Friday

இளங்குமரனார் உரை -5

வ.உ.சிதம்பரம் திருக்குறள் அறப்பால் உரை நூல் வெளியீட்டு விழா

சிங்கப்பூர் தேசிய நூலக வளாகத்தில் 14.03.2010 அன்று நடைபெற்ற வ.உ.சிதம்பரனார் திருக்குறள் அறப்பால் நூல் வெளியீட்டு விழா - தொகுப்பாசிரியர்  :  கவி
சிறப்பு விருந்தினர்  : முதுமுனைவர் இரா.இளங்குமரனார்
நூல் வெளியிடு :  திரு. வெ.கரு. கோவலங்கண்ணனார்
வாழ்த்துரை : திருமதி புஷ்பலதா நாயுடு, தேசிய நூலக அதிகாரி

Monday

பதிப்புரை


தமிழகத்தில் மயிலாடுதுறையில் 2010 சனவரி 24 ஆம் நாள் அமைச்சர் உ.மதிவாணன் அவர்களாலும் சிங்கப்பூரில் தேசிய நூலகத்தின் ஆதரவிலும் சிங்கப்பூர் தமிழர் சங்கத்தின் ஆதரவிலும் தமிழவேள் நற்பணி மன்ற ஆதரவிலும் 14.03.2010 அன்று வெளியிடப்பட்ட நூலின் அட்டை படம்.


2000 ஆண்டில் திரு. கவி அவர்களால் கையடக்கப்பதிப்பாக வெளியிடப்பட்ட வ.உ.சிதம்பரனார் உரை மற்றும் பாவேந்தர் உரை நூல்களின் அட்டை


வ.உ.சிதம்பரனார் நூலின் தொகுப்பாசிரியர் கவி அவர்களைச் சிறப்பிக்கிறார் சிங்கப்பூர் தமிழர் சங்கத் தலைவர்.



சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட திரு. கோவலங்கண்ணன் அவர்கள் சிறப்பிக்கப்படுகிறார்.



சிறப்புரையாற்றிய முதுமுனைவர் இரா. இளங்குமரனார் சிறப்பிக்கப்படுகிறார்.



சிங்கப்பூர் தேசிய நூலக அதிகாரி திருமதி புஷ்பலதா அவர்கள் வாழ்த்துரை வழங்குகிறார்.



திரு.கோவலங்கண்ணன் அவர்கள் குழந்தைகளுக்கு நூல்களை வழங்குகிறார்.






பதிப்புரை

மறைந்த என்னுடைய தந்தையார் அவர்கள் இந்து அறநிலைய ஆட்சித்துறை முதல் நிலை செயல்அலுவலராக இருந்தவர். எங்கள் குடும்பத்தாருக்கு மட்டுமல்லாமல் உடன் பணியாற்றியவர்களுக்கும் வழிகாட்டியாக இருந்தவர். பொதுவுடைமை இயக்க சிந்தனை யுடையவர். தன்னுடைய கடைசி மகனுக்கு காரல் மார்க்ஸ் என்று பெயர் வைத்தவர். தமிழ் மீதும் பற்றுள்ளவர். எனவே தன்னுடைய ஒரே மகளுக்கு வள்ளுவனின் துணைவியாகக் கருதப்பட்ட வாசுகியின் பெயரை வைத்தார்.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது

என்ற குறளை எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தவர். திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் அதிகாரியாக பணிபுரிந்த காலத்தில் நடைபெற்ற திருவிழா நிகழ்ச்சிக்குத் திருக்குறள் முனுசாமி அவர்களை சொற்பொழிவாற்ற அழைத்திருந்தார். உடன்பாட்டின்படி அவருக்கு மூன்று நாள்கள் தான் சொற்பொழிவு. திருக்குறளாரின் ஆழ்ந்த புலமையினாலும் சொற் பெருக்கினாலும் ஈர்க்கப்பட்ட என் தந்தையார் அவருடைய சொற்பொழிவை மீண்டும் ஒரு மூன்று நாள்களுக்கு நிகழ்த்துமாறு கூறினார். அப்பொழுது என்னுடைய அகவை பதினொன்று அல்லது பனிரெண்டாக இருக்கும். எப்படியோ இந்நிகழ்வு என் நெஞ்சில் ஆழப் பதிந்துவிட்டது.

பள்ளி வகுப்பு பாடப்பகுதியில் மனப்பாடப் பகுதியாக பத்து அல்லது பதினைந்து திருக்குறள்களைப் படித்தால் ஆறு மதிப்பெண்கள் உறுதி என்பதற்காக மட்டுமே பள்ளிகளில் திருக்குறளை மனப்பாடம் செய்தவன் நான். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிக்காக முதல் பத்து அதிகாரங்களை மனப்பாடம் செய்து மூன்றாம் பரிசைப் பெற்றவன். இது தவிர வேறு எந்த ஈர்ப்பும் எனக்கு இல்லை.

சென்னையில் நான் பணியாற்றிய போது திருவல்லிக் கேணி பழைய பொத்தகக் கடையில் ‘வ.உ.சி. கட்டுரைகள்’ என்ற தலைப்பிடப் பட்ட ஒரு சிறு நூலைப் பார்த்தேன். அதில் ‘திருவள்ளுவரின் திருக்குறள்’ என்ற வ.உ.சி எழுதிய கட்டுரையைப் படித்த போதுதான் திருக்குறளுக்கு அவர் உரை எழுதிய செய்தி அறிய முடிந்தது.

அக்காலக்கட்டத்தில் தான் நான் பெரியார் பாதையை நோக்கி சென்று கொண்டிருந்தேன். வ.உ.சி. எழுதிய அக்கட்டுரையில் , ‘கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு மற்றும் நீத்தார் பெருமை ஆகிய மூன்று அதிகாரங்கள் வள்ளுவரால் எழுதப்பட்டவையல்ல’ என்பதைக் குறிப்பிட்டிருந்தார். அதற்கான சான்று களையும் கூறியிருந்தார்.

அக்கட்டுரையையின் முதன்மையானவற்றைத் தொகுத்து 1000 படிகள் அச்சடித்து வெளியிட்டேன். மேலும் அப்போது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஏடான ‘சங்கொலி’ வார இதழில், அதன் அப்போதைய பொறுப்பாசிரியர் க. திருநாவுக்கரசு அவர்கள் ‘திருக்குறளும் திராவிடர் இயக்கமும்’ என்ற ஆய்வுக் கட்டுரையை எழுதி வந்தார். அக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்தன. அதை வெளியிட்டு, நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவினைப் படித்த போது திருக்குறளின் உண்மைப் பொருள் எனக்கு விளங்கப்பெற்றது.

‘பாவேந்தரின் திருக்குறள் உரை’ என்ற நூலையையும் தேடத் தொடங்கினேன். ச.சு. இளங்கோ அவர்கள் வெளியிட்ட அவருடைய ஆய்வுடன் கூடிய நூலை மதுரையில் கிடைக்கப் பெற்றேன். பின்பு புதுச்சேரியில் பணியாற்றிய போது ‘திராவிடர் பேரவை’ நிறுவுநர் திரு. நந்திவர்மன் அவர்களின் தங்கை செங்கமலத்தாயார் அவர்கள் வெளியிட்ட ‘பாவேந்தர் உரை’ என்ற நூலையும் வாங்கினேன்.

கோபிச் செட்டிப்பாளையம் வழக்கறிஞர் திரு. கு.ச. ஆனந்தன் அவர்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் எழுதிய ‘மாநில சுயாட்சி’ என்ற 1000 பக்கங்கள் கொண்ட ஆய்வு நூலை அவரிடமிருந்து வாங்கிப் படித்தேன். ‘திருக்குறள் உண்மைப் பொருள் ’என்று ஆய்வுநூலை பெரியார், புலவர் குழந்தை , பகுத்தறிவு வழி நின்று எழுதியிருக்கிறார். அந்நூலைத் தேடியும் கிடைக்கவில்லை. ஆனால் அவ்வாய்வு நூலுக்குத் தொடக்கமான ‘வள்ளுவரின் மெய்யியல்’ என்ற நூலை புதுச்சேரி இசை, இலக்கண அறிஞர் அய்யா இரா. திருமுருகனார் அவர்களின் ‘பாவலர் பண்ணை’யில் கிடைக்கப் பெற்று வீட்டிற்கு வந்த போதுதான், கு.ச. ஆனந்தன் மறைந்து ஒரு வாரமான செய்தியை அறிந்து, மனமுடைந்தேன்.

வ.உ.சிதம்பரனார் எழுதிய திருக்குறள் உரை நூலைத் தேடியபோதும் உடனடியாக அது கிடைக்கவில்லை. ஒரு பணியின் காரணமாக திருநெல்வேலிச் சென்ற போது சைவசித்தாந்த கழக நூல் நிலையத்தில் அந்நூல் கிடைத்தது. அந்நூல் முழுவதையும் படித்துப் பார்த்தேன். அப்போது ஏற்பட்ட உந்துதலில் அவற்றை தொகுத்து சிறிய நூலாக வெளியிட வேண்டும் என முடிவு செய்தேன்.

வ.உ.சி அவர்கள் திருக்குறள் உரையை பொருள் (பதவுரை), அகலம் (விளக்கம்,இலக்கணக் குறிப்பு,வினாவிடை, மேற்கோள்) மற்றும் கருத்து என்று மூன்று பிரிவுகளாக எழுதியிருக்கின்றார். அதில் அவர் கூறுகின்றார், ‘எனது உரையில் பொருள் என்னும் சொல்லோடு தொடங்கிப் பதவுரை எழுதியுள்ளேன். அகலம் என்னும் சொல்லோடு தொடங்கி இலக்கணக் குறிப்பு, வினாவிடை, மேற்கோள், பாட பேதம் முதலியவற்றைக் குறித்துள்ளேன். கருத்து என்னும் சொல்லோடு தொடங்கிக் கருத்தினைக் கூறியுள்ளேன். உள் உரையைப் படிக்கத் தொடங்கியவர்களில் முன் இலக்கிய இலக்கண ஆராய்ச்சியில்லாதார், முதன் முறை படிக்கும் போது பொருளையும் கருத்தையும் படிக்குமாறும், நூல் முழுவதையும் ஒரு முறை படித்து முடித்து நூலை இரண்டாம் முறை படிக்கும் போது அகலத்தையும் சேர்த்து படிக்குமாறும் வேண்டுகிறோம்’ என்று எனக்கு வழிகாட்டுகிறார். எனவே குறளுக்கான பொருளை மட்டும் தொகுப்பது என்றும், வேண்டிய இடத்தில் அவர் கொடுத்துள்ள விளக்கத்தையும் தொகுப்பது என்றும் முடிவு செய்தேன். அவ்வாறே பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய திருக்குறள் உரையையும் தொகுக்க விரும்பினேன்.
இரண்டு நூல்களையும் நாள்தோறும் திருவல்லிக்கேணியில் உள்ள கண்ணகி சிலையின் கீழ் அமர்ந்து எழுதத் தொடங்கினேன். ஒரு நாள் ‘பாவேந்தரின் உரை’யில் ஓர் அதிகாரமும் மறுநாள் ‘வ.உ.சிதம்பரனாரின் திருக்குறள் உரை’யில் ஓர் அதிகாரமும் தொகுத்து எழுதத் தொடங்கினேன். காலை 6 மணி முதல் 8 மணி வரை நாள்தோறும் செய்து வந்தேன். காலையில் இதமான கடற்கரைக் காற்று வீசுகின்ற வேளையில், கதிரவனின் தோற்றமும் ஒளிக் கதிர்களும் மெல்ல வீசத் தொடங்குகின்ற வேளையில், செல்வர்கள் பலரும் நடிகர்களும் என்னைக் கடந்து நடைப்பயிற்சி மேற்கொள்வார்கள். கதிரவனின் ஒளி வீச்சு அதிகமாக இருக்கும் போது கண்ணகி என்னைக் காத்தாள். இப்படித் தொடங்கிய பணி மூன்று மாதங்கள் தொடர்ந்தது.

சென்னையில் ‘மருத்துவர்’ என்ற சித்த மருத்துவ திங்கள் இதழ் அலுவல கத்தில் பணியாற்றிய போது கணினியில் திருக்குறள் உரையை நானே அச்சடிக்கத் தொடங்கினேன். (அங்குதான் பேராசிரியர் தி.வ. மெய்கண்டார், தமிழில் மருத்துவப் படிப்பு ஏற்படுத்துவதற்காக தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் மருத்துவர் டொமினிக் சுவாமிநாதன் மற்றும் தனித்தமிழ் அறிஞர் புதுச்சேரி க. தமிழமல்லன் ஆகியோரின் தொடர்பு கிடைத்தது). அப்போது புலவர் ந.தி. நஞ்சப்பன் அவர்களின் நட்பினால் அருகில் இருந்த ‘உலகத் திருக்குறள் மையத்தின்’ நிறுவனர் திரு. மோகனராசு அவர்களின் அறிமுகம் கிடைத்தது. புலவர் ந.தி. நஞ்சப்பன் அவர்கள் என்னைத் திரு.மோகனராசு அவர்களிடம் அறிமுகப்படுத்தி வ.உ.சி திருக்குறள் உரையையும் பாவேந்தர் திருக்குறள் உரையையும் கையடக்கப் பதிப்பாக நான் வெளியிடயிருப்பதைத் தெரிவித்தார்.

திரு. மோகனராசு அவர்கள் ‘உலகத் திருக்குறள் மைய’ நிகழ்ச்சி விழாவின் போதே அந்நூற்களை வெளியிட அனுமதியளித்து விழா அழைப்பிதழிலும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் கணினியில் தட்டச்சுப் பணி முடிந்து அச்சுக்கு அணியமாக இருந்தும் பொருளாதார நெருக்கடியால் குறித்த காலத்தில் என்னால் வெளியிட முடியாமல் போயிற்று. இந்நிகழ்வு என் ஆழ் மனத்தை உறுத்திக் கொண்டே இருந்தது.

‘பாவேந்தரின் திருக்குறள் உரையை’ என்னுடைய திருமணத்தின் போது அச்சடித்து வருகை தந்தவர்கள் அனைவருக்கும் அளித்தேன்.

புதுச்சேரியில் நான் பணியாற்றிய போது ‘செந்தமிழர் இயக்கத்தின்’ தலைவர் திரு. ந.மு. தமிழ்மணி அவர்கள் மூலம் வ.உ.சிதம்பரனாரின் திருக்குறள் உரையை வெளியிட விரும்பினேன். அச் சமயம் புதுச்சேரியில் அரசு வ.உ.சிதம்பரனாரின் சிலையைத் திறக்க ஏற்பாடு செய்துகொண்டிருந்தது. அவ்விழாவின் போதே வெளியிட விரும்பினேன். குறிப்பிட்ட காலத்தில் அந்த விழா நடைபெற வில்லை.

பின் என்னுடைய சொந்தச் செலவில் ‘வ.உ.சிதம்பரனார் திருக்குறள் உரை’ தொகுப்பு நூலை அச்சடித்து இலவயமாகவே வழங்கி வந்தேன். ‘வெல்லும் தூய தமிழ்’ ஆசிரியர் திரு. க. தமிழமல்லன் அவர்களிடம் நூறு படிகளைக் கொடுத்து அவருடைய பள்ளி மாணவர்களுக்கு வழங்குமாறு கூறினேன்.

இந்த இரு உரை நூல்களையும் தமிழ்ச் சான்றோர் பேரவை நிறுவனர் அய்யா ஆனா ரூனா அவர்களிடம் அளித்த போது, ‘இனிமேல் நீங்கள் தமிழ் இலக்கியத்திற்குத் தொண்டு செய்யவில்லை என்று யாரும் சொல்ல முடியாது’ என்று மனம் மகிழ்ந்து பாராட்டினார்.
சிங்கப்பூருக்கு வேலைக்காக வந்த போது சென்னை வானூர்தி நிலையத்தில் ‘வ.உ.சி. நூல் திரட்டு’ என்ற நூலை வாங்கினேன். திரும்பத் திரும்ப அதைப் பார்த்த போதும் அதில் ‘வ.உ .சி. யின் திருக்குறள் உரை’ இணைக்கப்படாததைக் கண்டேன். திருக்குறள் முன்னுரையும் முழுப் பகுதி வெளியிடப்படாமல் அரைகுறையாகவே வெளியிட்டிருந்தார்கள். எனவே மனத்தில் ஓர் எண்ணம் உருவாயிற்று.

இந்த நிலையில் நான் ஒரே திங்களில் தமிழகம் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டவுடன், மன அழுத்தம் எனக்கு ஏற்பட்ட போதும், வீட்டில் இருந்த படியே 45 நாள்களில் வ.உ.சிதம்பரனாரின் திருக்குறள் உரை முழுவதையும் கணினியில் தட்டச்சு செய்தேன். திருநெல்வேலியில் நான் வாங்கிய வ.உ.சி.யின் திருக்குறள் உரை நூல் பழைய நூலாக இருந்ததால், பக்கங்கள் எல்லாம் தனித்தனி ஏடாக கிழிந்து போயிற்று. எனவே கடவுள் வாழ்த்து மற்றும் வான்சிறப்பு அதிகாரங்கள் முற்றாகக் கிழிந்து போயிற்று. நீத்தார் பெருமை அதிகாரத்தில் சில குறள்களே கிழியாமல் எஞ்சியிருந்தன. எனவே கிடைத்தவற்றை வைத்து வெளியிட்டுள்ளேன். மேலும் கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு மற்றும் நீத்தார் பெருமை ஆகிய மூன்றும் வள்ளுவர் இயற்றியதில்லை என்ற கருத்தை வ.உ.சி கொண்டிருந்ததால் அவற்றை இடைப்பாயிரம் என்றே தலைப்பிட்டு வெளியிட்டிருந்தார் என்பதையும் இங்குப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

திருக்குறளை எப்படி படிக்க வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகப் பெரியார் அவர்களின் திருக்குறள் தொடர்பான சொற்பொழிவை யும் திருக்குறளுக்கான வரலாறு என்ன என்பதை அறிய நாவலர் நெடுஞ்செழியனின் சொற்பொழிவையும் இணைத்துள்ளேன்.
நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு வ.உ.சிதம்பரனாரின் இந்த எழுத்துக்கள் வெளிவருகின்றன. அவற்றை வெளிக்கொணருவதில் எனக்குப் பெரு மகிழ்ச்சி. தமிழ்ச்சான்றோர்கள், தமிழ் மக்கள் இந்நூலை ஆழ்ந்து படிப்பார்களேயானால் தமிழ் மொழி வரலாறு எப்படியயல்லாம் சிதைக்கப்பட்டிருக்கிறது என்பதும் இலக்கியங்கள் எவ்வாறு உருமாறி வந்திருக்கின்றன என்ற உண்மையும் புரியும்.

கவி
தொகுப்பாசிரியர்,

வ.உ.சி. திருக்குறள் உரை
பெரியார் பட்டறை
7/11 அலிவலம் சாலை, சுந்தரவிளாகம், திருவாரூர்‡610 001, தமிழ்நாடு

வ.உ.சிதம்பரம் பிள்ளை வாழ்க்கை வரலாறு

பரலி சு. நெல்லையப்பர் எழுதிய
வ.உ.சிதம்பரம் பிள்ளை வாழ்க்கை வரலாறு

தோற்றம்

திக்கெலாம் புகழுறும் திருநெல்வேலி யயன்று திருஞான சம்பந்தர் முற்காலத்தில் போற்றிப் புகழ்ந்த திருநெல்வேலி நாட்டைப் பிற்காலத்தில் உலகத்தார் போற்றுமாறு செய்த பல பெரியோர்களில் காலஞ்சென்ற திருவாளர் வ.உ.சிதம்பரம் பிள்ளையும் ஒருவர். திருநெல்வேலி நாட்டிற்கு மட்டுமின்றித் தென்னாடு முழுமைக்குமே பெரியோர்களில் சிதம்பரம் பிள்ளை தலைசிறந்தவர்.

திருநெல்வேலி ஜில்லாவில், அக்காலத்தில் கும்பினி சர்க்காரை எதிர்த்துக் கலகம் செய்து பேர்பேற்ற கட்டபொம்மு நாயகன் அரசாண்ட பாஞ்சாலங் குறிச்சியைத் தனக்கு அருகே கொண்ட ஒட்டப்பிடாரம் என்ற சிற்றூரில் , சைவ வேளாளர் குலத்தில் , ஆங்கீரச ஆண்டு, ஆவணி மாதம், 22 - ந் தேதி வியாழக்கிழமையன்று அஸ்த நட்சத்திரத்தில் (கி.பி.1872, செப்டம்பர் மாதம் 5-ந் தேதி) சிதம்பரனார் பிறந்தார். அவர் தந்தையார் வ.உலகநாத பிள்ளை, எட்டையபுரம் ஸமஸ்தான வக்கீலாக விளங்கினார். முதலில், தான் பிறந்த ஊரிலும், பின்னர் தான் பேரும் புகழும் பெறுவதற்கு உரியதாகத் திகழ்ந்த தூத்துக்குடியிலும், அதற்குப் பின்னர் திருநெல்வேலியிலும் சிதம்பரனார் கல்வி கற்றார். இறுதியில் திரிசிரபுரத்தில் வக்கீல் உத்தியோகத்திற்குரிய கல்வியைக் கற்றார். அக்காலத்தில் ஆங்கிலத்தில் மெட்ரிக்குலே­ன் என்று வழங்கிய வகுப்பு வரை பயின்று அதில் தேர்ச்சிப் பெற்றார். 1895 ம் ஆண்டு, அவர் வக்கீல் பரீட்சையில் தேறினார். இளமையில் நம் சிதம்பரம் பெற்றோருக்கு அடங்காத முரட்டுப் பிள்ளையாகவே விளங்கினார்.

இளமையிலேயே பொதுநல ஊக்கத்துடன் விளங்கிய சிதம்பரனார், தம் தந்தையார் மேற்கொண்டிருந்த வக்கீல் உத்யோகத்தையே தாமும் நாடினார். வக்கீல் தொழிலில் பிள்ளையார் பொருள் வருவாய் ஒன்றை மட்டும் கருதாமல், உண்மையில் நியாயவாதியாகவே விளங்கினார். ஏழை மக்கள் வழக்கில் அவர் இலவசமாகவே வேலை செய்வார். அவர் வக்கீலாயிருந்த பொழுது, பொது ஜனங்களைப் பல வழிகளில் வருத்திக் கொண்டிருந்த போக்கிரிகளும் , போலீஸ் உத்யோகஸ்தரும், மற்ற உத்யோகஸ்தரும் தண்டனை பெறுமாறும், உத்யோகம் இழக்குமாறும் செய்திருக்கிறார். பிள்ளை வக்கீலாயிருந்த பொழுது, தண்டத் துறையில் (கிரிமினல்) திறமைசாலியயன்று பேர் பெற்றதுடன், நல்ல வருவாயும் பெற்று வந்தார். அதனால் அவர் தமிழ்ப் புலவர்களையும் ஏழை மக்களையும் பெரிதும் ஆதரித்து வந்தார். அவரிடம் ஆதரவு பெற்ற புலவர்கள் பலர், அவருக்குப் பாமாலை சூட்டி வாழ்த்தியிருக்கிறார்கள்.

பெரியாருக்கு வ.உ.சிதம்பரனார் எழுதிய கடிதம்


தமிழாராய்ச்சி

பிள்ளையார் வக்கீலாயிருந்த பொழுதே சைவ சமய ஆராய்ச்சியில் ஈடுபட்டதுடன், தமிழாராய்ச்சியிலும் ஈடுபட்டிருந்தார். தமிழில் அவர் பெரிதும் விரும்பிக் கற்றுப் போற்றிய நூல், தெய்வத் தமிழ்மறையயன்று வையம் போற்றும் திருக்குறள் ஆகும். சுவாமி வள்ளிநாயகம் என்ற பெரியாருடன் சேர்ந்து ‘விவேகபாநு’ என்ற வேதாந்த மாதப் பத்திரிக்கையைப் பிள்ளையார் சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன் நடத்தினார். ‘விவேகபாநு’ பின்னர் மதுரையிலும், தென் ஆப்பிரிக்கா டர்பன் நகரிலும் சில ஆண்டுகள் நடந்து வந்து, பின்னர் மறைந்து விட்டது.

சுதேசி

வடக்கே, வங்காளத்தில் வங்காளப் பிரிவினையை ஒட்டி அந்நாளில் தோன்றிய சுதேசி இயக்கம் பிள்ளையார் உள்ளத்தைக் கவர்ந்தது. இராமகிருஷ்ண பரமஹம்ஸர் திருக்கூட்டத்தைச் சேர்ந்த அபேதானந்தர், இராமகிருஷ்ணாந்தர் போன்ற பெரியோர் பழக்கம், பிள்ளை உள்ளத்தில் இருந்த சுதேசி ஊக்கத்தை வளர்த்து விட்டது. அதன் பயனாகப் பிள்ளையார் தூத்துக்குடியில் தருமசங்கம் என்ற நெசவுச் சாலையையும் சுதேசிப் பண்ட சாலை ஒன்றையும் நிறுவினார். காங்கிரஸ் இயக்கத்திலும் ஊக்கம் கொண்டு உழைக்கத் தொடங்கினார். சொற்பொழிவு வாயிலாகச் சுதேசிப் பிரச்சாரமும் செய்தார். தமிழ்நாட்டில் பொதுக்கூட்டம் கூடிப்பேசும் முறையைப் பிரபலப் படுத்தியவர் பிள்ளையே ஆவார். பிள்ளை திறமையான பேச்சாளரானமையால், அவர் பேச்சுக்கு நாட்டு மக்களிடம் நல்ல செல்வாக்கு ஏற்பட்டது.

நம் தேசத் தலைவர்களில் திலகர் பெருமானிடம் பிள்ளைக்கு தெய்வ பக்தி ஏற்பட்டிருந்தது. 1907 -ம் ஆண்டு சூரத் நகரில் நடந்த காங்கிரஸ் மகாசபைக்கு, ஸ்ரீமான் பிள்ளை இப்பொழுது புதுவையில் ஸ்ரீ அரவிந்தாசிரம வாசியாயிருக்கும் பெரியாரான சென்னை வக்கீல் எஸ்.துரைசாமி ஐயர், காஞ்சி வரதாச்சாரியார் , கவி சுப்பிரமணிய பாரதியார், வி.சர்க்கரைச் செட்டியார் முதலிய பல நண்பர்களுடன் சென்றார். அங்கே நடந்த ஒரு சமரச ஏற்பாட்டில், தென்னாட்டு மதவாதிகள் கூட்டத்தின் தனிப் பிரதிநிதியாக, காலஞ்சென்ற சென்னைச் செல்வர் வி. கிருஷ்ண சுவாமி ஐயரையும் அமிதவாதிகள் என்ற தீவிர தேச பக்தர் திருக்கூட்டத்தின் பிரதிநிதியாக நமது சிதம்பரனாரையும் தேர்ந்தெடுத்தார்கள் என்றால் அவருக்கு அந்நாளில் ஏற்பட்டிருந்த பெருமதிப்பை சொல்ல வேண்டுமா?

சுதேசிக் கப்பல் கம்பெனி

தூத்துக்குடி, தமிழ்நாட்டின் தென்கோடியில் உள்ள ஒரு துறைமுகப்பட்டினம். தென்னாட்டிலிருந்து இலங்கைக்குச் செல்லும் பிரயாணிகளும், சரக்குகளும் அக்காலத்தில் தூத்துக்குடி வழியாகவே கப்பல் ஏறிச்செல்ல வேண்டும். எனவே, அது பெரிய வியாபார ஸ்தலமாக விளங்கியது. தென்னாட்டுச் சரக்குகளைக் கொழும்புக்கு ஏற்றுமதி செய்து அனுப்பும் வியாபாரிகள் அங்கே மிகுதி. ஆனால் ஆங்கில கப்பல் கம்பெனியார் தூத்துக்குடிச் சுதேசி வியாபாரிகளை மதியாமல் தாங்கள் இட்டதே சட்டம் என்று காரியம் நடத்தி வந்தார்கள். சுதேசி வியாபாரிகள் பிள்ளையாரிடம் முறையிட்டார்கள். விதேசிக் கப்பல் கம்பெனி முதலாளிகளின் அநியாயங்களையும், சுதேசி வியாபாரிகளின் குறைகளையும் கண்ட பிள்ளை, தூத்துக்குடி சுதேசிக் கப்பல் கம்பெனி ஒன்றைத்தொடங்குவதென்று முடிவு செய்தார். தென்னாட்டு வியாபாரிகள், செல்வந்தர்கள், தேச பக்கதர்களின் ஆதரவு பெற்றுப் பிள்ளை சுதேசிக் கப்பல் கம்பெனியைத் தொடங்கி விட்டார். பங்கு ஒன்றுக்குப் பத்து ரூபாய் வீதம் பத்து இலட்ச ரூபாய் மூலதனத்துடன் சுதேசிக் கப்பல் கம்பெனி 1905 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. 1906 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி கம்பெனி பதிவு செய்யப்பட்டது.

முற்காலத்தில் கப்பலோட்டிக் கடாரத்தை வென்ற தமிழ்நாட்டில், ரோமாபுரிக்கு முத்தும் பவளமும் மிளகும் அனுப்பிய தமிழ்நாட்டில், சாவகத்திலும் காம்போஜத்திலும் சைவமும் வைணவமும் தமிழும் கமழுமாறு செய்த தமிழ்நாட்டில் பிற்காலத்தில் முதல் முதல் கப்பலோட்டிய பெருமை சிதம்பரனாரைச் சேர்ந்தது. பெருஞ்செல்வராயின்றிச் சிறிய வக்கீலாயிருந்த பிள்ளை, அக்காலத்தில் கப்பல் கம்பெனி ஒன்றை நிறுவிய செயல் செயற்கரும் செயலென்றே சொல்ல வேண்டும். காலஞ்சென்ற பாலவநத்தம் ஜமீன்தாரும் மதுரைத் தமிழ்ச் சங்கத் தலைவருமான உயர்திருவாளர் பாண்டித்துரைத் தேவரும் தூத்துக்குடியிலும் திருநெல்வேலியிலும் பெருஞ்செல்வராக விளங்கும் கோபாலசாமி நாயுடு குடும்பத்தாரும் தூத்துக்குடியில் பெருஞ்செல்வராக விளங்கும் சிவ குடும்பத்தாரும் வேறு சில செல்வர்களும் கப்பல் கம்பெனி ஏற்படுத்துவதில் பிள்ளைக்குப் பேராதரவு புரிந்தவர்கள். வந்தே மாதர முழக்கமும், சுதேசி இயக்கமும் உச்ச நிலையில் இருந்த அக்காலத்தில் , தென்னாட்டு மக்கள் மட்டுமின்றி , பாரத தேசத்தின் பல பகுதிகளிலும் உள்ள மக்களும் , அலை கடலுக்கப்பால் தொலை நாடுகளில் வாழும் இந்திய மக்களும் தேசபக்தி உணர்ச்சி மிகுந்தவர்களாய், சுதேசிக் கப்பல் கம்பெனியில் பங்கெடுத்துக் கொண்டு, அதற்குப் பேராதரவு புரிந்தார்கள். சோழ நாட்டிலும் பாண்டி நாட்டிலும் பல தாய்மார்கள் கூடச் சிதம்பரனார் மீது தெய்வ பக்தி கொண்டவர்களாய், தங்கள் வாழ்நாளில் சேர்த்து வைத்திருந்த பொருள்களைச் சுதேசிக் கப்பலுக்கென்று உதவினார்கள்.

போட்டி

சுதேசிக் கப்பல் கம்பெனி ஒன்று தோன்றிய வி­யம் , அதுவரை தனியரசு செலுத்தி வந்த விதேசிக் கப்பல் கம்பெனியாருக்கும் அவர்களை ஆதரித்து வந்த அதிகாரிகளுக்கும் பொறாமையும் கோபத்தையும் விளைவித்தது. எனவே குழந்தை பருவத்தில் இருந்த சுதேசிக் கப்பல் கம்பெனியை கொல்லுவதற்கு அவர்கள் வழி தேடினார்கள். விதேசிக் கம்பெனியார் ஜனங்களுக்கும் சரக்குகளுக்கும் ஏற்பட்டிருந்த கப்பல் கட்டணங்களைப் படிப்படியாகக் குறைக்கத் தொடங்கினார்கள். தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் ஐந்து ரூபாயாக ஏற்பட்டிருந்த (மூன்றாவது வகுப்புப் பிரயாணிகள்) கட்டணம், முக்கால் ரூபாய் வரை இறங்கியதென்றால் போட்டியின் கடுமையைச் சொல்ல வேண்டுமா? நூற்றுக்கணக்கான கப்பல்களுடன், பல துறைமுகங்களில் பல ஆண்டுகள் தனிக்காட்டு ராஜாவாகக் கொள்ளை இலாபம் திரட்டி வந்த விதேசிக் கப்பல் கம்பெனியார் இலவசமாகக் கூட ஆட்களை ஏற்றிச் செல்லலாம். ஆனால் இரண்டே கப்பல்களுடன் , குழந்தைப் பருவத்தில் இருந்த சுதேசிக் கம்பெனிக்கு இந்தப் போட்டி மிகவும் கொடுமையாக இருந்தது. ஆயினும், சுதேசிக் கம்பெனி தைரியமாக வேலை செய்து வந்தது. இந்த நிலையில் கப்பல் கம்பெனிக்கு உயிராக விளங்கிய பிள்ளையை எவ்வாறாயினும் அடக்கிவிட வேண்டுமென்று எதிர்க்கட்சியாரும், அவர்களுக்கு ஆதரவாயிருந்த அதிகாரிகளும் முயன்றார்கள். அவருக்கு நயமாகவும் பயமாகவும் யோசனை கூறினார்கள்.

அந்நாளில் பிள்ளை பிறரது நய வார்த்தைகளுக்கு இணங்கியிருந்தாரானால், அவர் மிகப் பெரிய செல்வராயிருத்தல் கூடும். அவருக்குப் பிற்காலத்தில் ஏற்பட்ட வறுமை ஏற்பட்டிராது. ஆனால் பிள்ளை உறுதியுடன் நின்றார்.

தொழிலாளர் கிளர்ச்சி

தூத்துக்குடியில், கோரல் மில்ஸ் என்ற ஹார்வி கம்பெனியாரின் பருத்தி ஆலையில் முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் வேற்றுமை ஏற்பட்டது. அதன் பயனாகத் தென்னாட்டிலே முதல் முதலாகத் தூத்துக்குடியில் வேலை நிறுத்தம் ஏற்பட்டது. அதில் பிள்ளை தலையிட்டுச் சமரசம் செய்ய முயன்றார். வேலையிழந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்களையும் அவர்கள் குடும்பங்களையும் ஆதரிக்க வேண்டிய பொறுப்பும் அவருக்கு ஏற்பட்டது. செல்வர்களிடமும் ஏனைய பொது ஜனங்களிடமும் பொருள் சேர்த்து அவர்களுக்கு ஆதரவு புரிந்தார்.

சுதேசிக் கிளர்ச்சியின் உச்ச நிலை

அந்நாளில் தூத்துக்குடியில் சுதேசி உணர்ச்சி உச்ச நிலையில் இருந்தது. சுதேசி இயக்கத்திற்கு விரோதமாக இருந்த மனிதர்களைப் பொது ஜனங்கள் பகிஷ்காரம் செய்ய முற்பட்டார்கள். தூத்துக்குடியில் வக்கீலாயிருந்த பிராமண நண்பர் ஒருவருக்கு மருத்துவ சகோதரன் ஒருவன் ­வரம் செய்து கொண்டிருந்த பொழுது, ஐயங்கார் சிதம்பரனாரின் சுதேசி ஊக்கத்தைப் பெரிதும் இகழ்ந்து பேசினார். ­வரம் செய்து கொண்டிருந்த மருத்துவ சகோதரன் உடனே கத்தியை மடக்கிப் பெட்டியில் வைத்துவிட்டு ஐயங்காரை அரைகுறை ­வரத்தில் விட்டுவிட்டுப் போய் விட்டான். ஐயங்கார் சுவாமிகள் அன்று இரவே போலீஸ் காவலுடன் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்று, மறுநாள் காலையில் தமது திருப்பதி ­வரக் கோலத்தை நீக்க வேண்டியதாயிற்று. வங்காளத்து நவமணிகளில் ஒருவரான காலஞ்சென்ற அஸ்வினி குமார தத்தரின் தலைமையில் பாரிசால் நகரம் சுதேசி ஊக்கத்தில் வங்காளத்திலேயே சிறந்து விளங்கியது. (சுதேசி ஊக்க மிகுதியால் பாரிசாலில் பரதேசித் துணி கிடைப்பது அரிதாய் விட்டது. அக்காலத்தில் பாரிசாலில் இருந்த ஜில்லா கலெக்டருக்கு ஒரு கெஜம் மல் வேண்டியத Vயிருந்தது. அஸ்வினி குமார தத்தர் உத்தரவு கொடுத்த பின்னரே கலெக்டருக்கு ஒரு கஜம் பரதேசி மல் துணி கிடைத்ததாம்). சிதம்பரம் பிள்ளை தலைமையில் சிறந்து விளங்கிய தூத்துக்குடியைத் தென்னாட்டு பாரிசால் என்று தேச மக்கள் போற்றினார்கள்.

அடக்குமுறை

சிதம்பரம் பிள்ளையை எவ்வாறாயினும் அடக்கிவிட வேண்டுமென்று காலம் பார்த்திருந்த அக்கால அதிகாரிகள், அவரது பேச்சுகளால் தூத்துக்குடியில் குழப்பம் விளையுமென்று கூறி அவர் மீதும் அவரது நண்பர்களாகிய சுப்ரமணியம் சிவா, பத்மநாப ஐயங்கார் மீதும் திருநெல்வேலி ஜில்லா கலெக்டர் முன் ஜாமீன் வழக்குத் தொடர்ந்தார்கள். அச் சமயத்தில் சென்னையில் இந்தியா ப் பத்திரிக்கையை நடத்தி வந்த ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதியார் திருநெல்வேலிக்கும் தூத்துக்குடிக்கும் வந்தார்.

சிதம்பரனார் வழக்கு திருநெல்வேலி ஜில்லாவில் மட்டுமல்ல, தென்னாட்டில் மட்டுமல்ல, காஷ்மீரத்திலிருந்து கன்னியாகுமரி வரை தேசமெங்குமே பெரியதோர் விழிப்பை உண்டுபண்ணியது. இந்த வழக்கு விசாரணைக்கென்றே தனி நீதிபதியாக ஏற்பட்ட பின்னே துரை (னிr. பு.ய். Pஷ்ஐஜுeதீ ), பிள்ளைக்கு இரு குற்றங்களுக்காக இரு முறை ஆயுள் பரியந்தம் தீவாந்தர தண்டனையும், சிவாவுக்குப் பத்து வரு­ம் தீவாந்திர தண்டனையும் (1908 ஆம் ஆண்டு சூலை மாதம்) விதித்தார். இந்த வழக்கு சுமார் நான்கு மாதம் நடந்தது. இதில் ஸ்ரீமான் சுப்ரமணிய சிவனார் கொடுத்த வாக்குமூலம் நமது தேசத்தின் விடுதலைச் சரித்திரத்தில் இடம் பெறுதற்குரியது. இந்தக் கொடிய தண்டனையால் நாடு முழுமையும் கலங்கியது. இந்தத் தண்டனை, அக்காலத்தில் லண்டனில் இந்தியா மந்திரியாக விளங்கிய ஜான்மார்லியைக் கூட கலக்கியதாம். சிதம்பரம் பிள்ளைக்கு இரட்டைத் தீவாந்தர தண்டனை விதித்த ஜில்லா நீதிபதி பின்னே துரை, அடுத்தப்படியாக (சென்னை ஐகோர்ட்) உயர்தர மன்ற நீதிபதியாக உயர்ந்து , சில காலம் பதவியில் இருந்தார். ஆனால், சில காலத்திற்குள் அவர் தமது பெரிய பதவியையும் , ஐ.ஸி.எஸ் உத்தியோகத்தையும் அறவே விட்டுவிட்டுத் தாய் நாடு செல்ல நேர்ந்தது. அதற்குக் காரணம், சிதம்பரம் பிள்ளை வி­யத்தில் பின்னே துரை மேற்கொண்ட கொடிய நீதி முறையைப் பற்றி இந்தியா மந்திரி கொண்ட வெறுப்பேயயன்று ஆங்கில அரசாங்கத்தின் மூலஸ்தான விவகாரங்களை அறிந்தவர்கள் அந்த நாளில் சொல்லிக் கொண்டார்கள்.

பின்னே துரையின் அநியாயத் தீர்ப்பை மாற்றுமாறு ஐக்கோர்ட்டிற்கு அப்பீல் செய்யப்பட்டது. பிள்ளையவர்கள் வழக்குச் செலவுக்காகப் பொருளுதவி நாடி அவரது மனைவியார் செய்த விண்ணப்பத்திற்கு இணங்கி தேசத்தார் பேராதரவு புரிந்தனர். தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களேயன்றி, இலங்கை, தென் ஆப்பிரிக்கா முதலிய நாடுகளில் குடியேறி வாழும் தமிழர்களும், பாரத தேசத்தில் வாழும் மக்களேயன்றி , பூலோகத்தின் பல பகுதிகளிலும் வாழும் இந்திய மக்களும் ஆதரவு புரிந்தார்கள்.

சிறைவாசம்

சிதம்பரம் பிள்ளைக்கு ஏற்பட்ட ஆயுள் பரியந்தம் தீவாந்தர தண்டனையை ஆறு ஆண்டுச் சிறைவாசமாக ஐக்கோர்ட்டார் குறைத்துள்ளார்கள். நன்னடத்தைக் கழிவு , அரசாங்க வஜா முதலியன கழித்துப் பிள்ளை சுமார் நாலரை ஆண்டுகள் சிறைவாசம் செய்தார். முதலில் கோயம்புத்தூர்ச் சிறையிலும், பின்னர் மலையாளத்தில் உள்ள கண்ணனூர்ச் சிறையிலும் பிள்ளை தமது வாசத்தைக் கழித்தார்.

கோவைச் சிறையில் அரசியற் கைதியாக இருந்து மாடு போலச் செக்கிழுக்கும் பெருமை முதல் முதலாகச் சிதம்பரம் பிள்ளையவர்களுக்கே கிடைத்தது. பின்னர், சுமார் பதினாறு ஆண்டுகள் கழித்து அதே சிறைக் கோட்டத்தில் அந்தப் பெருமையை அடைந்தவர் சேலம் செல்வரான ஸ்ரீமான் எம்.ஜி. வாதேவய்யா ஆவார். கல்வியறிஞரும் தேச பக்தருமான திருவாளர் பிள்ளைக்குச் செக்கிழுக்கும் வேலையைக் கொடுத்த செய்தியைஅறிந்த தேச பக்தர்கள் கொதிப்படைந்தார்கள். பிள்ளையார் மீது ஆதியில் அதிகாரிகள் வழக்குத் தொடர்ந்தது பற்றிக் கொதிப்படைந்த திருநெல்வேலி மக்கள் கலகம் விளைவித்தது போலவே, கோயம்புத்தூர்ச் சிறையில் அதிகாரிகள் பிள்ளையையும் மற்றவர்களையும் கொடுமையாக நடத்தியது பற்றிக் கொதிப்படைந்த கைதிகள் கலகம் விளைவித்தார்கள். இந்தக் கலகத்தை யயாட்டி ஏற்பட்ட வழக்கில் , திருவாளர் பிள்ளை சிறைக்கோலத்துடன் சென்று கோவை ஜில்லா நீதி ஸ்தலத்தில் கொடுத்த சாட்சியம் குறிப்பிடத் தகுந்தது.

திருவாளர் பிள்ளை சிறைவாசம் செய்ய நேர்ந்த காரணத்தால் தென்னாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் இருந்த கைதிகளுக்கெல்லாம் நல்ல காலம் பிறந்தது. சிறைக் கைதிகளுக்கு வேலை கொடுக்கும் முறையிலும் உணவு கொடுக்கும் முறையிலும் சீர்திருத்தம் ஏற்படுமாறு காலஞ்சென்ற சென்னைச் சட்டசபை அங்கத்தினர் குத்தி கேசவப் பிள்ளை சட்டசபை வாயிலாகப் பெரிதும் போராடினார். காட்டிலாக ஊழல்களையும் சிறைச் சாலை ஊழல்களையும் ஒழிப்பதிலேயே அவர் நாளெல்லாம் உழைத்து வந்தார். அந்தக் காரணத்தால் , கேசவப் பிள்ளை ஒன்று காட்டில் இருப்பார் அல்லது சிறையில் இருப்பார் என்று நண்பர்களும் அதிகாரிகளும் விகடமாகக் கூறுவது உண்டு.

தமிழ்த் தொண்டு

தேசத் தொண்டு காரணமாகச் சிறைக் கோட்டம் புகுந்த சிதம்பரம் பிள்ளை, சிறைக்கோட்டத்தில் ஓய்ந்த நேரங்களில் தாம் இளமை முதலே ஆர்வம் கொண்டிருந்த தமிழ்த்தொண்டில் சித்தம் செலுத்தி வந்தார். ஆங்கில நாட்டு ஞானியான ஜேம்ஸ் ஆலன் என்பார் இயற்றிய சில அரிய நூல்களை ‘மனம் போல வாழ்வு’, ‘அகமே புறம்’, ‘வலிமைக்கு மார்க்கம்’ என்ற பெயர்களுடன் மொழி பெயர்த்தார். வேறு சில தமிழ் நூல்களையும் இயற்றினார். இவற்றுள், ‘மனம் போல வாழ்வு’ பிள்ளையவர்கள் சிறையில் இருந்த பொழுதே, இந்தப் புஸ்தகத்தின் காகிதம், அச்சு, மை, கட்டடம் அனைத்தும் சுதேசியம் என்ற குறிப்புடன் வெளியாயிற்று. மற்ற நூல்களைப் பிள்ளையவர்கள் சிறையிலிருந்து வெளிவந்த பின்னர் வெளியிட்டார். பொது மறையான திருக்குறளை நன்றாக ஆராய்ச்சி செய்வதற்குரிய தருணம் அவருக்குச் சிறைக் கோட்டத்தில் கிடைத்தது.
திருக்குறள் மீது சிதம்பரனாருக்கிருந்த ஆர்வம் சொல்லும் தரத்தன்று. ஆயிரத்து முந்நூற்று முப்பது அருங்குறளையும் பாயிரத்தோடு படியாத ஆண் மகனோ பெண் மகனோ தமிழ்நாட்டில் இருத்தல் ஆகாதென்றும் , தமிழ் வேதமான திருக்குறளைப்படியாத தமிழ் மக்கள் தமிழ் மக்கள் ஆகார் என்றும் பிள்ளையவர்கள் அழுத்தமாகக் கூறுவது வழக்கம்.

விடுதலை

சுமார் நாலரை ஆண்டுகள் சிறைக் கோட்டத்தில் இருந்த பிள்ளை 1912 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் விடுதலையடைந்தார். விடுதலை அடைந்தவுடன் பிள்ளை, குடும்பத்துடன் நேரே சென்னைக்கு வந்தார். சென்னை நகரத்திற்கு நடுநாயகமாக விளங்கும் சிந்தாத்திரி பேட்டையில் அருணாசல நாயகன் வீதியில் சுமார் இரண்டு ஆண்டுகள் வாழ்ந்து வந்தார். பின்னர் சில காலம் திருமயிலையிலும், பிரம்பூரிலும் வாழ்ந்திருந்தார். பிள்ளை விடுதலை அடைந்து வந்த பொழுது, சென்னையிலுள்ள தலைவர்களில் பலரும் அவரைத் தீண்டாதாராகவே கருதினார்கள். திலகர் பெருமான் தமது சுயராஜ்ய நிதியிலிருந்து மாதந்தோறும் அனுப்பி வந்த ஐம்பது ரூபாயே அவருக்கு பெரிய ஆதரவா யிருந்தது. பிரம்பூரில் இருந்த பொழுது பிள்ளை தமது குடும்பத்தை நடத்தும் பொருட்டு அரிசி வியாபாரமும், நெய் வியாபாரமும் கூடச் செய்து பார்த்தார். சில காலம் தமிழ்ப் பத்திரிகைளில் ஆசிரியராகவும் இருந்தார்.
பிள்ளை சென்னையில் வாழ்ந்து வந்த பொழுது பலருக்குத் தமிழ்க் கல்வி பயிற்று வித்தார். பிள்ளையாரிடம் திருக்குறள் பயின்றவர்களில், இப்பொழுது சிதம்பரம் நந்தனார் மடத்துத் தலைவராக விளங்கும் சகஜானந்த சுவாமி யாரையும், லோகோபகாரி பத்திராசிரியராயிருந்த பரலி சு. நெல்லையப் பரையும் குறிப்பிடலாம். பிள்ளை சென்னையை அடுத்த பிரம்பூரில் இருந்த பொழுது, அங்கு வாழ்ந்து வந்த பெருந் தமிழறிஞரான திருமணம் செல்வகேசவராய முதலியாருடன் தமிழாராய்ச்சி செய்து வந்தார். திருக்குறள் மணக்குடவர் உரையை வெளியிட்டதுடன், திருக்குறளுக்குத் தாமே புதிய உரை ஒன்றையும் இயற்றி வெளியிட்டார். பழந்தமிழ் இலக்கியமான தொல்காப்பியப் பொருள் அதிகாரத்திற்கு, உரையாசிரியர் இளம்பூரணர் எழுதிய கிடைத்தற்கரிய உரையையும் பிள்ளை பிற்காலத்தில் வெளியிட்டார். ‘இன்னிலை’ என்ற பழந்தமிழ் நூலையும் அவர் வெளியிட்டிருக்கிறார். சுதேசிக் கிளர்ச்சி தூத்துக்குடியில் மும்முரமாயிருந்த பொழுது பரலி சு. சண்முகசுந்தரம் பிள்ளையைப் பத்திராசிரியராகக் கொண்டு, ‘சுயராஜ்யம்’ என்ற பத்திரிகையைத் தொடங்க விரும்பி, அதற்குரிய முன்னேற்பாடுகளெல்லாம் செய்தார். முதல் இதழில் வெளியிடுவதற்காக எழுதிய உணர்ச்சிமிக்க தலையங்கக் கட்டுரை இன்னும் என் நினைவில் இருக்கிறது. ஆனால் பத்திரிகை தொடங்குவதற்கு முன்பே அவர் மீது வழக்குத் தொடங்கிவிட்டதால் பத்திரிகை நின்றுவிட்டது. பிள்ளை சிறை சென்று மீண்ட பின், இந்தியாவின் நியாயம் உலகத்தாருக்கெல்லாம் விளங்குமாறு உலகத்திலுள்ள நாற்பது முக்கிய பாஷைகளில் பத்திரிகை வெளியிட வேண்டுமென்று கருதினார். இக் கருத்து அக்கால நிலையில் முடியாமற் போயினும் அவரது பெரு நோக்கம் கருதற்பாலது.
பிள்ளை சிறையிலிருந்து வெளிவந்த பொழுது அரசியல் உலகம் அமைதியற்றிருந்தது. அப்பொழுது திலகர் சுயராஜ்ய சங்கம் தோன்றியது. அதில் பிள்ளை சேர்ந்து உழைத்தார். சென்னையில் தொழிலாளர் இயக்கத்திலும் சேர்ந்து வேலை செய்தார். சென்னையில் தொழிலாளர் மிகுதியாக வாழும் பெரம்பூர்ப் பட்டாளத்தில் சிதம்பரம் பிள்ளை (அவன்யூ) சாலை ஒன்றும், விளையாட்டு மைதானம் ஒன்றும் ஏற்பட்டிருப்பதே அதற்குச் சான்று. சில காலம் கோயம்புத்தூர்த் தொழிலாளர் சங்கத்திலும் அவர் வேலை செய்தார்.
மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பிள்ளைக்கு அதிக நம்பிக்கை இல்லை. ஆயினும் அந்த இயக்கத்திற்கு மாறாக அவர் எதுவும் செய்யவில்லை. அவர் தமக்கு சரியயன்று தோன்றிய வழிகளில் தேசத் தொண்டு செய்து வந்தார்.

மீண்டும் வக்கீல்

வக்கீல் தொழிலில் விருப்பமற்றவரும், ‘வக்கீலாய் நின்று வழிப்பறியே செய்கின்ற திக்கிலார்’ என்று பாடியவருமான சிதம்பரம் பிள்ளை , தமது குடும்ப நிலை காரணமாக அதிகாரிகள் அனுமதி பெற்று 1922 ஆம் ஆண்டு மீண்டும் வக்கீல் ஆனார். தூத்துக்குடியிலும் பின்னர் கோவிற்பட்டியிலும் , கடைசியாக மீண்டும் தூத்துக்குடியிலும் சுமார் பத்தாண்டுகள் வரை அவர் வக்கீல் தொழில் புரிந்தார். பிள்ளை கோவிற்பட்டியில் இருந்த பொழுது, இராஐதுவே­க் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஸ்ரீமான்களான எம்.எஸ். சுப்ரமணிய ஐயர், என். சோமயாஜூலு முதலிய இளந்தேசபக்தர்களுக்கு உண்டி, உடை அளித்து ஆதரித்ததுடன் , அவர்களுக்காக நீதிஸ்தலத்தில் வலிய தோன்றி வாதித்த செய்தியை தமிழ்நாட்டார் மறந்திருக்க மாட்டார்கள். பிள்ளை தூத்துக்குடியில் வக்கீலாயிருந்த பொழுது, ஊக்கமும் உழைப்பும் உருவெடுத்தது போல விளங்கிய அவருடைய மூத்த மகன் உலகநாதன் தனது இருபதாவதாண்டில் காலஞ்சென்றான். அதனால் அவர் குடும்பத்திற்குத் தீராத துயரமும் நஷ்டமும் விளைந்தன.

இறுதி

பிள்ளை சிறந்த உடற்கட்டுடையவராயினும், ஐந்தாண்டு அநியாயச் சிறைவாசம் அவர் உடல்நலத்தைப் பெரிதும் கெடுத்து விட்டது. சிறையிலிருந்து விடுதலை அடைந்த பின்னர், வருவாயின்றி வறுமையில் வருந்த நேர்ந்தது. 1932 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி பிள்ளையின் அறுபதாண்டு நிறைவு விழா நடந்தது. அதனையயாட்டி, அவரிடம் தேச மக்களுக்குள்ள நன்றி யறிதலுக்கு அறிகுறியாக அவருக்கு ஒரு பணப்பை அளிக்க வேண்டுமென்று டாக்டர் வரதராஜூலு நாயுடு முதலிய நண்பர்கள் முயன்றார்கள். அந்த நிதிக்குப் பல நண்பர்கள் மனமுவந்து பொருளுதவி புரிந்தார்களாயினும், அதற்குப் போதிய அளவு பொருள் சேரவில்லை. பிள்ளையின் தேசத் தொண்டைத் தற்காலத் தமிழ் மக்கள் மறந்து விட்டமையே அதற்குக் காரணம். பெரியோர்கள் இந்த உலகத்தில் இருக்கும் பொழுது அவர்களை ஏறிட்டுப் பாராமல் , அவர்கள் இறந்த பின்னர் அவர்களைப் பற்றி வியந்தோதித் திருவிழாக் கொண்டாடும் வழக்கம் தற்காலத் தமிழ்நாட்டில் மிகுதியாயிருக்கிறது. எனவே, தேசத்திற்காகப் பலவித அரிய தியாகங்கள் செய்த சிதம்பரம் பிள்ளையும், கவி சுப்பிரமணிய பாரதியாரும் பிறகும் அவர்கள் வாழ்நாளில் வருந்த நேர்ந்தமை வியப்பாகா. முதுமையும் நோயும் வறுமையும் வருத்த, பிள்ளை தாது ஆண்டு கார்த்திகை மாதம் நாலாம் தேதி (18.11.1936 ) புதன்கிழமையன்று வறுமையும் சிறுமையுமற்ற பெரிய உலகம் புகுந்தார். பிள்ளையார் இவ்வுலக வாழ்வு நீத்தபொழுது அவருக்கு வயது அறுபத்தைந்தே.

குணநலம்

சிதம்பரம் பிள்ளை தேசபக்தியில் சிறந்தவர். தியாக புத்தியில் உயர்ந்தவர். பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய், அஸ்வினி குமார தத்தர் முதலிய உத்தம தேச பக்தர்கள் திருக்கூட்டத்தில் அவர் சேர்தற்கு உரியவர். அவர் தமிழ் அன்பர். தமிழ் அறிஞர். பெருங் கவிஞரல்லாராயினும், அவர் தமிழ்க்கவி. தமிழ் வளர்ப்பதை அவர் தமது வாழ்நாளில் பெருங்கடமையாகக் கொண்டிருந்தார். சைவத்தில் உறுதியான பற்றுக் கொண்டிருந்தார். சைவ சமயமும் சைவ உணவியக்கமும் வையத்திற்கு உய்வளிக்கத் தகுந்தன என்பது பிள்ளையின் கருத்து. ஆயினும் அவர் ஜாதி , சமய வேற்றுமையற்ற சமரசவாதி. அவர் அன்பிலும் ஜீவகாருண்யத்திலும் சிறந்து விளங்கினார். விருந்தோம்பல் என்ற சிறந்த குணம் அவரிடம் சிறந்து விளங்கியது. ஆதியில் வக்கீல் தொழில் செய்து வருவாய் மிகுந்து விளங்கிய காலத்திலும் பிற்காலத்தில் அவர் சிறையிலிருந்து வந்த பின்னர் வருவாய் குறைந்திருந்த காலத்திலும் பிள்ளை வீடு ‘சத்திரமா’கவே விளங்கியது. மேன்மக்களிடம் சிறந்து விளங்க வேண்டிய உயர் குணங்கள் பல அவரிடம் சிறந்து விளங்கின. பேரன்பும், பேரூக்கமும், பேருழைப்பும், பெருந்தியாகமும் கொண்ட பெருந்தமிழராகப் பிள்ளையார் விளங்கினார். பெருந்தமிழர் திருக்கூட்டத்தில் அவர் ஓர் சிறந்த எடுத்துக் காட்டாக விளங்கினார்.
நன்றியறிதல் என்ற சிறந்த குணம் பிள்ளையாரிடம் சிறந்து விளங்கியது. ஆதியில் சுதேசிக் கப்பல் கம்பெனி தொடங்கும் முயற்சியில் தம்முடன் உடனின்று உழைத்த தூத்துக்குடி வியாபாரிகளான காலஞ்சென்ற சித. ஆறுமுகம் பிள்ளையவர்கள் பெயரை அவர் தம் இரண்டாவது புதல்வருக்கு இட்டார். பிள்ளையார் சிறைக்கோட்டத்தில் இருந்த பொழுதும், விடுதலை அடைந்த பின்னரும் , அவருக்குப் பொருளுதவி புரிந்து வந்த தென் ஆப்பிரிக்கச் செல்வரான தில்லையாடி வேதியப்பிள்ளையயன்ற நண்பரின் பெயரைத் தம் இரண்டாவது புதல்விக்கு இட்டார். (வேதவல்லி யயன்ற இப்புதல்வியும் அதன் தமக்கையான ஞானாம்பாளும் மண வாழ்க்கையில் வாழ்ந்திருந்து சில நன்மக்களைப் பெற்றுச் சில ஆண்டுகளுக்கு முன் இளவயதில் காலஞ்சென்றனர்.)

பிள்ளையவர்கள் கோவைச் சிறைக் கோட்டத்தில் இருந்த பொழுது, அவருக்கு அரும்பெருந்துணைவராக அமர்ந்த கோவைப் பெரியாரான திருவாளர் சி.கே. சுப்ரமணிய முதலியார் பெயரைத் தம் மூன்றாம் புதல்வருக்கு இட்டார். வக்கீலாயிருந்த பிள்ளையவர்கள் சிறைக் கோட்டம் சென்று வெளிவந்த பின், அரசியல் குற்றம் செய்தவர்களுக்கு வக்கீல் உத்யோகம் கிடைப்பது அரிதாயிருந்தது. பிள்ளையவர்கள் விரும்பிய காலத்து அவருக்குத் திரும்பவும் வக்கீல் உத்யோகம் கிடைக்குமாறு செய்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வாலிஸ் துரையின் நினைவைப் போற்றுமாறு தமது கடைசிப் புதல்வருக்கு வாலீசுரன் என்று பெயரிட்டார். பிள்ளை பெற்றுப் பெயரிடுதல் என்பதைத் தமிழ் நாட்டார் பெரு நன்றிக்கு அறிகுறியாகக் கூறுவர். பிள்ளையார் அக்கூற்றை மெய்ப்படுத்தினார்.

நாட்டு மக்கள் நன்றி

சுதேசியயன்றும், சுயராஜ்யம் என்றும் சொல்லவும் மக்கள் அஞ்சியிருந்த தென்னாட்டில் , வந்தே மாதர முழக்கமும் செய்து சுயராஜ்ய உணர்ச்சியை எழுப்பிய பெருந்தலைவரான பிள்ளையவர்கள் வி­யத்தில் தமிழ்மக்கள் போதிய அளவு நன்றி காட்டவில்லையயன்பது உண்மையே. பிள்ளையவர்களின் பெருந்தொண்டை அறிந்த முதியவர்கள் அதனை மறந்து விட்டார்கள். இளைஞர்கள் அதனை அறிய மாட்டார்கள். ஆயினும் பிள்ளையவர்களைத் தமிழ் நாட்டார் முற்றிலும் மறந்து விடவில்லை. சென்னையில் பிள்ளையார் தொழிலாளர் நலத்திற்காக உழைத்ததை நினைவூட்டும் பொருட்டுப் பெரம்பூர்ப் பட்டாளத்தில் சிதம்பரம் பிள்ளை சாலையும், விளையாட்டு நிலையமும் ஏற்பட்டிருப்பதை முன்னரே கூறியிருக்கிறோம். சென்னை ஜில்லா காங்கிரஸ் கமிட்டியாரும் சில ஆண்டுகளுக்கு முன் பிள்ளையவர்கள் முக உருவச் சிலை ஒன்றை நிறுவித் தாங்களும் அவரை மறந்து விட வில்லை யயன்பதைக் காட்டிக் கொண்டார்கள். வேலூர் நகர சபையார் தங்கள் சபை மண்டபத்திற்குச் சிதம்பரம் பிள்ளை மண்டபம் என்று பெயரிட்டுச் சிறந்த முறையில் தங்கள் நன்றியை வெளியிட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வேறு பல இடங்களிலும் சிதம்பரனார் பெயரால் சங்கங்களும் வாசக சாலைகளும் புத்தக சாலைகளும் ஏற்பட்டி ருக்கின்றன.
ஆனால், பெரியோர்களுக்கு நன்றி காட்டுவதென்பது ஞாபகச் சின்னங்களில் அடங்கியிருக்க வில்லை. அப்பெரியோர்களின் அரிய நோக்கங்களை அறிந்து, அவற்றில் ஊக்கம் கொண்டு உழைத்து, அவற்றை நிறைவேற்ற முயல்வதே அவர்களுக்கு உண்மையான முறையில் நன்றி காட்டுவதாகும். வீரத் தமிழராகவும், விடுதலை வீரராகவும் விளங்கிய சிதம்பரம் பிள்ளையின் நினைவைப் போற்ற விரும்பும் தமிழ் மக்கள் தேசம் பல துறைகளிலும் விடுதலை பெறுதற்குரிய நெறியில் உழைக்க வேண்டும் . தமிழ்நாடும் தமிழ்மொழியும் தமிழ் நாகரிகமும் புத்துயிரும் புதுவாழ்வும் பெறுமாறு மனமொழி மெய்களால் தொண்டு புரிதல் வேண்டும். அதற்குரிய அறிவும் திறமையும் பூமிதேவியின் தலைப் பிள்ளையான தமிழ்ப்பிள்ளையிடம் சிறப்பாக அமைந்திருக்கின்றன என்பது தமிழ்ச்சிதம்பரம் பிள்ளையின் தளராத நம்பிக்கையாயிருந்தது, அவரது நம்பிக்கையை நாம் உண்மையாக்க முயல்வோமாக.

வந்தே மாதரம்!

நல்லாண்மை யயன்பது ஒருவற்குத்தான் பிறந்து
இல்லாண்மையாக்கிக் கொளல்.

சிதம்பரம் பிள்ளை திருநாமம் வாழ்க!

(வ.உ.சி கோவை கொடுஞ்சிறையில் வாடிய போது அவர்களுக்கு தொண்டு புரிந்தவர் பரலி சு. நெல்லையப்பர். பாரதியார் உயிர் நீத்த வேளையில் அவரது உடலை மயானத்திற்கு எடுத்துச் சென்றவர்களில் பரலி சு. நெல்லையப்பரும் ஒருவர். தேசபக்தன் இதழில் ஆசிரியராக இருந்தவர். லோகோபகாரி என்ற இதழை நடத்தியவர். அவர் எழுதிய வ.உ.சிதம்பரம் பிள்ளை சரித்திரம் தான் இது).

ஊழ்

ஊழியல்
அஃதாவது, விதியின் இயல்பு.

முப்பத்தைந்தாம் அதிகாரம் - ஊழ்
அஃதாவது, விதி.

ஆகூழாற் றோன்று மசைவின்மை கைப்பொருள்
போகூழாற் றோன்று மடி. (341)

பொருள் : கை பொருள் ஆகு ஊழால் அசைவு இன்மை தோன்றும் -கைப் பொருள் ஆகும் விதியால் சோம்பலின்மை தோன்றும்; கை பொருள் போகு ஊழால் மடி தோன்றும் - கைப் பொருள் போகும் விதியால் சோம்பல் தோன்றும்.

அகலம்: கைப் பொருள் என்பது சிங்க நோக்காக நிற்றலின், அது முன்னரும் பின்னரும் கூட்டி உரைக்கப்பட்டது. கை என்பது துணைப் பெயர். ‘ஆகு’ ‘போகு’ வினைத் தொகைகள்.

கருத்து: நல் விதிக்கு அடையாளம் சோம்ப லின்மை.

பேதைப் படுக்கு மிழவூ ழறிவகற்று
மாகலூ ழுற்றக் கடை. (342)

பொருள்: இழவு ஊழ் (உற்ற கடை) பேதை படுக்கும் -(கைப் பொருளை) இழத்தற்கு உரிய விதி உற்ற இடத்து (அஃது ஒருவனை) அறிவிலனாகச் செய்யும் ; ஆகல் ஊழ் உற்ற கடை அறிவு அகற்றும் - (கைப் பொருள்) ஆகுதற்கு உரிய விதி உற்ற இடத்து (அஃது அவனது) அறிவைப் பெருக்கும்.

அகலம்: ‘உற்றக் கடை’ என்பது முன்னுங் கூட்டி உரைக்கப்பட்டது. இழவூழ், ஆகலூழ் என்பன நான்காம் வேற்றுமையின் குவ் வுருபும் தகுதிப் பொருளும் உடன் தொக்க தொகைகள்.

கருத்து: நல் விதி வந்தக்கால் அறிவு வளரும் ; தீ விதி வந்தக்கால் அறிவு குறையும்.

நுண்ணிய நூல்பல கற்பினு மற்றுந்தன்
னுண்மை யறிவே மிகும். (343)

பொருள்: நுண்ணிய நூல்பல கற்பினும் - (ஒருவன்) நுண்ணிய (பொருள்களை யுடைய) நூல்கள் பலவற்றைக் கற்பினும், மற்றும் தன் உண்மை அறிவே மிகும் -பின்னும் தனது விதியின் அறிவே மிகுந்து நிற்கும்.

கருத்து: ஒருவனுக்கு விதியின் அறிவே மிகுந்து நிற்கும்.

இருவே றுலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு. (344)

பொருள்: உலகத்து இயற்கை இரு வேறு - உலகத்தின்கண் விதி இரண்டு வேறு (வகைப்பட்டது); திரு(வினர் ஆதல்) வேறு தெள்ளியர் ஆதலும் வேறு -செல்வத்தை உடையவராதற்கு (உரிய விதி) வேறு ) அறிவை உடையவ ராதற்கு (உரிய விதி) வேறு.

அகலம்: பின்னர்த் ‘தெள்ளிய ராதல்’ என்று கூறுகின்றமையான், முன்னர்த் திருவினர் ஆதல் என்று கொண்டு பொருள் உரைக்கப்பட்டது. ‘ஆதல்’ இரண்டும் உருபும் பொருளும் உடன் தொக்க தொகைகள்.

கருத்து: செல்வந்த ராதற்கும் அறிவுடைய ராதற்கும் உரிய விதிகள் வெவ் வேறு.

நல்லவை யயல்லாஅந் தீயவாந் தீயவு
நல்லவாஞ் செல்வஞ் செயற்கு. (345)

பொருள்: செல்வம் செயற்கு தீயவும் நல்ல ஆம் - செல்வத்தை ஆக்குதற்குரிய விதிக்குத் தீய செயல்களும் நல்ல செயல்களாம் ; (செல்வம் அழித்தற்கு) நல்லவை எல்லாம் தீய ஆம்‡செல்வத்தை அழிப்பதற்குரிய விதிக்கு நல்ல செயல் களெல்லாம் தீய செயல்கள் ஆம்.

அகலம்: நல்லவை எல்லாம் தீய வாம் என்றமையால், செல்வம் அழித்தற்கு என்பதைச் சொல்லெச்சமாகக் கொண்டு பொருள் உரைக்கப்பட்டது. செயல்என்பதும், சொல்லெச்சமாகக் கொள்ளப்பட்ட அழித்தல் என்பதும் ஆகுபெயர்கள், முறையே அவற்றின் விதிகளுக்கு ஆயினமையால்.

கருத்து: நல்ல விதி யுற்ற விடத்துச் செய்வன எல்லாம் நல்லனவாம் ; தீய விதி யுற்ற விடத்துச் செய்வன எல்லாம் தீயவாம்.

பரியினு மாகாவாம் பாலல்ல வுய்த்துச்
சொரியினும் போகா தம. (346)

பொருள்: பால் அல்ல பரியினும் ஆகா வாம் - விதியால் (தம் முடையன) அல்லாத பொருள்கள் முயன்று வருந்தினும் உண்டாகாவாம். தம உய்த்து சொரியினும் போகா ‡ (விதியால்) தம்முடைய பொருள்கள் (சேய்மைக்கண்) கொண்டு போய் எறியினும் போகா.

அகலம்: ‘வருந்தி யழைத்தாலும் வாராத வாரா ; பொருந்துவன போமினென் றாற் போகா’. -நல்வழி.

கருத்து: விதிப்படி தமக்குரியன தம்மை விட்டு நீங்கா.

வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்குந் துய்த்த லரிது. (347)

பொருள்: வகுத்தான் வகுத்த வகை அல்லால் - (அவரவர் வினைப் பயனை அவரவர்க்கு) வகுத்த இறைவன் வகுத்த படி அல்லாமல், கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது - கோடிப் பொருள் ஈட்டினார்க்கும் துய்த்தல் இல்லை.

அகலம்: துய்த்தல் - அனுபவித்தல். வகுத்தல் - பிரித்தல்.ஈட்டல் - சேமித்தல். தாமத்தர் பாடம் ‘தொகுத்தாலும்’.

கருத்து: தம் விதிக்குத் தக்கபடியே இன்பம் துய்ப்பர்.

துறப்பார்மற் றுப்புர வில்லா ருறற்பால
வூட்டா கழியு மெனின். (348)

பொருள்: உறல் பால ஊட்டா(து) கழியும் என்னின் - பொருந்தற் பகுதியன வாகிய விதிகள் (தமது பயன்களைக் ) கொடாமல் நீங்கும் என்றால், துப்புரவு இல்லார் துறப்பார் - செல்வம் இல்லாதவர் துறப்பார்.

அகலம்: விதிகள் தமது பயன்களைக் கொடாமல் நீங்குதலும் இல்லை, வறிஞர் துறக்கப் போவதும் இல்லை என்றவாறு. இக்குறள் பொய்த்தற் குறிப்பணி. ‘மன்’ அசை. துப்புரவு - நுகர்ச்சிப் பொருள்கள்.

கருத்து: விதிகள் தமது பயன்களைக் கொடாமல் நீங்கா.

நன்றாங்கா னல்லவாக் காண்பவ ரன்றாங்கா
லல்லற் படுவ தெவன். (349)

பொருள்: நன்று ஆம் கால் நல்லவா (க) காண்பவர் -(தாம் முன் செய்த) நல் வினைகள் விளையுங்கால் இன்பங்களாக உணர்பவர், அன்று ஆம் கால் அல்லல் படுவது எவன்-(தாம் முன் செய்த) தீவினைகள் விளையுங் கால் துன்பம் உறுவது யாது காரணம்?

அகலம்: நன்று, அன்று என்பன சாதி யயாருமைப் பெயர்கள்.

கருத்து: இன்பமும் துன்பமும் தம் முன் வினைப் பயன்களே.

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். (350)

பொருள்: ஊழின் பெரு வலி யா உள - விதியைப் போலப் பெரிய வலியையு டையவை எவை உள்ளன? மற்று ஒன்று சூழினும் தான் முந்து உறும் - விதியை மாற்றும் ஒன்றை எண்ணினும் அவ் விதியே முற்பட்டுப் பொருந்தும்.

அகலம்: ஒருவன் விதைத்த வித்தின் விளைவை விட்டு வேறு வித்தின் விளைவை அடைய முடியாதது போல, ஒருவன் செய்த வினையின் பயனை விட்டு வேறொரு வினையின் பயனை அடைய முடியாதென்றார். அஃதாவது, ஒருவன் ஒரு வினையைச் செய்து அதன் பயன் அவனைப் பொருந்தும் காலையில் அப் பயனை மாற்றுதற்கு அவன் விரும்பின், அவனால் அதனை மாற்ற முடியாது. அப் பயனை மாற்றத் தக்க வேறு ஒரு வினையைச் செய்து, அதன் விளைவாகிய வேறு ஒரு விதியை ஆக்கி, அதனால் அப் பயனை மாற்ற வேண்டும். வலியை யுடையவற்றை வலி என்றார்.

கருத்து: விதியைப்போல வலி யுடையது வேறு யாதொன்றும் இல்லை.

ஊழியல் முற்றிற்று.

அறப்பால் முற்றிற்று.

அவா வறுத்தல்

முப்பத்து நான்காம் அதிகாரம் - அவா வறுத்தல்
அஃதாவது, ஆசையை ஒழித்தல்.

அவாவென்ப வெல்லா வுயிர்க்குமெஞ் ஞான்றுந்
தவாஅப் பிறப்பீனும் வித்து. (331)

பொருள்: அவா எல்லா உயிர்க்கும் எ ஞான்றும் தவா(த) பிறப்பு ஈனும் வித்து - ஆசை எல்லா உயிர்களுக்கும் எந் நாளும் கெடாத பிறப்பினைக் கொடுக்கும் வித்து.

அகலம்: ‘என்ப’ அசை. அளபெடை ஈண்டு இசை நிறைக்க வந்தது.

கருத்து: பிறப்புக்கு வித்து அவா.

வேண்டுங்கால் வேண்டல் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும். (332)

பொருள்: வேண்டுங்கால் பிறவாமை வேண்டல்- (ஒருவன்) விரும்புங்கால் பிறவாமையை விரும்புக ; அது வேண்டாமை வேண்ட வரும் - பிறவாமை விரும்பாமையை விரும்ப வரும்.

அகலம்: ‘மற்று’ அசை. விரும்பாமையாவது, உலகப் பொரு ளொன்றையும் விரும்பாதிருத்தல். முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘வேண்டுங்கால் வேண்டும்’. வேண்டும் என்பது பொருத்தமான பொருளைத் தாராமையானும், ‘வேண்டல்’ என்பதே பொருத்தமான பொருளைத் தருதலானும், அதுவே ஆசிரியர் பாடம் எனக் கொள்ளப் பட்டது.

கருத்து: அவா இல்லார்க்குப் பிறப்பு இல்லை.

வேண்டாமை யன்ன விழுச்செல்வ மீண்டில்லை
யாண்டு மஃதொப்ப தில். (333)

பொருள்: வேண்டாமை அன்ன விழு செல்வம் ஈண்டு இல்லை - விரும்பா மையை ஒத்த மேலான செல்வம் இவ் வுலகில் இல்லை ; யாண்டும் அஃது ஒப்பது இல் - (வேறு) எவ் வுலகிலும் விரும்பாமையை ஒத்த (மேலான) செல்வம் இல்லை.

அகலம்: நச்சர், பரிமேலழகர் பாடம் ‘ஆண்டும்’. மற்றை மூவர் பாடம் ‘யாண்டும்’.

கருத்து: அவா இல்லாமைக்கு ஒப்பான செல்வம் எங்கும் இல்லை.

தூஉய்மை யயன்ப தவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும். (334)

பொருள்: தூய்மை என்பது அவா இன்மை - தூய்மை என்று (சிறப்பித்துச்) சொல்லப்படுவது ஆசை யில்லாமை; அது வாய்மை வேண்ட வரும் - ஆசை யில்லாமை வாய்மையைக் கைக் கொள்ள வரும்.

அகலம்: வேண்ட என்பதனைக் கொள்ள என்னும் பொருளிற் கூறினார். மற்று என்பது அசை.

கருத்து: அவா வின்மை அகத் தூய்மையை நல்கும்.

அற்றவ ரென்பா ரவாவற்றார் மற்றையா
ரற்றாக வற்ற திலர். (335)

பொருள்: அவா அற்றார் அற்றவர் என்பார் - ஆசையினின்று நீங்கினார் (பிறப்பு) அற்றவர் என்று சொல்லப்படுவர் ; மற்றையார் அற்றாக அற்றது இலர் - ஆசையை நீங்காதார் அத்தன்மையாக (ப் பிறப்பு) நீங்கினமை இலர்.

அகலம்: தாமத்தர், நச்சர் பாடம் ‘அற்றவ ரென்பர்’. ‘அவா’ ஐந்தாம் வேற்றுமைத் தொகை.

கருத்து: அவா வற்றவரே பிறப் பற்றவர்.

அஞ்சுவ தோரு மவாவே யயாருவனை
வஞ்சிப்ப தோரு மவா. (336)

பொருள்: அவா ஒருவனை வஞ்சிப்பது - ஆசை ஒருவனை வஞ்சிப்பது; அவாவே அஞ்சுவது -ஆகலான்) அவாவே அஞ்சத் தக்கது.

அகலம்: ‘ஓரும்’ இரண்டும், ஏகாரமும் அசைகள். தாமத்தர் பாடம் ‘அஞ்சுவ தோரு மவாவே’. நச்சர் பாடம் ‘அஞ்சுவ தோரு மறிவே’. தாமத்தர் பாடமே ஆசிரியர் பாடம் எனக் கொள்க.

கருத்து: அவாவினை விடுதலே மக்கள் கடமை.

அவாவினை யாற்ற வறுப்பிற் றவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும். (337)

பொருள்: அவாவினை ஆற்ற அறுப்பின்-(ஒருவன்) ஆசையை முற்ற ஒழிப்பின், தவா(த)வினைதான் வேண்டும் ஆற்றான் வரும் - கெடாத வினைகள் தான் விரும்பிய நெறியால் வரும்.

அகலம்: கெடாத வினைகள் - அறங்கள்

கருத்து: அவாவினை விட்டார் அறங்களைப் புரிவர்.

அவாவில்லார்க் கில்லாகுந் துன்பமஃ துண்டேற்
றவாஅது மேன்மேல் வரும். (338)

பொருள்: அவா இல்லார்க்கு துன்பம் இல்லாகும் - ஆசை இல்லாதார்க்குத் துன்பம் இல்லையாகும்; அஃது உண்டேல் தவாது மேன்மேல் வரும் - ஆசை உண்டாயின் (துன்பம்) கெடாது மேல் மேல் வரும்.

அகலம்: ‘ஆசைப் படப்பட வாய்வருந் துன்பங்கள்’ - திருமந்திரம்

கருத்து: அவா இல்லார்க்குத் துன்பம் இல்லை.

இன்ப மிடையறா தீண்டு மவாவென்னுந்
துன்பத்துட் டுன்பங் கெடின். (339)

பொருள்: அவா என்னும் துன்பத்துள் துன்பம் கெடின் -ஆசை என்னும் துன்பத்துள் மிகுந்த துன்பம் அழியின், இன்பம் இடை அறாது ஈண்டும் - இன்பம் இடையில் நீங்காது பெருகும்.

அகலம்: அவா என்னும் காரணத்தைத் துன்பம் என்னும் காரியமாக உபசரித்தார்.

கருத்து: அவா இல்லார் இன்பம் அடைவர்.

ஆரா வியற்கை யவாநீப்பி னந்நிலையே
பேரா வியற்கை தரும். (340)

பொருள்: ஆரா(த) இயற்கை அவா நீப்பின் -நிரம்பாத இயல்பை யுடைய ஆசையை நீக்கின், அ நிலையே பேரா(த) இயற்கை தரும்- அந் நிலைமையே (என்றும்) ஒரே தன்மையான இயல்பினைத் தரும்.

அகலம்: அவாவை நிறைவேற்ற நிறைவேற்ற அது வளர்ந்து கொண்டே போகும் இயல்பிற் றாகலின், ஆரா வியற்கை அவா என்றார். அந் நிலைமை, அவாவை நீத்த நிலைமை. ஓரே தன்மையான இயல்பாவது, பிறப்பின்றி என்றும் ஒரு படித்தா யிருக்கும் நிலைமை. பேராத - வேறுபடாத -ஒரே தன்மையான.

கருத்து: அவாவினை விட்டார்க்குப் பிறப்பு இறப்பு இல்லை.

வீட்டியல் முற்றிற்று.
முப்பத்து மூன்றாம் அதிகாரம் - மெய் யுணர்தல்
அஃதாவது, மெய்ப் பொருளை உணர்தல்.

பொருளல் லவற்றைப் பொருளென் றுணரு
மருளானா மாணாப் பிறப்பு. (321)

பொருள்: மாணா(த) பிறப்பு - மாட்சிமை யில்லாத பிறப்பு, பொருள் அல்லவற்றை பொருள் என்று உணரும் மருளான் ஆம் - மெய்ப்பொருள் அல்லாதவற்றை மெய்ப்பொருள் என்று அறியும் மயக்கத்தால் உண்டாம்.

அகலம்: பிறப்புப் பல துன்பங்களைப் பொருந்தியிருத்தலானும், இறப்புப் பின்னர் எய்தலானும் அதனை மாணாப் பிறப்பு என்றார். மெய்ப் பொருள் - உண்மையான பொருள் - என்றும் உள்ள பொருள். அழிதல் மாலையனவாகிய உலகப் பொருள்களை அழியாமல் என்றும் நிலை நிற்கும் பொருள்க ளென்று கொள்ளுதல் மயக்க உணர்வு எனவும், அவ்வுணர் வுடைமையால் பிறப்பு உளதாகும் எனவும் கூறினார்.

கருத்து: உலகப் பொருள்களை உள்ள பொருள்களாகக் கருதல் பிறப்புக்குக் காரணம்.

இருணீங்கி யின்பம் பயக்கு மருணீங்கி
மாசறு காட்சி யவர்க்கு. (322)

பொருள்: மருள் நீங்கி மாசு அறு காட்சி அவர்க்கு - மயக்கத்தினின்றும் நீங்கிக் குற்றம் அற்ற அறிவினை யுடையவர்க்கு, இருள் நீங்கி இன்பம் பயக்கும் - (நரகம் என்னும்) துன்பம் நீங்கி வீடு என்னும் இன்பம் உண்டாம்.

அகலம்: குற்றமற்ற அறிவாவது, மெய்ப்பொருளை மெய்ப்பொருளா கக் காணும் அறிவு. அவ் வறிவினை உடையார்க்குத் துன்பமே இல்லை எனவும், இன்பமே உண்டு எனவும் கூறினார். ‘பூத்தலும் பயத்தலும் உண்டாதற் பொருள்’ என்று சேந்தன் திவாகரம் கூறுகின்றமையால், பயக்கும் என்பதற்கு உண்டாம் என்று பொருள் உரைக்கப்பட்டது. இத் திவாகரத்தை அறியாதார் இருள் நீக்கி என்பதன் ககர ஒற்றுத் தொடை நோக்கி மெலிந்தது என உரைப்பர்.

கருத்து: மெய்யறிவு துன்பத்தை நீக்கி இன்பத்தை நல்கும்.

ஐயத்தி னீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வான நணிய துடைத்து. (323)

பொருள்: ஐயத்தின் நீங்கி தெளிந்தார்க்கு -ஐயத்தினின்று நீங்கி (மெய்ப் பொருளைத்) தெளிந்தவர்க்கு, வானம் வையத்தின் நணியது உடைத்து - வீட்டுலகம் பூவுலகைப் போல அணித்தாதலையுடையது.

அகலம்: ‘மெய்ப்பொருளை’ என்பது அதிகாரத்தால் கொள்ளப்பட்டது. ஐயம் - சந்தேகம். அணித்தாதல் - சமீபமாதல். தெளிதலாவது, பொய்ப் பொருளைப் பொய்ப் பொருளாகக் கண்டு நீக்கி, மெய்ப்பொருளை மெய்ப்பொருளாக அறிதல். மணக்குடவர் பாடம் ‘நீங்கித் துணிந்தார்க்கு’.

கருத்து: மெய்ப்பொரு ளுணர்ந்தார் வீட்டினை அடைவர்.

ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர் வில்லா தவர்க்கு. (324)

பொருள்: மெய் உணர்வு இல்லாதவர்க்கு - மெய்ப்பொருளின் உணர்வு இல்லாதவர்க்கு, ஐ உணர்வு எய்தியக் கண்ணும் பயம் இன்று- ஐந்து உணர்வுகள் எய்திய இடத்தும் பயன் இல்லை.

அகலம்: ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது. ஐ யுணர்வுகள் எய்தலாவது, தேச காலங்களால் தடுக்கப்படாது ஐம்புலங்களையும் ஐம்பொறிகள் அறிதல். அஃதாவது, கண் மூன்று காலங்களிலும் எல்லாத் தேசங்களிலும் உள்ள பொருள்களைக் காண்டல் ; அவ்வாறே செவி, மூக்கு, மெய், வாய் என்னும் மற்றைய நான்கு பொறிகளும் முறையே மூன்று காலங்களிலும் எல்லாத் தேசங்களிலும் உள்ள ஓசை, நாற்றம், ஊறு, சுவை என்னும் மற்றைய நான்கு புலங்களையும் அறிதல். இதற்குப் பிறரெல்லாம் பொருட் பொருத்தம் இல்லாதபடி உரைத்தார். தாமத்தர் பாடம் ‘பயனின்றே’.

கருத்து: மெய்யுணர்வு இல்லாதவர்க்கு ஐயுணர்வு எய்திய வழியும் பயன் இல்லை.

எப்பொரு ளெத்தன்மைத் தாயினு மப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. (325)

பொருள்: எ பொருள் எ தன்மைத்து ஆயினும் - எப் பொருள் எத்தன்மையை யுடையதாயினும், அ பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு - அப் பொருளின்கண் மெய்ப்பொருளைக் காண்பது அறிவு.

அகலம்: உலகப்பொருள்களின் நாம ரூபங்களை விடுத்து, அவற்றிற்கு ஆதாரமான உண்மைப் பொருளைக் காண்டல் அறிவு. நாமம் - பெயர். ரூபம் - உருவம். இக் குறளால் உலகப் பொருள்கள் மூலமாக மெய்ப் பொருளைக் காணும் வழியைக் கூறினார்.

கருத்து: உலகப் பொருள்களுக்கு ஆதாரமா யுள்ளது மெய்ப்பொருள்.

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி. (326)

பொருள்: கற்று ஈண்டு மெய்ப்பொருள் கண்டார் -(கற்கத் தக்க நூல்களைக்) கற்று இவ்வுலகின்கண் மெய்ப்பொருளைக் கண்டவர், மற்று ஈண்டு வாரா(த) நெறி தலைப்படுவர் - திரும்பி இவ் வுலகிற்கு வாராத வழியை அடைவர்.

அகலம்: மெய்ப்பொருளைக் காண்டற்குக் கல்வி இன்றியமையாத தென்பதைக் குறிப்பதற்காகக் ’கற்று’ என்றார். கற்கத் தக்க நூல்களாவன, அறநூலும் ஆன்ம நூலும். இவ் வுலகத்தைவிட்டு வேறு உலகத்தில் மெய்ப் பொருளைக் காணலாகுமோ என்று நினைப்பாரைக் கருதி, இவ் வுலகின் கண்ணேயே மெய்ப்பொருளைக் காணலாகும் என்றார். மெய்ப்பொருளைக் கண்டார் பிறப்பு இறப்புக்களினின்று நீங்குவர் என்பது ஒரு தலையாகலின், மற்று ஈண்டு வாராநெறி தலைப்படுவர் என்றார். வாராத என்பது செய்யுள் விகாரத்தால் ஈறு கெட்டு நின்றது. இக் குறளால் மெய்ப் பொருளை இவ் வுலகத்தின்கண்ணே காணலாகும் என்றார்.

கருத்து: மெய்ப் பொருளைக் கண்டார் பிறப்பினை அடையார்.

ஓர்த்துள்ள முள்ள துணரி னொருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு. (327)

பொருள்: ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் -(அகத்துள் நோக்கி) ஆராய்ந்து உள்ளத்தின்கண் உள்ளதாகிய மெய்ப்பொருளை உணரின், ஒருதலையா(க) பேர்த்து பிறப்பு உள்ள வேண்டா -உறுதியாகத் திரும்பிப் பிறப்பினை நினைக்க வேண்டா.

அகலம்: இக் குறளால் அகத்தினுள்ளே மெய்ப்பொருளைக் காணும் வழியைக் கூறினார். உள்ளத்தின்கண் உள்ளதாகிய மெய்ப் பொருளாவது, உளத்தாலும், பொறிகளாலும், உயிர் செய்வனவற்றை யயல்லாம் சான்றாகக் கண்டுகொண் டிருக்கும் அறிவு. ஈண்டும் மெய்ப்பொருளைக் கண்டார்க்குப் பிறப்பு இறப்புக்கள் இல்லை யயன்பதை வற்புறுத்தினார். ஒருதலையாக என்பது ஈறு கெட்டு நின்றது.

கருத்து: உள்ளத்தின்கண் உள்ளதாகிய அறிவை உணர்ந்தார்க்குப் பிறப்பு இல்லை.

பிறப்பீனும் பேதைமை நீங்கிச் சிறப்பீனுஞ்
செம்பொருள் காண்ப தறிவு. (328)

பொருள்: பிறப்பு ஈனும் பேதைமை நீங்கி - பிறப்பை நல்கும் மடமையினின்று நீங்கி, சிறப்பு ஈனும் செம்பொருள் காண்பது அறிவு - வீட்டை நல்கும் செவ்விய பொருளைக் காண்பது அறிவு.

அகலம்: பிறப்புக்குக் காரணம் மடமை என்பதும், அதனை நீக்க வல்லது மெய்யறிவே என்பதும் இக் குறளால் கூறப்பட்டன. செவ்விய பொருள் - குற்றம் இல்லாத பரம் பொருள். தாமத்தர் பாடம் ‘பிறப்பீனும்’; ‘நீங்கி’, ‘சிறப்பீனும்’. மற்றை நால்வர் பாடம் ‘சிறப்பென்னும்’, ‘நீங்க’, ‘பிறப்பென்னும்’. தாமத்தர் பாடமே நேரிய பொருளைத் தருகின்றமையான், அவர் பாடமே ஆசிரியர் பாடம் எனக் கொள்ளப் பட்டது. ‘பேதைமை’ ஐந்தாம் வேற்றுமைத் தொகை.

கருத்து: மெய்ப்பொருளைக் காண்டலே மெய்யறிவு.

சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்
சார்தார சார்தரு நோய். (329)

பொருள்: சார்பு உணர்ந்து சார்பு கெட ஒழுகின் - (எல்லாவற்றிற்கும்) ஆதாரமாயிருக்கிற மெய்ப்பொருளை உணர்ந்து தனது (அகப் புறப்) பற்றுக்கள் ஒழிய ஒருவன் ஒழுகின், சார்தரும் நோய் மற்று அழித்து சார்தரா - (மேல்) சாரக் கடவனவாய துன்பங்கள் அவ்வொழுக்கத்தை அழித்துச் சார மாட்டா.

அகலம்: அவ்வொழுக்கம் அழிந்தாலன்றித் துன்பங்கள் வாராவென்பதும், துன்பங்கள் அவ்வொழுக்கத்தை அழிக்கும் வலியுடையன அல்ல என்பதும் இதனால் கூறப் பெற்றன. தருமர் பாடம் ‘சார்வுணர்ந்து சார்வு’.

கருத்து: மெய் யுணர்வுடையார்க்குத் துன்பங்கள் இல்லை.

காமம் வெகுளி மயக்க மிவைமூன்ற
னாமங் கெடக்கெடு நோய். (330)

பொருள்: காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாம(மு)ம் கெட - காமமும் கோபமும் மயக்கமும் (ஆகிய) இவை மூன்றினுடைய பெயர்களும் கெட, நோய் கெடும் - துன்பங்களெல்லாம் அழியும்.

அகலம்: இறந்தது தழீஇய எச்ச உம்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. அவ் வும்மை காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றங்களையும் தழுவி நின்றது.

கருத்து: இவை மூன்றும் கெடவே, மெய்யுணர்வு உண்டாம்; மெய்யுணர்வு உண்டாகவே, முன் வினைப் பயன்களாகிய துன்பங்க ளெல்லாம் ஒழிந்து போம்.

துறவு

முப்பத்திரண்டாம் அதிகாரம் - துறவு
அஃதாவது, (அகப் புறப் பற்றுக்களை) விடுதல்.

யாதனின் யாதனி னீங்கியா னோத
லதனி னதனி னிலன். (311)

பொருள்: யாதனின் யாதனின் நீங்கியான் - (ஒருவன்) எதினின்று எதினின்று நீங்கினானோ, அதனின் அதனின் நோதல் இலன் -அதனால் அதனால் துன்புறுதல் இலன்.

அகலம்: ஒரு பொருளினின்று நீங்கலாவது, அப் பொருளின் பற்றினை விடுதல். தாமத்தர் பாடம் ‘அதனி னிலை’. அதனின் அதனின் என்பன வேற்றுமை மயக்கம், ஐந்தாம் வேற்றுமை யுருபு மூன்றாம் வேற்றுமைப் பொருளில் வந்தமையால்.

கருத்து: ஒரு பொருளின் மீதுள்ள பற்றை விட்டால், அப் பொருளால் உண்டாகும் துன்பம் இல்லை.

வேண்டி னுண்டாகத் துறக்க துறந்தபி
னீண்டியற் பால பல. (312)

பொருள்: துறந்த பின் ஈண்டு இயல் பால பல - (அகப்பற்றுப் புறப்பற்றுக் களை) விடுத்த பின் இவ்வுலகில் பொருந்தல் பகுதியன பல ; உண்டாக வேண்டின் துறக்க -(அவை) உண்டாக (ஒருவன்) விரும்பின் துறக்கக் கடவன்.

அகலம்: அகப்பற்று ‡யாக்கையின் பற்று, புறப்பற்று - பொருளின் பற்று. பொருந்தற் பகுதியன, பெருமை, பேரின்பம், முதலியன. தாமத்தர் பாடம் ‘துறந்த தற்பின்’.

கருத்து: துறவால் பல நன்மைகள் உண்டாம் ; ஒருவன் அவற்றை அடைய விரும்பின் துறக்கக் கடவன்.

அடல்வேண்டு மைந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லா மொருங்கு. (313)

பொருள்: ஐந்தன் புலத்தை அடல் வேண்டும் - (துறவு நெறி நிற்போர்) ஐம்பொறிகளின் புலங்களை வெல்லல் வேண்டும் ; வேண்டிய எல்லாம் ஒருங்கு விடல் வேண்டும் - (அதற்கு வழி) ஐம்பொறிகள் விரும்பியன எல்லாவற்றையும் ஒன்றாக விடல் வேண்டும்.

அகலம்: ஐம்பொறிகளாவன: - மெய், வாய்,கண், மூக்கு, செவி. அவற்றின் புலங்களாவன :- ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை. மணக்குடவர், தாமத்தர் பாடம் ‘ஐந்தின்’.

கருத்து: பொறிகளை வெல்வதற்கு வழி புலங்களை விட்டு நீங்குதல்.

இயல்பாகு நோன்பிற்கொன் றின்மை யுடைமை
மயலாகு மற்றும் பெயர்ந்து. (314)

பொருள்: நோன்பிற்கு ஒன்று(ம்) இன்மை இயல்பு ஆகும் - (துறவிகளின்) தவத்திற்கு ஒரு பொருட்பற்றும் இல்லாதிருத்தல் இயல்பு ஆகும்; உடைமை மற்றும் பெயர்ந்து மயல் ஆகும் - (யாதானும் ஒரு பொருட் பற்றினை) உடைமையால் துறவும் நீங்கி மயக்கம் உண்டாம்.

அகலம்: ஒன்றின் பற்றினை ஒன் றென்றார். மற்று என்பது துறவைக் குறித்து நின்றது. உம்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘பெயர்த்து’. ‘மயல் ஆகும்’ என்று ஆசிரியர் கூறியிருத் தலான், ‘உடைமை’ என்பதை மூன்றாம் வேற்றுமைத் தொகையாகக் கொண்டு பொருளுரைக்க வேண்டியதாயிருக்கிறது. அவ்வாறு பொருளுரைக்குங்கால் ‘பெயர்ந்து’ என்பதே பொருத்தமான பொருளைத் தருதலான், அதுவே ஆசிரியர் பாடம் எனக் கொள்ளப்பட்டது.

கருத்து: ஒரு பொருட் பற்றும் இல்லாமை தவத்திற்கு இயல்பு.

மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க
லுற்றார்க் குடம்பு மிகை. (315)

பொருள்: பிறப்பு அறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை- பிறப்பினை ஒழித்தலைப் பொருந்தியவர்க்கு உடம்பின் பற்றும் மிகுதி, மற்றும் தொடர்ப்பாடு எவன் - வேறு பொருளையும் பற்றி நிற்றல் யாது காரணம்?

அகலம்: ‘கொல்’ அசை. ‘உடம்பு’ ஆகு பெயர்.

கருத்து: தவஞ் செய்வார்க்கு உடம்பின் பற்றே மிகை.

யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த வுலகம் புகும். (316)

பொருள்: யான் எனது என்னும் செருக்கு அறுப்பான்- யான் எனது என்னும் மயக்கினை ஒழிப்பவன், வானோர்க்கு(ம்) உயர்ந்த உலகம் புகும் - தேவர்க்கும் எட்டாத வீட்டுலகின்கண் புகுவன்.

அகலம்: யான் என்பது அகப்பற்று. எனது என்பது புறப்பற்று. சிறப்பும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது.

கருத்து: ‘யான்’, ‘எனது’ நீத்தவர் வீடு பெறுவர்.

பற்றி விடா அ விடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு. (317)

பொருள்: பற்றினை பற்றி விடாதவர்க்கு - (அகப் புறப்) பற்றுக்களைப் பற்றிக் கொண்டு விடாதவரை, இடும்பைகள் பற்றி விடா - துன்பங்கள் பற்றிக்கொண்டு விடா.

அகலம்: ‘விடாதவர்க்கு’ என்பது வேற்றுமை மயக்கம், நான்காம் வேற்றுமை யுருபு இரண்டாம் வேற்றுமைப் பொருளில் வந்தமையால். அளபெடை இசை நிறைக்க வந்தது.

கருத்து: பற்றுக்களை விடாதவரைத் துன்பங்கள் விடா.

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர். (318)

பொருள்: தீர துறந்தார் தலை பட்டார் - முற்றந் துறந்தார் கடவுளை அடைந்தார்; மற்றையவர் மயங்கி வலை பட்டார் - முற்றத் துறவாதார் மயங்கிப் பிறப்பாகிய வலையின்கண் சிக்கினார்.

அகலம்: தலை- தலைவன்‡ கடவுள். கடவுளை அடைந்தார்க்கு பிறப்பில்லை என்பது ஒருதலையாகலான், தலை என்பதற்குக் கடவுள் எனப் பொருள் உரைக்கப் பட்டது. தலைப்பட்டார் என்பதற்கு (வீட்டினை) அடைந்தார் என்று உரைப்பினும் அமையும்.

கருத்து: முற்றத் துறந்தார் வீட்டினை அடைந்தார்.

பற்றற்ற கண்ணே பிறப்பறு மற்று
நிலையாமை காணப் படும். (319)

பொருள்: பற்று அற்ற கண்ணே பிறப்பு அறும் - (அகப்புறப்) பற்று நீங்கிய விடத்தே பிறப்பு நீங்கும்; மற்று நிலையாமை (யும்) காணப்படும்‡பற்று நீங்காத விடத்து (பிறப்பு மாத்திரமன்று) இறப்பும் காணப்படும்.

அகலம்: நிலையாமையே இறப்பாகலான் இறப்பினை நிலையாமை என்றார். நிலையாமை என்பதற்குப் பிறப்பு மாறி மாறி வருதல் என்று உரைப்பாரும் உளர். ஏகாரம் உடனிகழ்ச்சிப் பொருளில் வந்தது. ‘மற்று’ வினைமாற்றின்கண் வந்தது. இறந்தது தழீஇய எச்சவும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘பிறப்பறுக்கும்’. பிறப்பறுக்கும் என்பதற்கு எழுவாயாக வருவிக்கும் சுட்டுப் பெயர் ‘கண்ணே’ என்ற பொருட் பொருத்த மற்ற சொல்லையே சுட்டு மாகலானும், பற்று அறாத இடத்தே நிலையாமை காணப்படும் என்று கூறியிருத்தலானும், ‘பிறப்பறும்’ என்பதே ஆசிரியர் பாடம் எனக் கொள்ளப்பட்டது.

கருத்து: பற்று இல்லார்க்குப் பிறப்பு இல்லை.

பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு. (320)

பொருள்: (பற்று கொளற்கு) பற்று அற்றான் பற்றினை பற்றுக‡ (வேண்டிய) பொருள்களை அடைவதற்குப் பற்று அற்று நிற்பவனது பற்றுக் கோட்டினைப் பற்றுக ; பற்று விடற்கு(ம்) அப் பற்றை(யே) பற்றுக - உலகப் பொருள்களின் பற்றை விடுவதற்கும் அப் பற்றுக்கோட்டினையே பற்றுக.

அகலம்: பற்றுக் கோடு -பற்றும் கொம்பு. அப் பற்றையே என்பதன் ஏகாரமும், விடற்கும் என்பதன் உம்மையும் செய்யுள் விகாரத்தால் தொக்கன. ‘அப் பற்றை’ என்றமையால், ‘பற்றுக் கொளற்கு’ என்பது சொல்லெச்சமாகக் கொள்ளப்பட்டது. துறவதிகாரத்தின்கண்ணே பொருள்களைக் கொள்ளுதலைக் கூறுவானேன் என்னின், பொருளில் லாதார் துறவார், துறத்தற்கு அவர்பால் ஒன்றும் இன்மையான். பொருள் இல்லாதார் துறக்க வேண்டின், அவர் துறப்பதற்குரிய பொருள்களை முன்னர்க் கொள்ளல் வேண்டும். பற்று என்னும் சொல் மீண்டும் மீண்டும் வருதலால் இது சொற்பொருட்பின் வரு நிலை யணி.

கருத்து: பொருட்பற்றை விடுதற்கும் பொருளைக் கொள்ளுதற்கும் கடவுளைப் பற்றுக.

நிலையாமை

வீட்டியல்
அஃதாவது, முத்தியின் இயல்பு. இதுமுதல் முத்திக்கு நேர் நெறியாகிய ஞானத்தைக் கூறுகின்றார்.

முப்பத்தொன்றாம் அதிகாரம் - நிலையாமை.
அஃதாவது, (உலகப் பொருள்களின் )நிலையாத தன்மை.

நில்லா தவற்றை நிலையின வென்றுணரும்
புல்லறி வாண்மை கடை. (301)

பொருள்: நில்லாதவற்றை -(நிலையாக) நில்லாத பொருள்களை, நிலையின என்று உணரும் - நிலையுடையவை என்று அறியும், புல் அறிவு ஆண்மை -அற்ப அறிவை ஆளுதல், கடை -கடைப்பட்ட செயல் (ஆம்).

அகலம்: நிலையாக நில்லாத பொருள்கள், உலகப் பொருள்கள். கடைப்பட்ட செயலைக் கடை என்றார்.

கருத்து: நிலையில்லாத பொருள்களை நிலையின வென்று உணராதல் மடமை.

கூத்தாட் டவைகுழீஇ யற்றே பெருஞ்செல்வம்
போக்கு மதுவிளிந் தற்று. (302)

பொருள்: பெரும் செல்வம் கூத்து ஆடு அவை குழீஅற்று - பெருஞ்செல்வம் (வருதல்) கூத்தாட்டு அவை கூடினாற் போலும்; போக்கும் அது விளிந்து அற்று‡ (பெருஞ் செல்வம்) போதலும் கூத்தாட்டு அவை (கூத்து முடிந்தவுடன்) போயினாற் போலும்.

அகலம்: குழுவி யற்று என்பது இன்னிசை நோக்கிக் குழீஇ யற்று என நின்றது. குழீஇயற்று, விளிந்தற்று என்பன வினையயச்சத் தொகைகள். அவை முறையே ‘குழீஇயினா லற்று’, ‘விளிந்தா லற்று’ என விரியும். முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘அவைக் குழாத் தற்றே’. அவைக் குழாத்தற்றே என்பது பொருத்தமான பொருள் தாராமையானும், பின்னர் விளிந்தற்று என வருதலானும், குழீஇயற்று என்பதே ஆசிரியர் பாடம் எனக் கொள்க.

கருத்து: செல்வம் வருதலும் போதலும் கூத்தாட்டவை குழுவுதலும் போதலும் போலாம்.

அற்கா வியல்பிற்றுச் செல்வ மதுபெற்றா
லற்குப வாங்கே செயல். (303)

பொருள்: செல்வம் அற்கா(த) இயல்பிற்று - செல்வம் (நிலையாக) நில்லாத தன்மையை யுடைத்து ; அது பெற்றால் ஆங்கே அற்குப செயல் -(ஒருவன்) செல்வத்தைப் பெற்றால் (அதனைப் பெற்ற) அப்பொழுதே (நிலையாக ) நிற்கும் அறங்களைச் செய்க.

அகலம்: அற்குதல் ‡தங்குதல். நிலை பெறுதல்.

கருத்து: செல்வம் நிலை யில்லாதது. அது பெற்றால் உடனே அறஞ் செய்க.

நாளென வொன்று போற் காட்டி யுயிரீரும்
வாள துணர்வார்ப் பெறின். (304)

பொருள்: நாள் என ஒன்று போல் காட்டி - நாள் என ஒரு பொருள் போல் தோற்றிக்கொண்டிருப்பது, உயிர் ஈரும் வாள் - உயிரை (உடம்பினின்று) பிரிக்கும் வாள், அஃது உணர்வார்ப் பெறின்‡நாள் என்பது அறிவுடையாரது ஆராய்ச்சி யைப் பெறுமாயின்.

அகலம்: காட்டி என்பது வழி காட்டி என்பது போல வினையா லணையும் பெயர். நாள் என ஒன்றுபோல் காட்டி என்றமையால், நாள் என்று ஒரு பொருள் இல்லை என்பதும், அது மனத்தின் கற்பனையே என்பதும் பெற்றாம். அஃது என்பது செய்யுள் விகாரத்தால் ஆய்தம் தொக்கு நின்றது. உணர்வாரது ஆராய்ச்சியைப் பெறின் என்பதனை உணர்வார்ப் பெறின் என்றார். அறிவுடையார் ஆராய்ச்சியில் நாள் என்பது ஒரு பொருள் அன்று என்பதும், அது மனத்தின் கற்பனையே என்பதும் விளங்குமாகலான், உணர்வார்ப் பெறின் என்றார். ‘தோற்றஞ்சான் ஞாயிறு நாழிய வைகலுங், கூற்ற மளந்துநுந் நாளுண்ணும்’ என்றார் நாலடியார். மணக்குடவர் பாடம் ‘நாளென்ப தொன்று போல்’. ‘நாள் என ஒன்றுபோல் காட்டி ஈரும் வாளது உயிர்’ என்று கொண்டு கூட்டி, அதற்கு நாள் என்று அறுக்கப்படுவ தொரு காலவரையறை போலத் தன்னைக் காட்டி ஈர்ந்து செல்கின்ற வாளின் வாயது உயிர் என்று விளக்கமும் பொருத்தமும் இல்லாதவாறு பொருள் உரைப்பாரும் உளர். அவர் ‘காட்டி’ என்பதை வினையாலணையும் பெயராகக் கொள்ளாமல் வினையயச்ச மாகக் கொண்டும், ‘அஃது’ என்பது செய்யுள் விகாரத்தால் ஆய்தம் கெட்டு நின்றது என்று கொள்ளாமல் ‘அது’ என்பது குற்றிய லுகரம் அன்றென உரைத்தும் இடர்ப்படுவ ராயினர்.

கருத்து: நாள் உயிரை அறுக்கும் வாள்.

நாச்செற்று விக்குண்மேல் வாராமு னல்வினை
மேற்சென்று செய்யப் படும். (305)

பொருள்: நா செற்று விக்குள் மேல் வாரா (த) முன் - (பேசாத வாறு) நாவைச் செறுத்து விக்கல் மேலே வாராத முன்னர், மேல்சென்று நல்வினை செய்யபடும் - (ஒருவன்) விரைந்து நல்ல வினையைச் செய்ய வேண்டும்.

அகலம்: மேற் செல்லல் - விரைதல். செறுத்தல் - அடக்குதல். வாராத என்பது ஈறு கெட்டு நின்றது.

கருத்து: இளமையிலேயே அறஞ் செய்க.

நெருந லுளனொருவ னின் றில்லை யயன்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு. (306)

பொருள்: நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும் பெருமை - நேற்று உள்ளான் ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும் பெருமையை, இ உலகு உடைத்து -இவ் உலகம் உடையது.

அகலம்: உளன் என்பது குறிப்பு வினையாகலான், அது ‘நேற்று உளன்’, ‘இன்று உளன்’, ‘நாளை உளன்’ என முக்காலத்திலும் வரும். தருமர் பாடம் ‘பெருமை பிறங்கிற் றுலகு’.

கருத்து: உயிர் நிலையற்றது ; ஒரு கணத்தில் நீங்குவது.

ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப
கோடியு மல்ல பல. (307)

பொருள்: ஒரு பொழுதும் வாழ்வது அறியார் கருதுப - (தாம்) ஒரு பொழுதும் வாழ்தலை அறியாதார் எண்ணுவன, கோடியும் அல்ல பல - கோடியும் அல்ல (அவற்றிற்கு மேலும்) பல (எண்ணங்கள்).

அகலம்: ‘எண்பது கோடிநினைந் தெண்ணுவன’ என்றார் ஒளவையார். ஒருபொழுதும் வாழ்வத றியார் (தம் வாழ்நாள்களைக்) கோடியும் அல்ல (அதற்கு மேலும்) பல என்று கருதுவர் என்றும், ஒரு பொழுதும் வாழ்வதறியார் கோடியு மன்றி அதனினும் பலவாய நினைவுகளை நினைப்பர் என்றும் உரைப்பார் சிலர்.

கருத்து: ஒரு பொழுதும் உடம்போடு கூடி உயிர் வாழ்தல் உறுதி இல்லை.

குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே
யுடம்போ டுயிரிடை நட்பு. (308)

பொருள்: உடம்போடு உயிரிடை நட்பு - உடம்புடன் உயிரிடை (உண்டாய) நட்பு (நிலையாமை), குடம்பை தனித்து ஒழியபுள் பறந்தற்று - கூடு (மரத்தின்கண்) தனித்துக் கிடக்கப் பறவை (அதினின்று) பறந்தாற் போலும்.

அகலம்: ‘கூடு புள்ளுடன் தோன்றாமையானும், அதன்கண் அது மீண்டு புகுத லு டைமையானும் உடம்பிற்கு உவமை யாகாமை யறிக’ என்று கூறிக் ‘குடம்பை’ என்பதற்கு ‘முட்டை’ எனப் பொருள் உரைப்பாரும் உளர். அவர் இவ் வதிகாரம் ‘நிலையாமை’ என்பதையும், இக் குறள் உடம்பை விட்டு உயிர் நீங்கும் தன்மை யையே கூறுகின்ற தென்பதையும், உடம்போடு உயிர் தோன்றுத லையாவது, உடம்பினுள் உயிர் மீண்டு புகாமை யையாவது கூற வந்த தில்லை யயன்பதையும் நோக்கிலர். அன்றியும், முட்டையை விட்டு வெளிப்படும் உயிரை அப் பருவத்தில் பார்ப்பு என்று சொல்லுதல் வழக்கே யன்றிப் புள் என்று சொல்லுதல் வழக் கன்று. மேலும், முட்டையை விட்டு வெளிப்பட்டவுடன் பறக்கும் பார்ப்பை நாம் கண்டது மில்லை. கேட்டது மில்லை. கேளாதே வந்து கிளைகளா யிற்றோன்றி, வாழாதே போவரான் மாந்தர்கள் -வாளாதே, சேக்கை மரனொழியச் சேணீங்கு புட்போல யாக்கை தமர்க்கொழிய நீத்து - நாலடியார்.

கருத்து: உயிர் நினைத்த மாத்திரத்தில் உடம்மை விட்டு நீங்கிவிடும்.

உறங்கு வதுபோலுஞ் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. (309)

பொருள்: சாக்காடு உறங்குவது போலும் - இறத்தல் உறங்குதலை ஒக்கும்; பிறப்பு உறங்கி விழிப்பது போலும் - பிறத்தல் உறங்கி விழித்தலை ஒக்கும்.

கருத்து: இறப்பும் பிறப்பும் மாறி மாறி வரும்.

புக்கி லமைந்தின்று கொல்லோ வுடம்பினுட்
டுச்சி லிருந்த வுயிர்க்கு. (310)

பொருள்: உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு - (வளி, அனல், நீர் இம் மூன்றற்கும் சொந்தமாய) உடம்பினுள் ஒதுக்குக் குடியாயிருந்த உயிருக்கு, புகு இல் அமைந் (த) தின்றோ -(நிலையாகப்) புகு(ந்திருக்கு)ம் இல்லம் அமைந்த தின்றோ.

அகலம்: வளி, அனல், நீர் என்பனவற்றை வட நூலார் முறையே வாதம், பித்தம், சிலேற்பனம் என்பர். அம் மூன்றில் ஒன்று வெகுளவே, உயிர் உடம்பை விட்டு ஓடிப்போம் என்ற வாறு. கொல் என்பது அசை. அமைந்த தின்று என்பது செய்யுள் விகாரத்தால் தகரம் கெட்டு நின்றது. அடு + இல் = அட்டில் என்றாயது போல, புகு +இல் = புக்கில் என்றாயது.

கருத்து: வாத பித்த சிலேற்பனங்களில் ஒன்று மிகுந்தால், உடனே உயிர் போய் விடும்.

கொல்லாமை

முப்பதாம் அதிகாரம் - கொல்லாமை
அஃதாவது, (ஓர் உயிரையும்) கொல்லாதிருத்தல்

அறவினை யாதெனிற் கொல்லாமை கோறல்
பிறவினை யயல்லாந் தரும். (291)

பொருள்: அற வினை யாது என்னின் கொல்லாமை -அற செயல் யாது என்றால் (ஓர் உயிரையும்) கொல்லாதிருத்தல் ; கோறல் பிறவினை எல்லாம் தரும் -கொல்லுதல் மறச் செயல் எல்லாவற்றையும் கொடுக்கும்.

அகலம்: கொலையையே செய்யத் துணிந்தவன் மற்றைய பாவங்களை யயல்லாம் செய்வா னாகலான். கோறல் பிறவினை யயல்லாந் தரும் என்றார். பிற வினை எல்லாம் என்பதற்குப் பாவங்கள் எல்லாவற்றின் பயன்களையும் என்று உரைப்பாரும் உளர்.

கருத்து: ஓர் உயிரையும் கொல்லாதிருத்தலே உயர்ந்த அறம்.

பகுத்துண்டு பல்லுயி ரோம்புத னூலோர்
தொகுத்தவற்று ளெல்லாந் தலை. (292)

பொருள்: பகுத்து உண்டு பல் உயிர் (உம்) ஓம்புதல் -(தம் உணவைப் பிற உயிர்களுக்குப்) பகுந்து கொடுத்து (த்தாம்) உண்டு பல உயிர்களையும் பேணுதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை -(அற) நூலோர் (சிறந்த அறங்களென எடுத்துத்) தொகுத்துச் சொல்லியவற்று ளெல்லாம் தலையாய அறம்.

அகலம்: தலையாய அறத்தைத் தலை என்றார். தொகுத்தல் - ஒன்று சேர்த்தல். தொகுத்துச் சொல்லுதலைத் தொகுத்தல் என்றார். முற்றும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது.

கருத்து: பகுத்து உண்டு பல உயிரையுங் காத்தல் தலையாய அறம்.

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று. (293)

பொருள்: ஒன்றாக நல்லது கொல்லாமை - ஒப்பற்றதாக(நிற்கும்) நல்வினை (ஓர் உயிரையும்) கொல்லாதிருத்தல்; அதன்பின் சார பொய்யாமை நன்று - கொல்லாமையின் பின் நிற்கப் பொய்யாமை நன்று.

அகலம்: தள்ள வேண்டிய மறங்களுள் கொலை முதலாவதென்றும் , பொய் இரண்டாவதென்றும் ஈண்டுக் கூறினார். கொள்ள வேண்டிய அறங்களுள் வாய்மை முதலாவ தென்று ‘யாமெய்யாக் கண்டவற்றுள்’ என்னும் தொடக்கத்துக் குறளில் கூறினார். மற்று என்பது அசை. தருமர் பாடம் ‘பின் சாரல்’.

கருத்து: ஒழுக்கங்களில் உயர்ந்தது கொல்லாமை; அதற்கு அடுத்தது பொய்யாமை.

நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங்
கொல்லாமை சூழு நெறி. (294)

பொருள்: நல் ஆறு என படுவது யாது என்னின் - நல்ல நெறி என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது யாது என்றால், யாது ஒன்றும் கொல்லாமை சூழும் நெறி - யாதானும் ஓர் உயிரையும் கொல்லா திருத்தலைச் சூழும் நெறி.

அகலம்: சூழ்தல் -எண்ணுதல்.

கருத்து: ஓர் உயிரையும் கொல்லாதிருத்தலே வீட்டினை அடைதற்கு நல்ல நெறி.

நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் றலை. (295)

பொருள்: நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் - (இல்வாழ்க்கை) நிலையை அஞ்சித் துறந்தாரு ளெல்லாம், கொலை அஞ்சி கொல்லாமை சூழ்வான் தலை - கொலையை அஞ்சி (ஓர் உயிரையும்) கொல்லாதிருத்தலை எண்ணுபவன் தலையானவன்.

அகலம்: துறவு நிலையின்கண் நிற்பான் பெறும் பேறுகளை யயல்லாம் இல்வாழ்க்கைநிலையின்கண் நிற்பான் பெறுவன் என மேலே கூறியிருத்த லானும், இல்வாழ்க்கையை நடாத்தும் திறமை இல்லாத காரணத்தாலேயே பெரும்பாலார் துறத்தாலானும், ‘இல் வாழ்க்கை நிலையை அஞ்சி’ எனப் பொருள் உரைக்கப்பட்டது.

கருத்து: ஓர் உயிரையும் கொல்லாதவன் துறவிகளுள் உயர்ந்தவ னாவன்.

கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாண்மேற்
செல்லா துயிருண்ணுங் கூற்று. (296)

பொருள்: உயிர் உண்ணும் கூற்று‡ உயிரை உண்ணும் கூற்றம், கொல் லாமை மேல் கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல் செல்லாது- கொல்லாமை யாகிய நோன்பைக் கைக்கொண்டு ஒழுகுபவன் வாழும் நாளின் மேல் செல்லாது.

அகலம்: கூற்றை வென்றவர் மார்க்கண்டன், நந்திகேசுரன், சிவேதன். இவர்கள் கூற்றை வென்ற விவரங்களை முறையே கந்த புராணத்திலும், இலிங்க புராணத்திலும், கூர்ம புராணத்திலும் காண்க. கூற்று - எமன் ‡ மரணம்.

கருத்து: கொல்லாமையைக் கைக் கொண்டவனைக் கூற்றுவன் கொல்லான்.

தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி
தின்னுயிர் நீக்கும் வினை. (297)

பொருள்: தன் உயிர் நீப்பினும் - (பிறிது ஓர் உயிரை நீக்காத வழி அது) தன் உயிரை நீக்குமாயினும், தான் பிறிது இன் உயிர் நீக்கும் வினை செய்யற்க - தான் பிறிது (ஒரு) பிராணியின் இனிய உயிரை நீக்கும் செயலைச் செய்யற்க.

அகலம்: தற் காப்பு நிமித்தமும் துறவி பிற உயிரை நீக்கலாகா தென்ற வாறு.

கருத்து: தன்னுயிரைக் கொல்ல வரினும் மன்னுயிரைக் கொல்லற்க.

நன்றாகு மாக்கம் பெறுமெனினுஞ் சான்றோர்க்குக்
கொன்றாகு மாக்கங் கடை. (298)

பொருள்: நன்று ஆகும் ஆக்கம் பெறும் என்னினும் -(கொலையால்) நன்கு வளரும் செல்வத்தைப் பெறுவர் என்றாலும், சான்றோர்க்கு கொன்று ஆகும் ஆக்கம் கடை - சால்புடையார்க்குப் பிற உயிரைக் கொன்று ஆகும் செல்வம் கடைப்பட்டது.

அகலம்: கடைப்பட்டதனைக் கடை என்றார். முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘பெரிதெனினும்’. நன்றாகு மாக்கம் பெரிதெனினும் என்பது பொருத்தமான பொருளைத் தாராமையானும், ‘பெறுமெனினும்’ என்பது ஈண்டு இன்றியமை யாது வேண்டப்படுவதாகலானும், ‘பெறுமெனினும்’ என்பதே ஆசிரியர் பாடம் எனக் கொள்ளப்பட்டது. ‘சான்றோர் பெறும்’ என்பது ‘பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மையில், செல்லா தாகுஞ் செய்யுமென் முற்றே’ என்னும் நன்னூற் சூத்திரத்திற்கு மாறுபடாதோ எனின், அச் சூத்திரம் ‘பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை, அவ்வயின் மூன்று நிகழுங் காலத்துச் செய்யு மென்னுங் கிளவியோடு கொள்ளா’ என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தின் பொருளை உள்ளவாறு உணராது செய்யப் பட்டது என்க. என்னை? தன்மை, முன்னிலை, படர்க்கைப் பன்மைச் சொற்கள் நிகழுங்காலத்துச் செய்யும் என்னும் சொல்லோடு பொருந்தா என்று தொல்காப்பியனார் கூறியிருத்தலான், அம்மூன்றிடத்துப் பன்மைச் சொற்களும் இறந்தகாலத்துச் செய்யும் என்னும் சொல்லோடும், எதிர்காலத்துச் செய்யும் என்னும் சொல்லோடும் பொருந்தும் என்பதை நன்னூலார் உணராது போயினர். செய்யும் என்னும் சொல் தன்மைப் பன்மைச் சொல்லைக் கொண்டு முடிந்ததற்கு உதாரணம் - ‘வையமகளை’ என்று தொடங்கும் புறப்பொருள் வெண்பா மாலைச் செய்யுளில் ‘என்னும் ... யாம் என்பது’. (என்னும் யாம் என்று சொல்லுவம் யாங்கள்) முன்னிலைப் பன்மையில் வந்ததற்கு உதாரணம்‡‘முதுமறை யந்தணிர் முன்னியதுரைமோ’. (உரை மோ-உரையுமோ) - மணிமேகலை‡ காதை 13 - வரி 56. படர்க்கைப் பன்மையில் வந்ததற்கு உதாரணம்‡‘அறிந்தார் வீடெய்தும்’-‘எந்நூற்கள்’ என்னும் தொடக்கத்து அறநெறிச்சாராச் செய்யுள். இவை தவிர இன்னும் எத்தனையோ உதாரணங்கள் உள்ளன. நன்னூலைப் பேரிலக்கணமாகக் கொண்டு கற்ற நூற்பதிப்பாசிரியர் பலர் மேற்கண்ட நன்னூற் சூத்திரத்திற்கு இயையுமாறு பல நூற் பாடங்களைத் திருத்தியுள்ளனர். இது மிக வருந்தத் தக்கது.

கருத்து: கொலையால் ஆக்கம் வருமெனினும் கொலையினைச் செய்யற்க.

கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து. (299)

பொருள்: கொலை வினையர் ஆகிய மாக்கள் - கொலைத் தொழிலின ராகிய மாக்கள், புன்மை தெரிவார் அகத்து வினை புலையர் - கீழ்மைத் தன்மையை அறிவாருள் தொழிற் புலையர் (ஆவர்).

அகலம்: புலை வினையர் -என்பதை வினைப் புலையர் எனக் கொண்டு பொருள் உரைக்கப்பட்டது. இவரை உலகத்தார் கன்ம சண்டாளர் என்பர். மாக்கள் என்றமையால், கொலை வினையர் வடிவால் மக்களே ஆயினும், செயலால் விலங்கை ஒப்பர் என்று கொள்க.

கருத்து: கொலைத் தொழில் புரிபவர் புலையரா வர்.

உயிருடம்பி னீக்கியா ரென்ப செயிருடம்பிற்
செல்லாத்தீ வாழ்க்கை யவர். (300)

பொருள்: செயிர் உடம்பின் செல்லா(த) தீ வாழ்க்கை யவர் - குற்றம் உடம்பினின்று நீங்காத (இரந்துண்ணும்) தீய வாழ்க்கையை உடையவரை, உடம்பின் உயிர் நீக்கியார் என்ப (ஆன்றோர்) - (முற் பிறப்பில்) உடம்பினின்று உயிரை நீக்கியவர் என்பர் ஆன்றோர்.

அகலம்: செயிர் - உறுப்புக்குறைவு அல்லது குட்டம். மணக்குடவர் பாடம்‘ உயி ருடம்பு நீக்கியார்’, ‘செயிருடம்பூண் செய்யாத வாழ்க்கையவர்’.

கருத்து: இப் பிறப்பில் குட்ட நோய் கொண்டு இரப்பவர் முற் பிறப்பில் கொலை செய்தவர்.

துறவறவியல் முற்றிற்று.

இன்னாசெய்யாமை

இருபத்தொன்பதாம் அதிகாரம் - இன்னாசெய்யாமை
அஃதாவது, பிற உயிர்களுக்குத் துன்பங்கள் செய்யாதிருத்தல்.

சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
செய்யாமை மாசற்றார் கோள். (281)

பொருள்: மாசு அற்றார் கோள் -குற்றம் அற்றவரது கோட்பாடு, சிறப்பு ஈனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா செய்யாமை - வீட்டினை நல்கும் செல்வத்தைப் பெறினும் பிறர்க்குத் துன்பங்கள் செய்யாதிருத்தல்.

கருத்து: பிறர்க்கு இன்னா செய்யாமை நல்லவரது கடமை.

கறுத்தின்னா செய்தவற் கண்ணு மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள். (282)

பொருள்: மாசு அற்றார் கோள் - குற்றம் அற்றவரது கோட்பாடு,கறுத்து இன்னா செய்தவன்கண்ணும் மறுத்து இன்னா செய்யாமை-வெகுண்டு (தமக்குத்) துன்பங்கள் செய்தவனுக்கும் திரும்பித் துன்பங்கள் செய்யா திருத்தல்.

அகலம்: தருமர், மணக்குடவர், தாமத்தர் பாடம் ‘செய்தவற் கண்ணும்’. பரிமேலழகர், நச்சர் பாடம் ‘செய்தவக் கண்ணும்’. அகரச் சுட்டு வேண்டாத தொன்றா கலானும், மறுத்து எனப் பின்னர்க் கூறுதலானும், முந்திய மூவர் பாடமே ஆசிரியர் பாடம் எனக் கொள்ளப் பட்டது. செய்தவற் கண்ணும் என்பது வேற்றுமை மயக்கம், ஏழாம் வேற்றுமை யுருபு நான்காம் வேற்றுமைப் பொருளில் வந்தமை யால்.

கருத்து: தமக்குத் துன்பஞ் செய்தவனுக்கும் தாம் துன்பஞ் செய்ய லாகாது.

செய்யார்மற் செற்றார்க்கு மின்னாத செய்தபி
னுய்யா விழுமந் தரும். (283)

பொருள்: செற்றார்க்கும் இன்னாத செய்யார் -(அறிவுடையார்) பகைவர்க்கும் துன்பந் தரும் செயல்களைச் செய்யார், செய்த பின் உய்யா விழுமம் தரும் -(இன்னாத) செய்த பின்னர் (அச் செயல்) தப்ப முடியாத துன்பத்தைத் தரும் (ஆகலான்).

அகலம்: ‘மன்’ என்பது அசை. பரிமேலழகர் பாடம் ‘செய்யாமற்’. தருமர், மணக்குடவர், தாமத்தர் , நச்சர் பாடம் ‘செய்யாமை’. துறந்தார் பிறர்க்கு இன்னா செய்யார் என்பது யாவரும் அறிந்த உண்மை. அதனைச் ‘செய்யாமல்’ என்று விதந்து கூற வேண்டா. பிறர்க்கு யாதொரு தீங்கும் செய்யாதிருக்கத் துறந்தார் மேல் பிறர் செற்றங் கொள்வது இயற்கைக்கு மாறு. ஆகலான், ‘செய்யார்மன்’ என்பதே ஆசிரியர் பாடம் எனக் கொள்க. உய்ய முடியாத விழுமத்தை உய்யா விழுமம் என்றார்.

கருத்து: பிறர்க்கு இன்னா செய்யின் , தமக்கு இன்னா வரும்.

இன்னாசெய் தாரை யயாறுத்த லவர்நாண
நன்னயஞ் செய்து விடல். (284)

பொருள்: இன்னா செய்தாரை ஒறுத்தல் - தமக்குத் துன்பஞ் செய்தவரை ஒறுத்தல், அவர் நாண நல் நயம் செய்துவிடல் - அவர் நாணும்படியாக நல்ல இன்பம் தருஞ் செயல்களைச் செய்து (அவரை விட்டு) நீங்குதல்.

அகலம்: நயம் தருஞ் செயல்களை நயம் என்றார். ஒறுத்தல்- தண்டித்தல். தாமத்தர் பாடம் ‘நன்மையே’.

கருத்து: இன்னா செய்தார்க்கும் இனியவே செய்க.

அறிவினா னாகுவ துண்டோ பிறிதினோய்
தந்நோய்போற் போற்றாக் கடை. (285)

பொருள்: பிறிதின் நோய் தம் நோய் போல் போற்றா(த) கடை - (அறிவுடையார்) பிறிது (ஒர்) உயிரின் துன்பத்தைத் தமது துன்பம் போல் (கருதிக்) காவாத விடத்து, அறிவினான் ஆகுவது உண்டோ-(அவரது) அறிவுடைமையினால் ஆகும் பயன் உண்டோ? (இல்லை).

அகலம்: மணக்குடவர், தாமத்தர் பாடம் ‘தன்னோய்போல்’.

கருத்து : அறிவுடைமைக்கு அழகு பிற உயிர்க்கு இன்னா செய்யாமை.

இன்னா வெனத்தா னுணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கட் செயல். (286)

பொருள்: இன்னா என தான் உணர்ந்தவை - துன்பங்கள் எனத் தான் உணர்ந்தவற்றை, பிறன்கண் செயல் துன்னாமை வேண்டும் - பிறன்மாட்டுச் செய்தலைப் பொருந்தாமை வேண்டும்.

அகலம்: ‘தனக்கின்னா வின்னா பிறர்க்கு’. - பழமொழி நானூறு.

கருத்து: தனக்குந் துன்பந் தரும் செயல்களைத் தான் பிறர்க்குச் செய்யற்க.

எனைத்தானு மெஞ்ஞான்றும் யார்க்கு மனத்தானு
மாணாசெய் யாமை தலை. (287)

பொருள்: எனைத்தானும் எ ஞான்றும் யார்க்கும் - எவ்வளவேனும் எந் நாளும் யார்க்கும் , மாணா மனத்தானும் செய்யாமை தலை - துன்பந்தரும் செயல்களை உள்ளத்தாலும் செய்யாதிருத்தல் தலையாய துறவறம்.

அகலம்: தலை என்பது ஆகு பெயர், தலையாய துறவறத்திற்கு ஆயினமை யால். நச்சர், பரிமேலழகர் பாடம் ‘மனத்தானாம்’. மற்றை மூவர் பாடம் ‘மனத்தானும்’. மனத்தானாம் என்பது பொருத்தமான பொரு ளொன்றையும் தாராமையின், மனத்தானும் என்பதே ஆசிரியர் பாடம் எனக் கொள்ளப் பட்டது.

கருத்து: மனத்தானும் பிற உயிர்க்குத் துன்பஞ் செய்யாமை தலையாய துறவறம்.

தன்னுயிர்க் கின்னாமை தானறிவா னென்கொலோ
மன்னுயிர்க் கின்னா செயல். (288)

பொருள்: தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான்-(பிறன் செய்யும் இன்னா) தன் உயிர்க்குத் துன்பம் தருதலைத் தான் உணர்பவன். மன் உயிர்க்கு இன்னா செயல் என்?-(மற்றை) நிலைபேறுடைய உயிர்களுக்குத் துன்பஞ் செய்தல் யாது காரணம்?

அகலம்: கொல், ஒ என்பன அசைகள்.

கருத்து: துன்பம் எனத் தான் உணர்ந்தவற்றைப் பிற உயிர்க்குச் செய்தல் மடமையே.

பிறர்க்கின்னா முற்பகற் செய்யிற் றனக்கின்னா
பிற்பகற் றாமே வரும். (289)

பொருள்: பிறர்க்கு இன்னா முற் பகல் செய்யின் -(ஒருவன்) பிறர்க்குத் துன்பந் தரும் செயல்களை முற்பகலின்கண் செய்யின், தனக்கு இன்னா தாமே பிற்பகல் வரும் ‡தனக்குத் துன்பங்கள் தாமேயாகப் பிற்பகலின்கண் வரும்.

அகலம்: ஞாயிறு தோன்றியது முதல் பத்து நாழிகை வரையில் முற்பகல் எனவும், அப் பத்து நாழிகை முதல் இருபது நாழிகை வரையில் பகல் எனவும், அவ் விருபது நாழிகை முதல் ஞாயிறு படும் வரையில் பிற்பகல் எனவும் சொல்லப்படும். மணக்குடவர், பரிமேலழகர் பாடம் ‘தமக்கின்னா’. தருமர், மணக்குடவர், தாமத்தர் பாடம் ‘தானே வரும்’. ‘முன்பகல் கண்டான் பிறன்கேடு, தன்கேடு,பின்பகல் கண்டு விடும்’. - பழமொழி நானூறு. ‘தமக்கு’ என்னும் சொல்லால் குறிக்கப்படுவோர் யாவரெனச் சொல்ல இயலாமையின், தனக்கு என்பதே ஆசிரியர் பாடம் எனக் கொள்க.

கருத்து: பிறர்க்குத் துன்பஞ் செய்யின், தனக்குத் துன்பம் தானே வரும்.

நோயயல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர். (290)

பொருள்: நோய் எல்லாம் நோய் செய்தார் மேல ஆம் - துன்பங்களெல்லாம் (பிற உயிர்களுக்குத்) துன்பங்கள் செய்தார் மேலனவாம்; நோய் இன்மை வேண்டுபவர் நோய் செய்யார் - (ஆகலான், தமக்குத்) துன்ப மின்மையை விரும்புவர் பிற உயிர்களுக்குத் ) துன்பம் செய்யார்.

அகலம்: தருமர் பாடம் ‘நோயயல்லா நோய்செய்வார்’.

கருத்து: துன்பமுற வேண்டாதார் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யற்க.

Sunday

வெகுளாமை

இருபத்தெட்டாம் அதிகாரம் - வெகுளாமை
அஃதாவது, வெகுளாதிருத்தல். வெகுளல் -கோபித்தல்.

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பா னல்லிடத்துக்
காக்கிலென் காவாக்கா லென். (271)

பொருள்: செல் இடத்து காப்பான் சினம் காப்பான் - (வெகுளி) செல்லும் இடத்து (செல்ல விடாது) காப்பவன் வெகுளியைக் காப்பவன் (ஆவான்) ; அல் இடத்து காக்கில் என் காவா(த) கால் என்- (வெகுளி) செல்லாத விடத்து (வெகுளியைக்) காத்தால் யாது பயன்? காவாத பொழுது யாது பயன்? (ஒரு பயனும் இல்லை).

அகலம்: செல்லிடமாவது, வெகுளி செல்லக் கூடிய இடம். அஃதாவது, தம்மின் மெலியாரிடம். செல்லாத விடத்து வெகுளியைக் காத்ததாகச் சொல்லல் முடியாது, அவ் விடத்து வெகுளியைச் செலுத்தின் அது தடுக்கப்பட்டுப் போ மாகலான். செல்லாத இடம்‡ தம்மின் வலியாரிடம். தருமர் பாடம் ‘செல்லிடத்திற்’, ‘அல்லிடத்திற்’. மற்றை நால்வர் பாடம் ‘காக்கினென்’. மணக்குடவர் பாடம் ‘காக்கி லென்’. ‘காவாக்கா லென்’ என்று பின்னர்க் கூறியிருத்தலான், ‘காக்கிலென்’ என்னும் மணக்குடவர் பாடமே ஆசிரியர் பாடம் எனக் கொள்ளப்பட்டது.

கருத்து: மெலியாரிடத்து வெகுளியைக் காக்கக் கடவர்.

செல்லா விடத்துச் சினந்தீது செல்லிடத்து
மில்லதனிற் றீய பிற. (272)

பொருள்: செல்லா(த) இடத்து சினம் தீது -செல்லாத இடத்து (த்தன்) வெகுளி (தனக்கு இம்மையில்) தீமையை விளைக்கும் ; செல் இடத்தும் அதனின் தீய பிற இல் - செல்லும் இடத்தும் அது போல (த் தனக்கு மறுமையில்) தீமையைத் தருவன பிற இல்லை.

அகலம்: தன்னின் வலியவனிடத்துச் சினத்தைச் செலுத்தின், அவனால் இம்மையில் தனக்குத் தீங்கு விளையும் எனவும், தன்னின் மெலியவனிடத்துச் சினத்தைச் செலுத்தின், அதனால் மறுமையில் தனக்குத் தெய்வ தண்டனை கிடைக்கும் எனவும் கூறியவாறு.

கருத்து: தன்னின் மெலியவனிடத்தாயினும் வலியவனிடத்தாயினுஞ் செலுத்தப்படும் வெகுளி தனக்குத் தீங்கு பயக்கும்.

மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய
பிறத்த லதனான் வரும். (273)

பொருள்: யார்மாட்டும் வெகுளியை மறத்தல் -(ஒருவன்) எவரிடத்தும் வெகுளியை மறக்கக் கடவன்; அதனான் தீய பிறத்தல் வரும் - வெகுளியால் தீய செயல்கள் பிறத்தல் உண்டாம் (ஆகலான்).

கருத்து: வெகுளி தீமையைத் தருதலான், எவரிடத்தும் வெகுளி கொள்ளற்க.

நகையு முவகையுங் கொல்லுஞ் சினத்திற்
பகையு முளவோ பிற. (274)

பொருள்: நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் -(ஒருவனது) முகச் சிரிப்பையும் அகக் களிப்பையும் அழிக்கும் வெகுளியைப் போல, பிற பகையும் உளவோ ‡மற்றைய பகைகளும் உள்ளனவோ (இல்லை).

கருத்து: வெகுளி தனது சிரிப்பையும் களிப்பையும் கெடுக்கும்.

தன்னைத்தான் காக்கிற் சினங்காக்க காவாக்காற்
றன்னையே கொல்லுஞ் சினம். (275)

பொருள்: தான் தன்னை காக்கின் சினம் காக்க- ஒருவன் தன்னைக் காக்க விரும்பின் (தன்னிடம்) வெகுளி (வராமல்) காக்கக் கடவன், காவா(த) கால் சினம் தன்னையே கொல்லும் - காவாத பொழுது வெகுளி தன்னையே அழிக்கும் (ஆகலான்).

அகலம்: ‘காக்க விரும்பின்’ என்பதைக் ‘காக்கின்’ என்றார்.

கருத்து: ஒருவன் வெகுளி அவனைக் கொல்லும்.

சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி யினமென்னு
மேமப் புணையைச் சுடும். (276)

பொருள்: சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி - வெகுளி என்று சொல்லப் படும் தீ, இனம் என்னும் ஏம புணையை சுடும் - சுற்றம் என்று சொல்லப்படும் காப்புத் தோணியை எரிக்கும்.

அகலம்: தான் சேர்ந்த பொருளை அழித்தலால் ‘தீ சேர்ந்தாரைக் கொல்லி’ என்ற பெயர் பெற்றது. கொல்லி என்பது வினையாலணையும் பெயர். இத் தீ ஏனைய தீப் போலல்லாமல் தன்னைச் சேர்ந்தாரையும் தன்னைச் சேராதாரையும் ஒருங்கு அழிக்கும் என்றார்.

கருத்து: வெகுளி யுடையானை விட்டு அவன் சுற்றத்தாரும் நீங்குவர்.

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று. (277)

பொருள்: சினத்தை பொருள் என்று கொண்டவன் கேடு - வெகுளியை (க் கொள்ளத் தக்க) பொருள் என்று கொண்டவன் அழிவுறுதல், நிலத்து அறைந்தான் கை பிழையாது அற்று - நிலத்தின்கண் (கையால்) அடித்தவனுடைய கை பிழையாதாற் போலும்.

அகலம்: பிழையாதற்று என்பது எதிர்மறை வினையயச்சத் தொகை. அது பிழையாதால் அற்று என விரியும். மணக்குடவர் பாடம் ‘நிலத் தெறிந்தான்’.

கருத்து: வெகுளியைக் கொண்டவன் அழிதல் திண்ணம்.

இணரெரி தோய்வன்ன வின்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று. (278)

பொருள்: எரி இணர் தோய்வு அன்ன இன்னா செய்யினும் -தீயின் சுடர்கள் சுடுதல் போன்ற துன்பங்களை (ஒருவன்) செய்யினும், புணரின் வெகுளாமை நன்று - கூடுமாயின் வெகுளா திருத்தல் நன்மை.

அகலம்: இண ரெரி தோய்வால் உளதாகும் இன்னா வன்ன இன்னாவை இண ரெரி தோய் வன்ன இன்னா என்றார். புணரின் என்பதற்கு அவ் வின்னாவைச் செய்தவர் தன்பால் வந்து சேரின் என்று உரைப்பினும் அமையும்.

கருத்து: தனக்குத் தீங்கு செய்தார்பாலும் வெகுளாதிருத்தல் நன்று.

உள்ளிய வெல்லா முடனெய்து முள்ளத்தா
லுள்ளான் வெகுளி யயனின். (279)

பொருள்: உள்ளத்தால் வெகுளி உள்ளான் என்னின் -(ஒருவன்) மனத்தால் சினத்தை நினையான் என்றால், உள்ளிய எல்லாம் உடன் எய்தும் - (அவன்) நினைத்தன வெல்லாம் உடனே வந்து சேரும்.

அகலம்: மனத்தால் நினைத்தல், வாயாற் சொல்லல் என்பன உலக வழக்கு. தாமத்தர், நச்சர் பாடம் ‘உள்ளிய தெல்லாம்’.

கருத்து: வெகுளி இல்லாதான் விரும்பிய எல்லாவற்றையும் அடைவன்.

இறந்தா ரிறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை. (280)

பொருள்: சினத்தை இறந்தார் இறந்தார் அனையர் -சினத்தின் கண் அளவு கடந்தார் செத்தாரை ஒப்பர்; சினத்தை துறந்தார் துறந்தார் துணை - வெகுளியை விடுத்தவர் துறந்தாரை ஒப்பர்.

அகலம்: சினத்தை என்பது சிங்க நோக்காக ஈண்டு வைக்கப் பட்டிருக் கின்றமையால், அதனை முன்னரும் பின்னரும் கூட்டிப் பொருள் உரைக்கப் பட்டது. முன்னர்க் கூட்டிய விடத்து அதனை வேற்றுமை மயக்கமாகக் கொள்க.

கருத்து: வெகுளியை விட்டார் துறவிகளை ஒப்பர்.

பயனில சொல்லாமை

இருப்பத்தேழாம் அதிகாரம் - பயனில சொல்லாமை.
அஃதாவது, பயன் இல்லாத சொற்களைச் சொல்லாமை.

பல்லார் முனியப் பயனில சொல்லுவா
னெல்லாரு மெள்ளப் படும். (261)

பொருள்: பல்லார் முனிய பயன் இல சொல்லுவான் -(அறிஞர்) பலர் வெறுக்கும்படியாகப் பயன் இல்லாத சொற்களைச் சொல்லுபவன், எல்லாரும் எள்ள படும் - எல்லாராலும் இகழப் படுவன்.

அகலம்: தருமர் பாடம் ‘பயனில் சொல்’. ‘எல்லாரும்’ என்பது மூன்றாம் வேற்றுமைத் தொகை.

கருத்து: பயன் இல்லாத சொற்களைச் சொல்பவன் எல்லாராலும் இகழப் படுவன்.

பயனில பல்லார்முற் சொல்ல னயனில
நட்டார்கட் செய்தலிற் றீது. (262)

பொருள்: பல்லார்முன் பயன் இல சொல்லல் -பலர் முன் பயன் இல்லாத சொற்களைச் சொல்லுதல், நட்டார்கண் நயன் இல செய்தலின் தீது - நட்பினர்மாட்டு (அவர்க்கு) விருப்பம் இல்லாத செயல்களைச் செய்தலினும்தீது.

கருத்து: பலர் முன் பயன் இல்லாத சொற்களைச்சொல்லுதல் நட்டார் விரும்பாத செயல்களைச் செய்தலினும் தீது.

நயனில னென்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கு முரை. (263)

பொருள்: பயன் இல பாரித்து உரைக்கும் உரை - பயன இல்லாத சொற்களை விரித்துப் பேசும் பேச்சு, நயன் இலன் என்பது சொல்லும் - (அவ்வாறு பேசுவோன்) நன்மை இல்லாதவன் என்பதைக் கூறும்.

கருத்து: பயனில சொல்லுவான் நல்லவன் அல்லன் என்று கருதப்படுவான்.

நயன்சாரா நன்மையி னீக்கும் பயன்சாராப்
பண்பில்சொற் பல்லா ரகத்து. (264)

பொருள்: பல்லார் அகத்து பயன் சாரா(த) பண்புஇல் சொல் - பலர் நடுவில் (சொல்லிய) பயன் பொருந்தாத குணமற்ற சொற்கள், நயன் சாரா நன்மையின் நீக்கும் - இன்பம் பொருந்தாதனவாய் (அச் சொற்களைச் சொல்லியவனை) அறத்தினின்று நீக்கும்.

அகலம்: சொல்லிய என்பது அவாய் நிலையான் வந்தது. தருமர், தாமத்தர் பாடம் ‘நயஞ்சாரா’. நச்சர் பாடம் ‘நயஞ்சாரா நன்மையு நீங்கும் பயஞ்சாரா’. மணக்குடவர் பாடம் ‘நீங்கும்’.

கருத்து: பயனில சொல்வார் அறமும் இன்பமும் இழப்பர்.

சீர்மை சிறப்பொடு னீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின். (265)

பொருள்: நீர்மை யுடையார் பயன் இல சொல்லின்-(துறவுத்) தன்மையை யுடையார் பயன் இல்லாத சொற்களைச் சொல்லின், சீர்மை சிறப்போடு நீங்கும்- (அவருடைய) சீரிய ஒழுக்கமும் பெருமையும் (அவரை விட்டு) நீங்கும்.

அகலம்: ‘ஒடு’ உம்மைப் பொருளில் வந்தது.

கருத்து: துறவிகள் பயனில சொல்லின் தமது ஒழுக்கத்தையும் பெருமை யையும் இழப்பர்.

பயனில்சொற் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யயனல். (266)

பொருள்: பயன் இல் சொல் பாராட்டுவானை - பயன் இல்லாத சொற்களைப் பாராட்டுவானை, மகன் என்னல் ‡மனிதன் என்று சொல்லற்க ; மக்கள் பதடி என்னல் - மனிதரில் பதர் என்று சொல்லுக.

அகலம்: பாராட்டுதல் -கொண்டாடுதல். அஃதாவது, பிரியமாகப் பேசுதல். என்னல் இரண்டும் னகர வொற்றுக் கெட்டு நின்றன.

கருத்து: பயனில சொல்லுவான் மக்களுட் பதர்.

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று. (267)

பொருள்: சான்றோர் நயன் இல சொல்லினும் சொல்லுக - (துற வொழுக்கங்களால்) நிறைந்தோர் இன்பம் இல்லாத சொற்களைச் சொல்லினும் சொல்லுக; பயன் இல சொல்லாமை நன்று - பயன் இல்லாத சொற்களைச் சொல்லாதிருத்தல் நன்மை.

கருத்து: துறவிகள் பயனில சொல்லற்க.

அரும்பய னாயு மறிவினார் சொல்லார்
பெரும்பய னில்லாத சொல். (268)

பொருள்: அரு பயன் ஆயும் அறிவினார் - (ஆராய்தற்கு) அரிய பொருளை ஆராயும் அறிவை யுடையவர், பெரு பயன் இல்லாத சொல் சொல்லார் - பெரிய பயன் இல்லாத சொற்களைச் சொல்லார்.

அகலம்: அரிய பொருளாவது, மெய்ப் பொருள்.

கருத்து: மெய்ப் பொருளை ஆராய்வார் பயனில சொல்லற்க.

பொருடீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருடீர்ந்த
மாசறு காட்சி யவர். (269)

பொருள்: மருள் தீர்ந்த மாசு அறு காட்சி அவர் - மயக்கம் தீர்ந்த குற்றமற்ற அறிவினை யுடையார், பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் - பயன் நீங்கிய சொற்களை மறந்தும் சொல்லார்.

அகலம்: தருமர் பாடம் ‘பொய்ச்சார்ந்தும்’. நச்சர் பாடம் ‘பொய்ச்சாந்தும்’. அறு என்பது வினைத் தொகை.

கருத்து: மெய்யறி வுடையார் மறந்தும் பயனில சொல்லார்.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல். (270)

பொருள்: சொல்லின் பயன் உடைய சொல்லுக - (ஒருவன்) பேசின் பயனுடைய சொற்களைச் சொல்லுக; சொல்லில் பயன் இல்லா(த) சொல் சொல்லற்க - சொற்களுள் பயன் இல்லாத சொற்களைச் சொல்லற்க.

அகலம்: இல்லாத என்பது ஈறும் லகர வொற்றும் கெட்டு நின்றது.

கருத்து: பயனில சொல்லற்க; பயனுடைய சொல்லுக.

வெஃகாமை

இருபத்தாறாம் அதிகாரம் - வெஃகாமை.
அஃதாவது, பிறரது பொருளை விரும்பாமை.

நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றுங்
குற்றமு மாங்கே தரும். (251)

பொருள்: நடுவு இன்றி நன் பொருள் வெஃகின் -(ஒருவன்) நடுவு நிலைமை இல்லாமல் (பிறரது) நல்ல பொருளை (க் கவர) விரும்பின், (அது) குடி பொன்றும் குற்றமும் தரும் - அது தனது குடும்பத்தோடு அழிவதற்கு ஏதுவாகும் குற்றமும் தரும்.

அகலம்: குற்றமும் என்பதன் உம்மை இழிவு சிறப்பு. குடி பொன்றுவதற்கு ஏதுவாய குற்றத்தைக் குடிபொன்றும் குற்றம் என்றார். ‘ஆங்கு’, ‘ஏ’ என்பன அசைகள். தருமர் பாடம் ‘நடுவன்றி’. முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘குடிபொன்றி’. இப் பாடத்தை ஆசிரியர் பாடமாகக் கொண்டு, பொன்றி என்னும் தன்வினை பொன்றுவித்து என்னும் பிறவினைப் பொருள் தந்து நின்றது என்பர் தொல்காப்பியர் சூத்திர விருத்திகாரர்.

கருத்து: பிறர் பொருளைக் கவர விரும்புவோன் தன் குடும்பத்தோடு அழிவன்.

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவின்மை நாணு பவர். (252)

பொருள்: நடுவு இன்மை நாணுபவர் - நடுவு நிலைமையின்மைக்கு அஞ்சு கின்றவர், படு பயன் வெஃகி பழி படுவ செய்யார் - அழியும் பயனை விரும்பிப் பழியின்கண் படுஞ் செயல்களைச் செய்யார்.

அகலம்: தருமர், மணக்குடவர், தாமத்தர் பாடம் நடுவன்மை. முந்திய குறளில் ‘நடுவின்றி’ என ஆசிரியர் கூறி யிருத்தலின், ‘நடுவின்மை’ என்பதே அவர் பாடம் எனக் கொள்ளப் பட்டது.

கருத்து: நடுவு நிலைமையைக் கைக் கொண்டவர் பிறரது பொருளை வெஃகார்.

சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர். (253)

பொருள்: சிறு இன்பம் வெஃகி அறன் அல்ல செய்யார் - (பொருளால் வரும்) சிற்றின்பத்தை அவாவி அறம் அல்லாத செயல்களைச் செய்யார், மற்று இன்பம் வேண்டுபவர் -பேரின்பத்தை அவாவுகின்றவர்.

அகலம்: அறம் அல்லாத செயல்கள் -மறங்கள். சிறிது நேரத்தில் கழியும் இன்பத்தைச் சிற்றின்பம் என்றார். சிறு+இன்பம்=சிற்றின்பம். ஏகாரம் ஈற்றசை. தருமர் பாடம் ‘சிற்றின்பம் வேண்டி’.

கருத்து: சிற்றின்பங்களை வெஃகி மறங்கள் செய்யார் பேரின்பம் வேண்டு பவர்.

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர். (254)

பொருள்: புலம் வென்ற புன்மை இல் காட்சியவர் -ஐம் புலங்களையும் வென்ற புன்மை இல்லாத மெய்யறிவுடையார், இலம் என்று வெஃகுதல் செய்யார்-(யாம் பொருள்) இல்லேம் என்று (பிறர் பொருளை) விரும்புதல் செய்யார்.

அகலம்: ஐம்புலங்களாவன -சுவை, ஒளி,ஊறு, ஓசை, நாற்றம்.

கருத்து: வறுமை காரணமாகப் பிறர் பொருளை வெஃகார் மெய்யறி வுடையார்.

அஃகி யகன்ற வறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின். (255)

பொருள்: வெஃகி யார்மாட்டும் வெறிய செய்யின் -பொருளை விரும்பி எவரிடத்தும் வெறிச் செயல்களைச் செய்யின், அஃகி அகன்ற அறிவு என் ஆம் - நுண்ணியதாய் (நூல்களிற் சென்று) விரிந்த அறிவு யாது பயனைச் செய்யும்? (ஒரு பயனையும் செய்யாது).

அகலம்: வெறிச் செயல்கள்- மூர்க்கச் செயல்கள். தருமர் பாடம் வெரிய செயின்.

கருத்து: பிறர் பொருளை வெஃகி வெறிச் செயல்களைச் செய்தல் அறி வில்லாதார் செயல்.

அருள்வெஃகி யாற்றின்க ணின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும். (256)

பொருள்: அருள் வெஃகி ஆற்றின்கண் நின்றான் -அருளை (அடைய) விரும்பி (அதற் குரிய துறவு) நெறியின்கண் நின்றவன், பொருள் வெஃகி பொல்லாத சூழ கெடும் -(பிறன்) பொருளை (அடைய) விரும்பித் தீய வினைகளை எண்ணக் கெடுவான்.

கருத்து: துறவி பிறன் பொருளை வெஃகின் அழிவன்.

வேண்டற்க வெஃகியா மாக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன். (257)

பொருள்: வெஃகி ஆம் ஆக்கம் வேண்டற்க -(ஒருவன் பிறன் பொருளை) விரும்பி (அதனால்) ஆகும் செல்வத்தை விரும்பற்க, விளைவயின் ஆம் பயன் மாண்டற்கு அரிது -(வெஃகல்) விளையும் இடத்து உண்டாகும் பயன் மாட்சிமைப் படுதற்கு அரியது (ஆகலான்).

அகலம்: மாட்சிமைப் படுதற்கு அரியது -பெருமைப்படுதற்கு முடியாதது.

கருத்து: பிறன் பொருளைக் கவர விரும்புதல் பின்னர்ச் சிறுமையைத் தரும்.

அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள். (258)

பொருள்: செல்வம் அஃகாமைக்கு (வழி) யாது என்னின் - செல்வம் சுருங்காமைக்கு வழி யாது என்றால், பிறன் கை பொருள் வெஃகாமை வேண்டும் -பிறனது கைப் பொருளைக் கவர விரும்பாதிருத்தல் வேண்டும்.

அகலம்: செல்வத்திற்கு என்பதி லுள்ள நான்காம் வேற்றுமை யுருபைப் பிரித்து, அஃகாமை என்பதனுடன் சேர்த்துப் பொருள் உரைக்கப்பட்டது. வழி என்பது அவாய் நிலையான் வந்தது.

கருத்து: பிறன் பொருளை வெஃகாதான் செல்வம் மேன்மேலும் வளரும்.

அறனறிந்து வெஃகா வறிவுடையார்ச் சேருந்
திறனறிந் தாங்கே திரு. (259)

பொருள்: அறன் அறிந்து வெஃகா (த) அறிவுடையார்‡அற நூலை அறிந்து (பிறன் பொருளை) விரும்பாத அறிவுடையவரை, திறன் அறிந்து திரு சேரும்- (அவர்) செவ்வி தெரிந்து திருமகள் சேர்வள்.

அகலம்: செவ்வி -சமயம். ஆங்கு, ஏ என்பன அசைகள்.

கருத்து: பிறன் பொருளை வெஃகாரைத் திருமகள் சேர்வள்.

இறலீனு மெண்ணாது வெஃகல் விறலீனும்
வேண்டாமை யயன்னுஞ் செருக்கு. (260)

பொருள்: எண்ணாது வெஃகல் இறல் ஈனும் - (பின் விளையும் பயனை) எண்ணாமல் (பிறன் பொருளைக்) கவர விரும்புதல் அழிவைக் கொடுக்கும்; வேண்டாமை என்னும் செருக்கு விறல் ஈனும் -(பிறன் பொருளை ) விரும்பாமை என்னும் செருக்கு வெற்றியைக் கொடுக்கும்.

அகலம்: தருமர் பாடம் ‘இறலீனு மின்னாத’. முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘வெஃகின்’. வெஃகின் என்னும் பாடத்தைக் கொள்ளுங்கால், ‘அது’ என்னும் தோன்றா எழுவாயை வருவிக்க வேண்டிய திருத்தலானும், ‘வேண்டாமை யயன்னுஞ் செருக்கு விறலீனும்’ என்று கூறியிருத்தல் போல ‘வெஃகல் இறலீனும்’ என்று கூறுதலே பொருத்த மாகலானும், ‘வெஃகல்’ என்பதே ஆசிரியர் பாடம் எனக் கொள்க.

கருத்து: பிறன் பொருளை வெஃகுதல் அழிவைத் தரும். வெஃகாமை வெற்றியைத் தரும்.