Tuesday

வ.உ.சி. மேடைப் பேச்சினை நேரில் கண்ட வையாபுரி பிள்ளை

 பெரியவர் மேடைப் பேச்சினை  நேரில் கண்ட வையாபுரி பிள்ளை- 2


தேசபக்தர் சிதம்பரம் பிள்ளை திருநெல்வேலிக்கு வந்து கீழ ரத வீதியில் அம்மன் சன்னதிக்கு எதிரே பேசப் போகிறார் என்று ஒரு வதந்தி.

குறித்த நேரத்திற்கு முன்பே ஜனங்கள் பெருந்திரளாக கூடியிருந்தார்கள். நானும் இந்து கலாசாலையிலிருந்து நேரே போய்ச் சேர்ந்தேன். குறித்த நேரம் கடந்து விட்டது. ஆனால் ஜனங்கள் காத்துக் கொண்டிருந்தார்களே யல்லாமல் கலைந்து போகவில்லை. சுமார் ஆறு மணிக்கு மேல் வ.உ.சி. வந்து சேர்ந்தார்.

அவரைப் பார்த்தவுடன் முதலாவது இவர் என்ன பேச முடியும் என்றுதான் நினைத்தேன். ஆனால், அவர் தொடங்கிய சிறிது நேரத்திற்கெல்லாம் விசயங்களைத் தெளிவாக எடுத்துச் சொன்ன முறை என்னை வசீகரித்தது.

அன்னிய அரசாங்கத்தினர் நாம் சிறிதும் முன்னேறவொட்டாத படி வாணிகம் முதலியன புரிந்து, நம்நாட்டுச் செல்வத்தைச் சுரண்டிகொண்டு போவதைக் குறித்து விஸ்தராமாகப் பேசினார்.ஒவ்வொருவனும் தேசாபிமானமுடையவனாக இருத்தல் வேண்டும் என்று வற்புறுத்தினார்.

இதைப் பற்றி பேசும்பொழுது அவர் தம்மையே மறந்து பரவசமாய் நின்று கேட்போர் உள்ளத்தை நேரடியாய்த் தாக்கினார் என்றுதான் சொல்ல வேண்டும். சுமார் ஒரு மணி நேரம் பேசியிருப்பார். கேட்ட மக்கள் அனைவரும் மிக்க குதூகலமுற்றனர்.

No comments:

Post a Comment