Tuesday

வேதியன் பிள்ளைக்கு வ.உ.சி. எழுதிய கடிதம்

 வேதியன் பிள்ளைக்கு கோவில்பட்டியிலிருந்து 28.03.1929 ல் பெரியவர் வ.உ.சி. எழுதிய கடிதம்:


அன்பார்ந்த தம்பியவர்களே,

நீங்கள் மார்ச் மாதம் 8 –உ எழுதியனுப்பிய கடிதம் வரப்பெற்றேன். அதிற்கண்ட செய்திகளைப் பார்க்குந்தோறும் எனக்கும் என் மனைவிக்கும் மிகுந்த துக்கம் உண்டாகிறது.

சென்ற 2,3 வருஷங்களுக்குள் லைப் அஷூரன்ஸ் கம்பெனியிலிருந்து எனக்கு கிடைத்த சுமார் ரூபா இரண்டாயிரமும் செலவாகித் தமிழ்ப் பண்டிதர் சுப்பிரமனியபிள்ளையவர்களிடம் பிராம்சரி நோட்டின் பேரில் வட்டிக்கு ரூபா 250.00 ம் இவ்விடத்திலுள்ள அள. சித. அள. வட்டக்கடையில் 11/4 வட்டிக்கு ரூ 500.00 ம் கடன் வாங்கியிருக்கிறேன். முந்திய கடன்கள் வேறு இருக்கின்றன். எனது வக்கீல் வரும்படி வக்கீல்கள் மிகுதியாலும் லா டெலிட்டுகள் மிகுதியாலும் மிகக் குறைந்து விட்டது.

என் ஸ்வாதார சொத்துக்கள் அடமானக் கடனுக்குட்பட்டிருக்கின்றன. தங்கள் கடிதம் வந்ததும் முதல் வட்டிக்காவது வட்டக் கடையில் கடன் வாங்கலாமென்று முயற்சித்தேன். என் நிலைமைகளையும், என் முதுமையையும் அறிந்தவர்களாயிருக்கிறபடியால் , எனக்கும் கடன் கொடுக்க இஷ்டமில்லாமல் “பணம் இல்லை” என்ற பொய்க் காரணத்தைச் சொல்லி விட்டனர். நமது மூத்த மகளைச் சென்ற வருஷத்தில் ஒரு B.A.B.L. க்கு பெண் கேட்டனர். ரூ 1500.00 க்கு நகைகள் போட வேண்டுமென்கின்றனர். அதற்குச் சக்தியில்லாமல், அம் மாப்பிள்ளைக்குக் கொடுக்க நான் இசைய வில்லை. இப்பொழுதும் சில மாப்பிள்ளை வீட்டார் பெண் கேட்கத் தயாராகின்றனர். இப்போது ஞானம்பாளிடமிருக்கிற சுமார் ஆயிரம் ரூபா நகைகளுக்கு மேல் என்னால் போட முடியாதென்பதைத் தெரிந்து என்னிடம் வராமல் இருக்கின்றனர். 3 ரூபா, 2 ரூபா, 1 ரூபாவுக்குச் சில சமயங்களில்  அரிசி வாங்க வேண்டியதாகப் பொருட் கஷ்டம் ஏற்படுகின்றது. இந்த நிலைமையில் நான் என்ன செய்யக் கூடும்.! இது நிறக.

ஒரு வாரத் தமிழ்ப் பத்திரிக்கை தொடங்குவதற்குரிய விளம்பரம் முதலியன வெளிப்படுத்தி இலங்கைக்கும், பர்மாவுக்கும் எனது ஏஜெண்டாகக் தாங்கள் போய்ச்  சந்தாதாரர்களும், நன்கொடைகளும் சேர்த்து வந்து என் பெயரால் பத்திரிக்கையைத் தாங்கள் நடத்தலாமா என்று ஆலோசனை செய்யுங்கள். மேற்படி இரண்டு நாடுகளிலும் என் பெயருக்குக் கொஞ்சம் மதிப்பு உண்டு. அங்கு போவதற்குரிய செலவுக்கு என் செலவோடு செலவாகப் பணம் தருகிறேன். அங்கு தக்க உத்தியோகம் கிடைத்தாலும் , அதனை தாங்கள் பெறலாம். எனக்கு இன்ன செய்வதென்று ஒன்றும் தோன்ற வில்லை. இந்தக் கடிதம் எழுதவும் மனம் இல்லை. தங்கள் கடிதத்திற்கு பதில் எழுதாமல் இருக்கவும் முடியவில்லை. அதனால் இதனை எழுதினேன். நமது சகோதரர் ஸ்ரீமான் C. விருத்தாசலம் பிள்ளையவர்கள் சவுக்கியமாயிருக்கிறார்களா!

கடவுள் துணை

வ.உ.சிதம்பரம்.

இந்தக் கடிதம் 1960  “ அமுதசுரபி “ மாத இதழில் வெளி வந்ததையடுத்து வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர். ஆ.இரா. வேங்கடாசலபதி அவர்கள் தொகுத்த வ.உ.சி. கடிதங்கள் (1902 – 1936)  என்ற பேரில் சேகர் பதிப்பகம் மூலம் 1984 ம் ஆண்டு இந்த நூலினை கொண்டு வந்துள்ளார்.

என் கருத்து:

இந்தக் கடிதத்தினை  தட்டச்சு செய்த போது என்னை மீறி கண்ணீர் வருவதை தடுக்க என்னால் இயலவில்லை. ஒரு பக்கம் சிறைக்குப் போய் வந்ததால் அன்றைய காலத்தின் சமூக புறக்கணிப்பு, தன்னுடைய மகளை வரதட்சனை கொடுக்க முடியாமல் அதற்கு தகுந்த மாப்பிள்ளை கிடைக்கமாட்டார்களா என்ற அவரது எதிர்பார்ப்பு, அவரிடம் பணம் கொடுத்தால் வராது என்பதை அவரது வயோதிகத்தை குறிப்பிடுவது இதற்கிடையேதான் கோவில்பட்டியில் வசித்த காலத்தில் தொல்காப்பியம் – இளம் பூரணம்- பொருளதிகாரம் ( அகத்திணையியல், புறத்திணையியல் 2ம் பதிப்பாக வெளிவருகிறது (1928)), தொல்காப்பியம் – எழுத்ததிகாரம் (1928), எந்த மனநிலையில் தமிழுக்கும் பணியாற்றி வந்துள்ளார். பெரியவருடைய இந்த கடிதம் அவர் எழுதிய வெண்பாவை மீண்டும் உங்களுக்கு ஞாபகப் படுத்துகிறேன்.

வந்த கவி ஞர்க்கெல்லாம் மாரியெனப் பல்பொருளும்

தந்த சிதம்பரமன தாழ்ந்தின்று சந்தமில் வெண்

பாச்சொல்லிப் பிச்சைக்குப் பாரெல்லாம் ஓடுகிறான்

நாச்சொல்லும் தோலும் நலிந்து.


எல்லாரும் கைவிட்டார் ஏந்திழையும் துன்புற்றாள்

வல்லாரும் வல்லுநரும்  மாநிலத்துச் - செல்லா

திவன் பேச் சினியென் றென்னை யிகழ்ந்தார்

என் மெயத் தவன் பூமி நாதன் தடத்து

இந்த கடிதத்தை தட்டச்சிட்டப் போது பெரியவர் வ.உ.சி. எழுதிய கண்ணீர் வரக்கூடிய இந்த வெண்பாவும்  மனதிற்குள் வந்து உருக்குலைக்கிறது.

No comments:

Post a Comment