைவன் வகுத்த படி அல்லாமல், கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது - கோடிப் பொருள் ஈட்டினார்க்கும் துய்த்தல் இல்லை.

அகலம்: துய்த்தல் - அனுபவித்தல். வகுத்தல் - பிரித்தல்.ஈட்டல் - சேமித்தல். தாமத்தர் பாடம் ‘தொகுத்தாலும்’.

கருத்து: தம் விதிக்குத் தக்கபடியே இன்பம் துய்ப்பர்.

துறப்பார்மற் றுப்புர வில்லா ருறற்பால
வூட்டா கழியு மெனின். (348)

பொருள்: உறல் பால ஊட்டா(து) கழியும் என்னின் - பொருந்தற் பகுதியன வாகிய விதிகள் (தமது பயன்களைக் ) கொடாமல் நீங்கும் என்றால், துப்புரவு இல்லார் துறப்பார் - செல்வம் இல்லாதவர் துறப்பார்.

அகலம்: விதிகள் தமது பயன்களைக் கொடாமல் நீங்குதலும் இல்லை, வறிஞர் துறக்கப் போவதும் இல்லை என்றவாறு. இக்குறள் பொய்த்தற் குறிப்பணி. ‘மன்’ அசை. துப்புரவு - நுகர்ச்சிப் பொருள்கள்.

கருத்து: விதிகள் தமது பயன்களைக் கொடாமல் நீங்கா.

நன்றாங்கா னல்லவாக் காண்பவ ரன்றாங்கா
லல்லற் படுவ தெவன். (349)

பொருள்: நன்று ஆம் கால் நல்லவா (க) காண்பவர் -(தாம் முன் செய்த) நல் வினைகள் விளையுங்கால் இன்பங்களாக உணர்பவர், அன்று ஆம் கால் அல்லல் படுவது எவன்-(தாம் முன் செய்த) தீவினைகள் விளையுங் கால் துன்பம் உறுவது யாது காரணம்?

அகலம்: நன்று, அன்று என்பன சாதி யயாருமைப் பெயர்கள்.

கருத்து: இன்பமும் துன்பமும் தம் முன் வினைப் பயன்களே.

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். (350)

பொருள்: ஊழின் பெரு வலி யா உள - விதியைப் போலப் பெரிய வலியையு டையவை எவை உள்ளன? மற்று ஒன்று சூழினும் தான் முந்து உறும் - விதியை மாற்றும் ஒன்றை எண்ணினும் அவ் விதியே முற்பட்டுப் பொருந்தும்.

அகலம்: ஒருவன் விதைத்த வித்தின் விளைவை விட்டு வேறு வித்தின் விளைவை அடைய முடியாதது போல, ஒருவன் செய்த வினையின் பயனை விட்டு வேறொரு வினையின் பயனை அடைய முடியாதென்றார். அஃதாவது, ஒருவன் ஒரு வினையைச் செய்து அதன் பயன் அவனைப் பொருந்தும் காலையில் அப் பயனை மாற்றுதற்கு அவன் விரும்பின், அவனால் அதனை மாற்ற முடியாது. அப் பயனை மாற்றத் தக்க வேறு ஒரு வினையைச் செய்து, அதன் விளைவாகிய வேறு ஒரு விதியை ஆக்கி, அதனால் அப் பயனை மாற்ற வேண்டும். வலியை யுடையவற்றை வலி என்றார்.

கருத்து: விதியைப்போல வலி யுடையது வேறு யாதொன்றும் இல்லை.

ஊழியல் முற்றிற்று.

அறப்பால் முற்றிற்று.