Monday

வ.உ.சிதம்பரனாரின் அரசியல் பெருஞ்சொல் - 1

சேலம் அரசியல் மகாநாட்டில்

எனது பெருஞ்சொல்

மூன்றாவது அரசியல் மகாநாடு

கடவுள் வணக்கம்

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்

மடிதெற்றுத் தான்முந் துறும்.

என்றபடி எளிமை யுற்றிருக்கா நின்ற எனது நாட்டினை வலிமைப் படுத்துவேன் என்று ஊக்கும் எனக்கு எல்லாம் வல்ல இறைவன் தனது  உடையை இறுக உடுத்துக்கொண்டு எனது வழிகாட்டியாக என் முன் செல்வானாக.

செய்ந்நன்றியறிதல்

எழுமை ஏழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்

விழுமம் துடைத்தவர் நட்பு

என்றபடி என் நாட்டினை மேம்படுத்தக் கருதி யான் ‘சுதேசிய நீராவிக் கப்பல் சங்க’த்தை நிறுவிய காலத்தில் பல்லாயிரக்கணக்காகப் பொருள் அளித்துத் துணைபுரிந்தும் அவ்வூக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்து வாடிய காலத்தில் வேண்டியவற்றை ஈந்து என் வாட்டத்தைக் களைந்தும், தேசாபிமானமும் என்பால் உளதோ என்று சிலர் ஐயமுறும் இக்காலத்தில் தேசாபிமானத்திற்கே உறைவிடம் என்று சொல்லும்படியான சிறப்பு வாய்ந்த சேலம் ஜில்லாவாசிகள் கூடிய இம்மகாநாட்டின் தலைமைப் பதவியை நல்கி மேன்மையளித்தும், நீங்கள் எனக்குச் செய்த நன்றியை எழுமை எழுபிறப்பும் உள்ளுவேனாக.

என்னைப் பற்றிச் சில சொற்கள்

கல்கத்தா நகரத்தில் நடந்த விசே­ காங்கிரஸ் மகாநாட்டில் என் தேசீயக் கோட்பாடுகளுக்கு முற்றிலும் மாறான கோட்பாடுகள் அடங்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உடனே யான் சென்னைக்கு வந்து, திலகர் சுயாட்சி சங்கத்தின் விசே­ கூட்டம், ஒன்றைக் கூட்டி மேற்கண்ட விசே­க் காங்கிரஸ் மகாநாட்டின் தீர்மானங்களை எல்லாம் கண்டித்து தீர்மானங்களை நிறைவேற்றிப் பத்திரிகைகளிற் பிரசுரித்துவிட்டு யான் காங்கிரஸினின்று விலகி இதுகாறும் ஒடுங்கியிருந்தேன். 

என் கோட்பாடுகளுக்கு மாறான நீதி ஸ்தல பஹிஸ்காரம், கலாசாலை பஹிஸ்காரம், சட்டசபை பஹிஸ்காரம் முதலிய பஹிஸ்காரங்களெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நீங்கிக் காங்கிரஸ் மகாசபை, தனது கல்கத்தா விசே­ மகாநாட்டிற்கு முன்னிருந்த நிலைமைக்கு வந்துவிட்டபடியால் யான் திரும்பிக் காங்கிரஸில் புகலாம் என்று நினைத்தேன்.  

என்னைப் போல காங்கிரஸை விட்டு விலகி நின்ற எனது பிராமணரல்லாத சகோதரர்களில் உண்மையான தேசாபிமானிகள் சிலர் கோவை நகரில் ஒரு விசே­ மகாநாடு கூட்டிப் பிராமணரல்லாதார்களுடைய தேச சேவைக்குக் காங்கிரஸ் மகாசபையைக் கைப்பற்றி ஒரு கருவியாக உபயோகித்தல் இன்றியமையாததென்று தீர்மானித்தார்கள்.

எனக்கும் என் தேசத்திற்கும் நல்லகாலம் பிறந்துவிட்டதென்று கருதினேன். சென்ற பல ஆண்டுகளாக ஒடுங்கியிருந்த யான் எவ்வாறு வெளிவருவதென்று சிந்தித்துக் கவன்று கொண்டிருந்தேன்.

உடுக்கை யிழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு

என்றபடி எனது நண்பர்களாகிய நீங்கள் உங்களுடைய இம் மகா நாட்டிற்குத் தலைமை வகிக்க வேண்டுமென்று எனக்குக் கட்டளை இட்டீர்கள். அக்கட்டளை எனக்கு ‘காலத்தினாற் செய்த நன்றி’யும் ‘பழம் நழுவிப் பாலில் விழுந்தது’ போலும், ஆயிற்று.

‘தேச அரசாட்சியை மீட்பதற்காக தேச ஜனங்கள் சாத்வீக எதிர்ப்பைக் கைக்கொண்டு போராடும் காலத்தில் தேசாபிமானம் இல்லாது புறங்காட்டி ஓடுகின்றீரே’ என்று என்னிடம் கேட்ட ஒரு பாரிஸ்டர் புன்மொழியும் ‘இராஜாங்கத்தாரிடம் கைக்கூலி பெற்றுத் தேசத் துரோகம் செய்து கொண்டிருக்கிறான் சிதம்பரம்பிள்ளை’ என்று பொருள்படும்படி எழுதிய ஒரு பத்திரிகையாசிரியர் புன்மொழியும் இன்றும் என்னால் மறக்க முடியவில்லை. 

தேசாபிமான ஒளி நாளுக்கு நாள் வளர்வதேயன்றிக் குறைவதும் அவிவதும் இல்லை. ‘விளக்குப் புகவிருள் சென்றாங்கொருவன் தவத்தின் முன் நில்லாதாம் பாவம்’ என்றபடி தேசாபிமான ஒளிமுன் தேசத்துரோகம் இருள் நில்லாது. இவ்வுண்மையினை அவர் அறிவாராக.

ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்

தாக்கற்குப் பேருந் தகைத்து.

என்று சிலர் என் சென்ற கால ஒடுக்கத்தைப் பற்றிக் கூறும் உயர்மொழியும், ‘பிராமண அபிமானி’ என்று பிராமணரல்லாத சிறுவர் சிலராலும், ‘வஞ்சக சொரூபி’ என்று பிராமணர் ஒருவராலும் அநியாயமாகப் பழிக்கப்பெற்ற ஸ்ரீதிலகருடைய சீடன் வெளிவந்துவிட்டான் என்று பலர் பேசும் உயர் மொழியும் என்னைச் சேரும்படியான நற்காலம் வந்ததற்காக யான் பெரிதும் அக மகிழ்கின்றேன். 

அந்நற்கால வரவிற்குக் காரணஸ்தர்களாயுள்ள உங்கள் எல்லோரையும் வணங்குகின்றேன்.

அவையடக்கம்

இது போன்ற மகாநாடுகளில் தலைமை வகிக்கும் பெரியார் ஒவ்வொரு வரும் ‘பெருமை பெருமிதமின்மை’, ‘பணியுமாம் என்றும் பெருமை’ என்ற படி தாம் அம்மகாநாட்டின் தலைமை வகித்தற்கு வேண்டிய அறிவும் ஆற்றலும் இல்லாதவரென்று தமது ‘பெருமிதமின்மை’யைக் கூறி யார் யார்க்கும் தாழ்ச்சி சொல்லிப் ‘பெருமையும்’ ‘பெருஞ்சுட்டும்’ பெறுவர். 

பெரியார்க்கு இலக்கணம் பெருமிதமின்மை கூறலும், யார்யார்க்கும் தாழ்ச்சி சொல்லலும் என்றால், சிறியார்க்கு இலக்கணம் பெருமிதம் கூறலும், யார் யார்க்கும் உயர்ச்சி சொல்லலும் என்பது சொல்லாமலே விளங்கும். 

அது பற்றியன்றோ  ‘சிறுமை பெருமிதம் ஊர்ந்துவிடும்’ எனவும், ‘சிறுமை அணியுமாம் தன்னை வியந்து’ எனவும் கூறியுள்ளார் நம் பெரியார். 

அவர் வாக்கைப் பின்பற்றிச் சில காரணங்கள் கூறி இம்மகாநாட்டின் தலைமை வகித்ததற்கு யான் தகுதி யுடையோன் என்பதை நிருபிக்கின்றேன். 

இம்மகாநாடு இந்தியன் நே­னல் காங்கிரசின் ஒரு கிளை. யான் ஒரு இந்தியன். இது சிறந்த தேசாபிமானிகள் கூடியுள்ள மகாநாடு. 

யானும் தேசாபிமானி என்று சொல்லிப் பெருமை பாராட்டுகின்றவன். 

இம்மகாநாட்டிற் குழுமியள்ளோரிற் பெரும்பாலார் பிராமணரல்லாதார். யானும் ஒரு பிராமணரல்லாதான். 

இந்த ஜில்லா சிறந்த ஒரு தமிழ்நாடு. யானும் சிறந்த ஓர் தமிழன். இம்மகாநாட்டில் முதன்மையாக நிற்போர் வருடக்கணக்கில் சிறைத் தீர்ப்புப் பெற்று வருடக்கணக்கில் சிறையில் வசித்தவர். யானும் ஏககாலத்தில் நடைபெறும் இரண்டு இருபது வருடங்கள் சிறைத் தீர்ப்புப் பெற்று ஒரு நாலரை வருடம் சிறையில் வசித்தவன். 

இம்மகாநாடு உங்கள் எல்லோராலும் மிக நேசிக்கப்பெற்றது. யானும் உங்களால் மிக நேசிக்கப்பெற்றவன். 

உங்களிற் பலர் உழவும், உபகாரமும் செய்கின்ற உண்மை வேளாளர். யானும் ஜாதி மாத்திரையில் ஒரு வேளாளன். 

உங்களிற் பலர் பலமில்லாத பிற ஜாதியாரைத் தாழ்த்துதலை இயற்கையாக கொண்டுள்ள ஜாதியாரென்று உண்மை தேசாபிமானிகளால் பழிக்கப் படுகின்றவர். யானும் அத்தன்மையான ஜாதியானென்று உண்மைத் தேசாபிமானிகளால் பழிக்கப்படுகின்றவன்.

இப்பல ஒற்றுமைகளால் யான் இம்மகா நாட்டில் தலைமை வகித்ததற்குத் தகுதியுடையோன். 

ஆயினும், பல வி­யங்களில் என் அபிப்பிராயமும் உங்கள் அபிப்பிராயங்களும் மாறுபடலாம். என் அபிப்பிராயத்தை நீங்கள் கேட்டு, உங்கள் அபிப்பிராயங்களைத் தெரிவித்த பின்னர் யான் எனது அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்ளுதல் கூடும். 

ஆதலால் யான் சொல்பவற்றைப் பொறுமையோடு கேட்கும்படியாக உங்களை மிக  வணக்கத்தோடு பிரார்த்திக்கிறேன்.

No comments:

Post a Comment